28.2.11

மாயச் சொல்


நன்றாய் நினைவிருக்கிறது
அந்த மந்திரச்சொல்லை
நான் மறந்தது.

இப்படி ஒரு மன்றாடல்
நிகழக்கூடுமெனத் 
தெரியாது போயிற்று.

இருந்த சொற்களுக்குள்
மூடப்பட்ட கதவுகளுக்கான
சொல்லைத் தேடியபோது
தெரிந்தது கொண்டேன்
நான் தொலைத்தது எதுவென.

மிகத் துயரமானது
திறக்க வழியற்ற
ஒரு கதவின் முன்
குருதி கசிய
மண்டியிட்டுக் காத்திருப்பது.

காத்திருக்கிறேன் 
நெடுநாட்களாய்
குகையின் உட்புறம்
வாயில் திறக்கவிருக்கிற
மாயச்சொல்லுக்காய்.

27.2.11

விடைபெறுகிறேன்


எழுதப் போவதில்லை இனி இந்த மாதம்.
என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டேன்.
என் மனதும் சரியில்லை.
எல்லோருக்கும் என் நன்றிகள்.

கூடு



I
செத்து விடாது வாழ்பவனுக்கும்-
சாகும்வரை வாழ்பவனுக்கும்-
செத்த பின்னும் வாழ்பவனுக்கும்-
நடுவில் நுரைக்கிறது
மரணமில்லாப் பெருவாழ்வு.

II

கூடற்ற பறவைகளின்
எச்சத்தில் எப்போதும்
காத்திருக்கிறது ஒரு வனம்.
வளர்ந்த பின்
வெட்டிவீழ்த்த
எப்போதும் ஓங்கியிருக்கிறது
ஒரு கோடரி.

26.2.11

முடிச்சு



I
கண்ணாடியின்றி
வந்தது நீ.
அடையாளம் தெரியாது
குழம்பியது நான்.

II

எது மிக விருப்போ
அதைத் தொலைவிலும்
எது மிகத் தொலைவோ
அதை விருப்பெனவும் வை.
ஒரு ஜதை செருப்புகளைப்
போலல்ல
விருப்புக்கும்
நமக்குமான இடைவெளி.

III

உள்நுழைகையில்
இருளாகவும்
வெளிக் கிளம்புகையில்
வெளிச்சமாயும்
இருக்கிறது வீடும் வாழ்க்கையும்.

25.2.11

நிழல்



I
போய்வருகிறேன்
என்று ஒவ்வொரு முறை
சொல்லும்போதும்
உயிர் பெறுகிறது
மரணத்தின் நிழல் தோய்ந்த
முகம்.

II

நிழற்படங்களில் சிரிக்கும்
யாரும்
அறிய முடிந்ததில்லை
எந்தப் படம்
தங்கள் மறைவுச்செய்தியில்
சிரிக்கக் கூடும்
என்பதை.

சங்கிலி



I
ஊரும் எறும்பு
கொண்டு செல்கிறது
என் கவிதையின் முதல் வரியை.
துடிக்கும் பல்லிவால் சுமக்கிறது
இறுதி வரியை.
அலைகிறது ஆன்மா
கவிதையின் வரிகளில்.

II
வார்த்தைகளைத்
தின்கிறது பேரிரைச்சல்.
பேரிரைச்சலைத் தின்கிறது மௌனம்.
மௌனத்தைத் தின்கின்றன
வார்த்தைகள் நிரந்தரமாய்.

24.2.11

துளி


I
என் தோல்விக்கான
வியூகங்களும்
உன் வெற்றிக்கான
தந்திரங்களும்
புதையுண்டு
கிடக்கின்றன
ஒரே மண்ணில்.
II
புள்ளிகளால்
கட்டுண்டு கிடந்த
கோலத்தை
மெல்ல அவிழ்க்கின்றன
பெயர் தெரியாத
எறும்புகள்.
III
அதிகாலை ரயில்
நின்ற நடுவழியில்
கண்ணீர் மறைத்தது
மலம் கழிக்கும்
பெண்களின்
துயரத்தை.

23.2.11

குமிழி


I
மரணம் குறித்துக்
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
முற்றுப் புள்ளியின்
மீது அமர்கிறது
கொசு.
II
கல்லுக்குள் சிற்பம்.
விதையில் வனம்.
துளிக்குள் கடல்.
சுவடுகளில் யாத்திரை.
துவக்கத்தில் முடிவு.
ஒன்றில் எல்லாம்.
III
பிறப்பு. மழலை.
மையல்.கவிதை.
இசை.கோபம்.
புணர்ச்சி.பிரிவு.
விருந்து.வியாதி.
இளமை.பயணம்.
முதுமை.தனிமை.
மரணம்.
எல்லாம்
பொழுதுகளில்.
வாழ்வு என்றென்றும்.

22.2.11

காளான்


I
இசையின் எல்லை
வெறுமையும்
சில கண்ணீர்த் துளிகளும்.
II
கொய்யாத பூக்களின்
பரவசத்தை 
வண்டு சொல்கிறது
காற்றிடம்.
III
பின்னிரவில்
தவளைகளை
தேவதைகளாக்குகிறது
அதன் சங்கீதம்.
IV
கதவைத் தட்டி
நான்தான் என்றாய்.
நீதான் என
நான் எண்ணாத போது.
V
முட்டை-
வெளிப்புறம் உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம் உடைகையில்
உயிர் பிறக்கிறது.
VI
காலடிகள்
யாருடையதாயினும்
சலனமின்றிப்
படிக்கட்டுகள்.
VII
விட்டில் பூச்சிக்கு
உண்டா
காலையும்-மாலையும்?
VIII
காற்றில் அலையும்
நெருப்பின் சுடர்.
வண்ணத்துப்பூச்சி.
IX
சாலையைத்
தோண்டுகையில்
தட்டுப்பட்டது
மரநிழல்களின்
சடலங்கள்.
X
மண்ணைத் துளைக்கிறதா?
மண்ணில் புதைகிறதா?
அந்த மண்புழு.

17.2.11

இடைவெளி


வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை.

80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஜன்னலின் பக்கத்தில் ஒரு சாய்வு நாற்காலியில். முகமெல்லாம் சுருக்கம். அவரது மனைவி வீட்டின் உள்புறத்தில் கையில் ஒரு புத்தகத்துடன். கனத்த நிசப்தம் கவிழ்ந்த முன்காலை.

நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகன் லேப்-டாப்பில் ஏதோ நோண்டிக்கொண்டிருக்கிறான்.

திடீரென ஒரு காகம் முதியவரின் பக்கத்து ஜன்னலில் வந்து உட்கார்ந்தது.
“என்னது இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விலக்கிப் பார்த்து ஒரு அஸ்வாரஸ்யத்துடன் மகன் சொன்னான் “அது காக்காப்பா”.

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன சொன்னே இதோட பேரு?” “இப்பத்தானே சொன்னேம்ப்பா. அது காக்கா” -மகன்.

சிறிது நேரம் கழித்து அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன சொன்னே?”. சற்று எரிச்சலான குரலில் மகன் சொன்னான்- “அது ஒரு கா-க்-கா; புரிஞ்சுதா? கா-க்-கா”.

அவரால் புரிந்து கொள்ள முடியாதது போல சிறு நெற்றிச் சுருக்கம். கண்களை இடுக்கி உன்னிப்பாய் அவனையே பார்த்தார். இப்போது உள்ளேயிருந்த அவர் மனைவியின் கவனமும் புத்தகத்திலிருந்து மகனிடம் திரும்பியது.

சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார், “அது என்னன்னுதானே கேட்டேன்?”. மகனோ பொறுமையை இழந்து அவரைப் பார்த்துக் கத்தினான், “ஒரே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்க? எத்தனை தடவைதான் பதில் சொல்றது காக்கான்னு? வயசாச்சு.இதுகூடவா உன்னால புரிஞ்சுக்க முடியாது?”

முதுமையின் விளிம்பிலிருந்த அந்தத் தந்தையின் முகத்தில் எந்தவிதச் சலனமும் வெளிப்படவில்லை. உள்ளே இருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் புராதனமான நாட்குறிப்பு ஒன்றிருந்தது.

அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. அவருடைய மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் குறிப்புகள் எழுதியிருந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த அவன் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

“என் செல்லக் குட்டிக்கு இன்றைக்கு மூணு வயசு. அவனோட ஒவ்வொரு கேள்வியும் ஆனந்தம்தான்.

இன்றைக்கு என் பக்கம் உட்கார்ந்திருக்கும்போது ஜன்னலில் ஒரு புறா வந்தமர்ந்தது. உடனே அவனுக்குக் கேள்வி கேட்கும் ஆர்வம். எத்தனை அழகு அவன் கேள்வி? “அது என்னதுப்பா அது என்னதுப்பான்னு”

‘அது ஒரு புறாடா செல்லக்குட்டி’ என்று நான் சொல்ல விடாமல் எத்தனை தடவை கேட்டிருப்பானோ? எண்ணமுடியாமல் பதில் சொன்னபடியே போனது பொழுது. என் மடியில் படுத்தபடியே தூங்கும் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்விதான் என்னை எத்தனை குதூகலப் படுத்தியது? இந்தக் குழந்தையின் வடிவில் ஆனந்தத்தின் மொழியைப் புரிய வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னேன்.”

லேப்டாப்பிலிருந்த கையை எடுத்து அப்பாவின் கைகளைக் கோர்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டான் மகன். கனக்கும் மனதுடன் கலங்கும் கண்களுடன் அந்த விரல்களில் வாஞ்சையுடன் முத்தமிட்டான்.

விதையிலிருந்து
விழுதுகளாய்
விரிந்து செல்கிறது
வாழ்க்கை.
விழுதுகளைப்
பார்க்கும் கண்கள்
புதைந்திருக்கும்
வேர்களைப்
பார்ப்பதில்லை.

12.2.11

ப்ளீஸ்.சிரிங்களேன்(பத்து தடவை)


ஐயோ! ஸென் பௌத்தமான்னு ஓடாதீங்க. இது ஸென் இல்ல. இல்ல. இல்ல. சொல்ப அல்ப ஜோக்ஸ்.

உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஜோக்ஸ் சொல்ற மாதிரி சிரமமான விஷயம் எதுவுமில்ல. ஒருத்தர அழ வெச்சுடலாம். ஆனா சிரிக்க வைக்கிறது மஹா கஷ்டம்.

பீடிகை சிகரெட்(இப்போது படத்தைப் பார்க்கவும்)கை போதும். ஜோக்குக்குப் போலாமா?

#அம்பானி வண்டியைத் தலை தெறிக்க ஓட்ட பின்னாடி இருந்த பிரேம்ஜி ”ஏம்ப்பா வண்டிய இப்பிடிப் போட்டுத் தொரத்துற? வூட்டுல ஏதாவது அவசர வேலையா? சொல்லுபா”. அதற்கு அம்பானி” வண்டி வல்லிசா ப்ரேக் புடிக்கல்லப்பா. எங்கேயாவது ஆக்ஸிடெண்ட் ஆவுறதுக்குள்ளாற சீக்கிரமா வூட்டுக்குப் போய் சேந்துடலாம்னுதான்”.

#ரத்தன் டாடா ஒரு ஆட்டோவோட முன்சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருப்பதை இன்னொரு ஆட்டோவில் பீடி வலித்தபடிச் சாய்ந்திருந்த லக்ஷ்மி மிட்டல் ”ஏம்ப்பா ஃப்ரண்ட் வீல் பஞ்சரா?” என்று கேட்க இளக்காரமாகச் சிரித்த டாடா” போர்டை நீ பாக்கல போல இருக்கு. இங்க டூ வீலர் மட்டுந்தான் பார்க்கிங் அலௌடு. கழட்டு ஒன்னோட ஃப்ரண்ட் வீலையும்” என்றார்.

#வெளிநாடு போய்த்திரும்பிய சத்யம் ராஜு தன் மனைவியிடம் கேட்டார்,” என்னைப் பாத்தா ஃபாரினர் மாதிரியா தெரியறேன்?”. அவர் மனைவி,” இல்லையே ஏன்? என்றாள். “இல்ல. கொள்ளையடிச்சுட்டு லண்டன்கிட்ட வந்துக்கிட்டிருந்தேன். அப்ப ஒருத்தி என்னப் பாத்து நீ ஃபாரினரான்னு கேட்டா.அதான் டௌட்டா இருந்திச்சு.ஓங்கிட்ட கேட்டேன்.”

#ஒரு தடவை ஹர்பஜன்சிங் தன் கேர்ள் ஃப்ரெண்டோடு ஆட்டோவில் போகும்போது ஆட்டோ ட்ரைவர் கண்ணாடியை அவளைப் பார்க்க வசதியாய் திருப்பிவைத்தார். உடனே வந்தது ஹர்பஜனுக்குக் கோபம். ”என்னோட கேர்ள் ஃப்ரண்டை கண்ணாடி வழியாப் பாக்கலாம்னு நெனச்சியா? வண்டிய நான் ஓட்டறேன். வந்து ஒக்காரு பின்னால”.

#யுவராஜ்சிங்கிடம் இண்டெர்வ்யூவின் முதல் கேள்வி.
ரு கட்டடத்துல பத்தாவது மாடில நீங்க இருக்கீங்கன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிக்கிது. உடனே என்ன பண்ணுவீங்க?
ற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

#பிந்தரன்வாலே ஒரு தடவை பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்சனைக்கு ஆதரவா ஒரு கார்ல பாம் வெச்சுக்கிட்டு இருக்கும்போது அவனோட ஃப்ரெண்ட் கேட்டான்.”கார்ல பாமை பொருத்திக்கிட்டிருக்கும்போதே பாம் வெடிச்சுட்டா என்ன பண்றது?”. உடனே “முட்டாள். அப்படி ஏதாவது ஆனா என்ன பண்றதுன்னு இன்னொரு பாம் கைவசம் வெச்சுருக்கேன்” என்று சொல்லி பாமை ஆட்டிக் காட்டினான்.

#(ஃபோனில்)
டாக்டர்! என்னோட மனைவி பிரசவவலியால துடிக்கறாங்க.
மை காட்! இது அவங்களோட முதல் குழந்தையா?
ல்ல. நான் அவங்க புருஷன்.

#ஒரு பெண்ணை ஒரு பையன் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் (நான் மட்டும் நிமிர்ந்து பார்க்கையில்) சட்டென்று முத்தமிட்டு விட்டான்.
டப்பாவி! என்ன பண்ற நீ?
ச்சையப்பால ஃபைனல் இயர் விஷுவல் கம்யூனிகேஷன்.

இந்த ஜோக்ஸுக்கெல்லாம் சிரிச்சு முடிச்சுட்டீங்கன்னே வச்சுக்குவோம். இப்போ பரிசுக்குரிய கேள்வி.

இந்த இடுகையில் ஆறு பொய்கள் சொல்லியிருக்கிறேன். அதைச் சரியாகவோ கிட்டத்தட்டவோ கண்டு பிடிப்பவர்களுக்கு நீராராடியாவிடம் சொல்லி மத்திய சர்க்காரில் வெகுமதி வாங்கித் தரப்படும்.

ராசா ராடியா நம்பர் ப்ளீஸ்?

ஒரு கோப்பைத் தேநீர்


ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு மடாலயத்துக்கு ஸென் பௌத்தம் பற்றி அறிந்துகொள்ள வந்தார்.ஒரு அறையில் இருக்கையளிக்கப்பட்டு சிறிது நேரம் காத்திருந்தார். அவருக்கேயான மிச்சமிருக்கும் ஆணவமும் அவருடன் காத்திருந்தது கேள்விகளுடன்.

திரை விலகியது.மூத்த துறவி வெளியே வந்தார். வணக்கம் தெரிவித்தார். எழுந்து வணங்கிய பேராசிரியரை அமரச் சொல்லி எதிரில் அமர்ந்தார் துறவி.பேராசிரியரின் வருகைக்கான காரணத்தைத் துறவி கேட்டார். ஸென் பௌத்தம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக பேராசிரியர் சொன்னார்.

உள்ளிருந்த உதவியாளரை அழைத்து தேநீர் கொண்டு வரச் சொன்னார். தேநீர் வந்தது. ஒரு கோப்பையில் தேநீர் ஊற்றினார். மெல்ல நிரம்பியது கோப்பை.

கோப்பை நிரம்பிய பின்னும் துறவி ஊற்றுவதை நிறுத்தவில்லை. வழிந்தோடத் துவங்கியது தேநீர். பார்த்துக்கொண்டே இருந்த பேராசிரியரால் பொறுக்கமுடியவில்லை. ”நிறுத்துங்கள். கோப்பை அதற்கு மேலும் கொள்ளாது” என்றார்.

சிரித்த துறவி “இந்தக் கோப்பையைப் போல உங்களுக்குள்ளும் ஏராளமான அபிப்ராயங்களும் யூகங்களும் நிரம்பியிருக்கின்றன. ஏற்கெனவே நிரம்பிய கோப்பையில் எப்படி மேலும் தேநீரை ஊற்றுவேன் நான்? என்றார்.
பேராசிரியருக்கு மற்றும் ஒரு திரை விலகியது.

எல்லாக் கற்பிதங்களுமே நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் மேலும் நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளவும்தான். அடுத்த தளத்துக்கு நாம் செல்லும்போது ஏற்கெனவே பெற்றவை துணையாய் வரவேண்டுமே தவிர சுமையாய் வரக்கூடாது.

ஆனால் நண்பர்களே! பெரும்பாலான இடங்களில் கல்வி அல்லது ஞானம் சுமையாய் நம்மை அழுத்தி பேரானந்த நிலையை அடையவிடாது நுழைவாயிலிலேயே நிறுத்திவிடுகிறது.

நம் கோப்பையை
சகல திரவியங்களும்
நிரம்பும் வகையில்
வைத்திருப்போம்.
நிரப்பப்பட்டவை
பருகப்பட்ட பின்
கோப்பை மறுபடியும்
காலியாகவே இருக்கட்டும்
மற்றொரு திரவியம்
நிரப்பப்பட.

11.2.11

பிம்பம்


ஒரு துறவி போகுமிடங்களுக்கெல்லாம் தன்னோடு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கூடவே எடுத்துப் போனார்.

மற்றொரு துறவிக்கு இந்தத் துறவியின் செயல் பொருத்தமற்றதாக இருந்தது. "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புறத்தோற்றத்தைப் பற்றி கவலைப் படவேண்டும்? அகப்பார்வைதானே துறவிகளின் அழகு. எந்த நேரமும் ஒரு துறவி தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே தோய்ந்திருந்தால் எப்படி அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை அடைவது?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.

துறவியின் செயலில் இருந்த பழுதைச் சுட்டிக்காட்டித் தெளிவுபடுத்த விரும்பிய இரண்டாவது துறவி முதல்த் துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் கண்ணாடியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு முதல் துறவி தன்னுடைய கண்ணாடியை எடுத்து இரண்டாவது துறவியின் முகத்திற்கு நேராகக் காட்டினார்.

"எனக்கு ஏதாவது குழப்பங்கள் வரும் போது இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அது என்னுடைய பிரச்சனைக்குக் காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறியவுடன் இரண்டாம் துறவி ஞானம் பெற்றவரானார்.

இது தன்னைத் தானே காண்பதற்கான கதை. தன்னைக் கண்டு கொண்ட ஒரு துறவியின் கதை. எந்தப் பிரச்சனையும் குழப்பமுமே தன்னிலிருந்துதான் துவங்கி தன்னிலேயே முடிகிறதென்பதை அழகாய்ச் சொன்ன தத்துவச் சரடுடன் எளிமையாய் இந்தக் கதை.

கண்ணாடியை
நீ
பார்த்தால்
அது துவக்கம்.
கண்ணாடி
உன்னைப்
பார்க்குமானால்
அது உன் முதிர்ச்சி

என்கிற வரிகளோடு முடிக்க நினைக்கிறேன்.

10.2.11

வருந்துகிறேன்.


பெப்ருவரி 4ம் தேதி நான் எழுதிய ”சக்ரவாகம்” இடுகை குறித்து இந்த வருத்தம்.

இந்த மாதம் நாலாம் தேதி என் அக்காவின் மகள் “அங்கிள்!இந்தப் பாட்டை உங்களுக்கு ப்ளூடூத்தில் அனுப்பட்டுமா? என்று எனக்குப் பிடிக்காத பாடல்களாகக் கேட்டுக் கொண்டே வரும்போது நடுவில் என் உயிர் குடித்த சக்ரவாக ராகத்தில் அமைந்த ”என்ன குறையோ” வையும் கேட்டாள். உடனே என் எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டுத் தொடர்ச்சியாக கண்களில் நீர் வடிய அரைமணி நேரம் இந்தப் பாடலில் குளித்துவிட்டு இடுகை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

எனக்கு அந்தப் பாட்டின் சினிமா என்னவென்று அவள் மூலம் தெரிந்துகொண்டேன்.அவளுக்குப் பாடகர்கள் பற்றியெல்லாம் அவ்வளவாக ஆர்வம் கிடையாதது எனக்கு பாதகமாகப் போய்விட்டது.

தடாலடியாக நானே பாம்பேஜெயஸ்ரீக்கு இந்தப் பாடலுக்கான மகுடத்தைச் சூட்டிவிட்டேன். இந்தப் பிசகுக்கு சுதாதான் பொறுப்பேற்கவேண்டும். என்னை போதையேற்றி உன்மத்தனாக்கி இப்படி ஒரு தவறைச் செய்ய அவர் என்றறியாத அறியவிடாது துரத்திய அவர் குரல்தானே காரணம்.
இதை சுதாரகுநாதன் பாடினார் என்பதையே ரேடியோஸ்பதியின் தளத்திற்கு வாசனின் பரிந்துரையில் போய்ப்பார்த்தபின்புதான் தெரிந்துகொண்டேன்.

ரேடியோஸ்பதி எனக்கும் மிக முன்னாடியே இந்தப்பாடலைப் பற்றியெழுதி இருப்பதும் இதைத் தொடர்ந்து இன்னும் பல தளங்களில் இந்தப் பாடலைப் பற்றிச் சிலாகித்திருந்ததையும் இன்றுதான் படித்தேன்.கொஞ்சம் கூச்சமாயும் இருந்தது. என் தொழிலின் சுவர்களுக்குள் நானிருப்பதாலும் தொலைக்காட்சி- வானொலி போன்ற தொடர்புகளை இழந்திருப்பதாலும் இந்த மாதிரி சூழ்நிலைகளில் தனியனாய் ஒரு தீவில் இருப்பதாய் உணர்கிறேன். ஆனாலும் இப்படி இருப்பதை விரும்புவதால் இது மாதிரிக் கால் சறுக்குவதையும் ஏற்றுக்கொள்ள நேருடுகிறது.

இந்த இடுகையைப் படித்த ஆர்.ஆர்.ஆர். மற்றும் வாசன் உள்ளிட்ட நண்பர்கள் நாசூக்காய் என்னை விட்டுவிட்டார்கள் என எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் எல்லோரின் முன்னிலையிலும் என் இடுகையிலுள்ள தகவலையும் மாற்றிவிடுகிறேன்.

மிகப் பெரிய சுகானுபவத்தை எனக்குத் தந்த சுதாரகுநாதனின் குரலுக்கு
என் அன்பும் பாதங்களுக்கு என் மன்னிப்பும்.

ஆனாலும் இன்னும் சுதாவின் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயைத் தேடுகிறது என் ரசனை. இதை என்ன சொல்ல?

9.2.11

காலி அண்டா


சீனாவில் பழங்காலத்தில் கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பல குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த ஒருவர் அவர்களுக்குத் தகுந்த உணவு கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். அதனால் தன்னுடைய குழந்தைகளில் சிறுவனான ஒருவனைத் தேர்ந்தெடுத்து மடத்தில் சேர்த்து விடுவது என முடிவெடுத்தார்.

ஆனால் மடத்தில் வெகு சில சிறுவர்களையே உதவியாளர்களாகச் சேர்த்துக் கொள்வார்கள். தன்னுடைய பையனுடன் சென்ற தந்தை மடத்தின் தலைமைக் குருவைச் சந்தித்து, "நீங்கள் என்னுடைய பையனை உங்களுடைய உதவிக்காக மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்குக் கைமாறாக என்னுடைய பையன் கடினமான பணிகளைச் செய்வான். துறவிகளை மதித்து நடப்பான். அதனால் தயவுசெய்து அவனை உங்கள் மடத்தில் சேர்த்துக் கொண்டு அடைக்கலம் தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பல ஏழைக் குடும்பங்கள் இருந்ததால் அனைவரும் தங்களுடைய குழந்தையை மடத்தில் சேர்ப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் அனைவரையும் ஏற்றுக் கொண்டு மடத்தில் தங்க வைப்பதோ, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதோ சிரமமான காரியம் என்பதால் பல சிறுவர்களை ஏற்றுக் கொள்ள மடத்தில் மறுத்து விடுவார்கள்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இந்தச் சிறுவனை சேர்த்துக் கொள்ள தலைமை குரு அனுமதி கொடுத்தார்.

துறவிகள் பையனிடம் ஒரு மேலங்கியைக் கொடுத்தனர். பையன் தன்னுடைய தந்தையையும், கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு விட்டு மடத்தில் சேர்ந்தான். சிவந்த மேலங்கியைத் தவிர அவனுக்கென்று வேறு எந்தப் பொருளும் அங்கு இல்லை.

ஒரு முதிய துறவி பையனிடம் வந்து தண்ணீர் கொதிக்க வைக்கும் பெரிய அண்டாவினைக் காட்டி, "அங்கே இருக்கும் அண்டாவினை எடுத்துக் கொள். அதில் தண்ணீரை நிரப்பி அருகில் இருக்கும் பெரிய பாறையின் மேல் வை" என்று அவனுக்கு வேலையை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

பையனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எதற்காகத் தண்ணீரை நிரப்பிப் பாறையின் மீது வைக்கச் சொல்லுகிறார்? வேலையைச் செய்ய மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வார்கள்? சுற்றி எங்கேயும் தண்ணீரைக் கொதிக்க வைக்கும் அடுப்பும் இல்லை. இத்தனை குழப்பமான சிந்தனைகளுக்கு இடையேயும் துறவி சொன்னது போல் செய்து முடித்தான்.

கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பக்கம் வந்த முதிய துறவி, தன்னுடைய கைகளால் தெளிப்பது போல் பாவனை செய்துகாட்டி விட்டு, "நான் செய்தது போல் தண்ணீரை வெளியே உனது கைகளால் தெளி" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

விநோதமான செயலாக சிறுவனுக்குப் பட்டாலும் துறவி கூறியது போல் செய்து முடித்தான். பாறை முழுவதும் தண்ணீரில் நனைந்திருந்தது. அண்டா வெற்று அண்டாவாகியது. அவனுடைய கைகளோ தண்ணீரைத் தெளித்துத் தெளித்து விறைத்துப் போய் இருந்தது.

கொஞ்சம் நேரம் போனபின் முதிய துறவி அவனிடம் வந்து "அண்டாவை மறுபடியும் நிரப்பு" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரை நிரப்புவதும், தெளிப்பதுமாக இருந்தான். இது போல் ஒரு மாதம் முடிந்தது.

தன்னுடைய தந்தை மிகவும் தவறான முடிவெடுத்து விட்டார். இங்கு நான் எதையும் கற்கவும் இல்லை. ஒரே வேலையை-திரும்பத் திரும்ப-ஒரே வேலையையே செய்கிறேன்.என்ன வாழ்க்கை இது? என்று வருத்தமடைந்தான். ஆனால் தன் தந்தைதான் இங்கு சேர்த்தாரே தவிர துறவிகளைப் பற்றிக்குறை சொல்லுவதும் நல்லதில்லை என்று எண்ணி மனம் வருந்தினான்.

மூன்று மாதங்கள் சென்றிருக்கும்.பையனுக்கு விருப்பம் இருந்தால் தன்னுடைய ஊருக்குச் சென்று வரலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்காவது இந்த அண்டாவினையும், தண்ணீர் தெளிப்பதினையும் விட்டு விட்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டு சென்றான்.

வீட்டிற்கு சென்றதும் எல்லாரும் அவனைத் துளைக்க ஆரம்பித்தனர். "உனக்குப் பிடித்திருந்ததா? மிகவும் கடினமான வேலை கொடுத்தார்களா? உன்னுடைய கைகளால் மரப் பலகைகளை உடைத்தாயா? தியானம் பற்றி எதாவது சொன்னார்களா?".

பதில் சொல்லுவதற்கு அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் செய்ததெல்லாம் அண்டாவினை நிரப்புவதும் அதனைத் தெளித்து அண்டாவைக் காலியாக்குவதும்தான். வேறு ஒன்றும் செய்தானில்லை.ஒருவழியாக "இன்னும் நான் எதையும் கற்கவில்லை, இனிமேல் தான் கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்" என்று கூறினான். ஆனால் அனைவரும், "கண்டிப்பாக எதாவது சொல்லிக் கொடுத்து இருப்பார்கள், அதில் ஒன்றினை எங்களுக்குச் செய்து காட்டு" என்றார்கள்.

சிறுவனுக்கோ வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலுடன், "நான் எதையும் கற்கவில்லை" என்று பதில் கூறிவிட்டு பக்கத்திலிருந்த அடுப்பங்கரைக்கு சென்று விட்டான்.கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் பையனின் உறவினர் ஒருவர் அவனிடம் சென்று, "நீ எல்லாரிடம் சொல்ல முடியாது, அதனால் என்னிடம் மட்டும் சொல்லு" என்று அவனை பதில் கூற வற்புறுத்தினார்.

அவ்வளவு தான்.மிகவும் கோபம் அடைந்த சிறுவன் சத்தமாக "நான் எதையுமே கற்கவில்லை!" என்று கத்திவிட்டு, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு குதித்து எழுந்தவன், எதிரே இருந்த மர இருக்கையை தன்னுடைய கைகளால் வேகமாகக் கோபத்துடன் ஒங்கி வேகமாக வெட்டினான். அந்த கனத்த மர இருக்கை கணப்பொழுதில் இரண்டாகப் பிளந்தது.அப்பொழுதுதான் பையனுக்கு தான் என்ன கற்றோம் என்பது புரிந்தது.
II
நம் வாழ்க்கையில் எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோருக்கும் பொருந்தும் பதில்களைத் தேடுகிறோம்.

மனதின் வண்ணங்கள் வேறு வேறாயிருக்கும்போது அவற்றின் கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் வேறுவேறாய்த்தானே இருக்கமுடியும்.

தலைவலிக்கு வேறு மருந்தும் வயிற்றுவலிக்கு வேறு மருந்தும் இருப்பதைப் போல் அந்தச் சிறுவனின் தேடல் எதுவாயிருந்ததோ அதை அவன் கண்டுகொண்டான். நாம் அதைத் தேட அவசியமற்றிருப்பதால் நமக்கு ஒன்றிற்கும் மேலாய் பல விடைகள் கண்களுக்குப் புலப்படுகின்றன.

6.2.11

விடையின் புதிர்


ஒரு நூல்க்கண்டின் துவக்கமா முடிவா?
ஒரு மரத்தின் அடிவேரா?
வீழும் இலையா? வாழும் கிளையா?
இசைக்கு முந்தைய பேரமைதியா-
பிந்தைய பெருங்கிளர்ச்சியா?
சொல்லைக் கடந்த வலியா-
சொல்லைத் தவிர்த்த நிலையா?
பசிக்கு முந்தைய உணவா-
நிறைவுக்குப் பிந்தைய பசியா?
சுண்டிய நாணயத்தின்
மேற்புறமா கீழ்புறமா?
மூடிய கதவின்
உட்புறமா வெளிப்புறமா?
நிறைவின் மேல் சிறு துளியா-
குறைவின் மேல் ஒரு கடலா?
இலையசைக்கும் காற்றா-
காற்றசைக்கும் இலையா?
நதி நடக்கும் மணலா-
மணல் சுமக்கும் நதியா?
வான் துறந்த துளியா-
துளி சுவைத்த மண்ணா?
உறங்குகையில் கனவா-
கனவினுள் விழிப்பா?
வண்டு உண்ட கனியா-
கனி உண்ட வண்டா?
கரை தொடும் அலையா-
கடல் திரும்பும் நுரையா?
துவங்காத இவ்வரியா-
முடிவில்லா அதன் பொருளா?

5.2.11

கேக்கலா முல்லா!


முல்லா நஸ்ருத்தீனைத் தெரியாதவர்கள் கீழே இருப்பதையும் தெரிந்தவர்கள் வேகமாகக் கடைசி வரிக்குச் சென்று மேலே இருப்பவற்றையும் படியுங்கள்.
I
ஒரு முறை முல்லா கப்பலில் வேலை செய்ய ஆசைகொண்டு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

அதிகாரி: புயல் வந்தால் என்ன செய்வீர்?
முல்லா: நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: முன்னைவிடப் பெரியதாய் இன்னொரு புயல் வந்தால்?
முல்லா: இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.

அதிகாரியும் முல்லாவும் ஒன்பதாவது புயலை முடித்து-

அதிகாரி: பத்தாவது புயல்?
முல்லா: நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: அதெல்லாம் சரி மேன். இத்தனை நங்கூரம் எங்கிருந்து உமக்கு மட்டும்? என்று கேட்டு மாட்டிக்கிட்டான் பய என்று மூன்று முறை ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
முல்லா: உங்களுக்கு விடாம பத்து புயல் எங்கிருந்து கிடைக்குமோ அதுக்குப் பக்கத்துல இருந்துதான் என்று சொல்லி சிரிக்கவில்லை.
II
”முல்லா ரொம்ப புத்திசாலி" என்று பலரும் புகழ்வதைக் கேட்ட ராஜா முல்லாவைச் சோதிக்க எண்ணினார்.

ஒரு நாள் அரசவை கூடியபோது முல்லாவை ராஜா ராரா என்று தெலுங்கில் இல்லை உர்துவில் கூப்பிட்டார்.

”முல்லா! உங்கள் அறிவைச் சோதிக்கணுமே? நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் சொல்லலாம். அது உண்மையாயிருந்தால் உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயிருந்தால் உங்களைத் தூக்கில் போடுவேன். எங்கே ஏதாவது ஒரு வாக்கியம் ப்ளீஸ்” என்றார் ராஜா.

உடனே வழக்கமாகத் தங்களுக்குள் இந்த மாதிரி நேரங்களில் குசுகுசு என்று பேசிக்கொள்ளும் மந்திரிகள் இப்போதும் குசுகுசு.

“முல்லா உண்மையைச் சொன்னாலும் செத்தார். பொய்யைச் சொன்னாலும் செத்தார். ஆக முல்லாவுக்கு இன்னிக்கு செத்து நாளைக்குப் பால்” என்பது அந்தக் குசுகுசுவின் விரிவாக்கம்.

முல்லா ராஜாவைப் பார்த்துப் தெனாவெட்டுடன் " மன்னரே! நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள் " என்ற மஹா வாக்கியத்தை உதிர்த்தார்.

முல்லா சொன்னதைக் கேட்ட மன்னர் திகைப்பூண்டை மிதிக்காமலே முழித்தார். பின் வேறென்ன? திகைத்தார்.

முல்லா சொன்னது உண்மையாயிருந்தா அவருடைய தலை வெட்டப்படவேண்டும்.அப்படி வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். பொய் சொன்னால் தலையை வெட்டாமல் தூக்கில் போட வேண்டும்.

முல்லா சொன்னது பொய்யாயிருந்தா முல்லாவைத் தூக்கில் போடணும். அப்படித் தூக்கில் போட்டால் அவர் சொன்னது உண்மையாயிடும். உண்மையைச் சொன்னால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்டணும்.

ஆக வேறு வழியில்லாமல் வயிறு புகைய புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை ராஜா பாராட்டினார். சபையோர் வழக்கம்போல் சோர்வாகக் கைதட்டிவிட்டு இன்றைக்குப் பொழுது கழிந்தது என்று அவரவர் வீட்டுக்குக் குதிரைகளில் கிளம்பினார்கள்.
அதுசரி. உங்க ஆறு பேருக்கும் முல்லா யாருன்னு தெரியாதா? அடடா! வீட்டுக்குக் கெளம்பிட்டேனே. நாளக்கிச் சொல்றேனே.

4.2.11

சக்ரவாகம்


சக்ரவாகம்.

இப்படி ஒரு பெயரைக் கேட்ட ஞாபகம் லேசாக வருகிறதா? சின்ன சின்ன மழைத் துளிகள் சேர்த்து வைப்பேனோ என்று கருப்பு உடையில் இஷா கோபிகரைப் பார்க்காதது போலே பார்த்துக் கொண்டே மழையில் ஜம்மென்று நனைந்த அர்விந்சாமியை உடனே நினைவுக்கு வரும். அதுக்கப்புறம் அந்தப் பாடலில் சக்ரவாகம் பற்றி ஒரு வரி வரும். அந்தப் பறவையாவேனோ என்று ஏக்கத்துடன் பாடிவிட்டுக் கிளம்புவார் அ.சா.

’சகோரப் பறவை’என்று கூவப்படும் சாரி அழைக்கப்படும் பறவையின் மறு பெயர்தான் ‘சக்ரவாகம்’.அது இரவு நேரங்களில் இணையைப் பிரிய நேர்ந்தால் சோகத்துடன் கூவுமாம்.அதன் கூவல் மிகுந்த மன வேதனையைப் பொதிந்ததாக இருக்கும். சரி.

இப்போ சக்ரவாகம் என்ற பெயரில் ஒரு கர்நாடக சங்கீத ராகமும் இருக்கிறது. இந்த ராகம் மட்டும் ஒரு பெண்ணாயிருந்தால் கடத்திக் கொண்டுபோயிருப்பேன் என் குடிசைக்கு.
ஹலோ யாருங்க! உடனே ஓடாதீங்க. மேலோட்டமா உங்களுக்குப் பிடிச்சா மாதிரி பேசறேன். கொஞ்சம் கேளுங்க.

கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் குருதியில் நனைந்து சிவாஜி உயிர்விளிம்பில் தவிக்கையில் என்.டி.ராமராவ் சீர்காழியின் அற்புதக்குரலில் பாடுவாரே ஆன்மாவின் துயரெல்லாம் வெளிப்படும்படியும் அந்தத் துயருக்கும் அதுவே மருந்தாகும் மாயமும் கொண்ட ”உள்ளத்தில் நல்ல உள்ளம்”-அது சக்ரவாகம்.

முத்துவில் மாளிகையை விட்டுத் துரத்தப்படும் போது ரஜினிக்கு ஹரிஹரன் கொடுத்திருப்பார் குரல்-விடுகதையா இந்த வாழ்க்கை?- அதை யார் கேட்கும் போதும் உடனே மனமிறங்கும்.தத்துவ முலாம் பூசப்பட்டிருப்பதும் தெரியும்.புதிரும் விடையும் கொண்டதாய் அமைந்திருக்கும் அதன் பாவம்.

அடுத்து நேற்றுத்தான் ஒரு சக்ரவாகம் கேட்டேன். இன்னும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

மந்திரப்புன்னகை என்கிற படத்தில் சுதாரகுநாதனின் உயிரை அறுத்தெடுக்கிற என்ன குறையோ என்ன நிறையோ என்கிற தேவகானம்தான் இதை உடனே எழுதத் தூண்டியது.

என்ன ஒரு சங்கீதம்! எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு அந்தப் பாடலைப் பிடித்துக்கொண்டு எதையும் தேடாமல் தேசாந்திரியாய் வாழ்ந்து சாகலாம் போங்கள்.

ஒரு ப்யூஷனின் தோய்ப்பும் மிருதங்கத்தின் இறுக்கமும் ஹா!மனது இளகி இங்கே வழிந்தோடிக் கொண்டிருப்பது அந்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்குப் புலப்படும்.நான் திருப்பித் திருப்பி ஐம்பதாவது தடவைக்கும் மேலே இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கண்ணில் மழையையும் கண்ணன் அதைத் துடைப்பதையும் உணர்கிறேன்.

இந்த வரி எழுதும் போதும் எனக்குப் பின்னால் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அலைபாயுதே கண்ணாவை விரட்டிவிட்டு என் ரிங்டோனாகி விட்டது. என் காலர் ட்யூனாகவும் மாறிவிட்டது.

இந்தக் காட்சி எப்படி படமாக்கப் பட்டிருக்குமென நான் பார்க்கவும் விரும்பவில்லை.இதை ஒலி வடிவமாகவே ஒரு ஓவியம் போலத் தீட்டி வைத்துப் பாதுகாப்பேன்.

இது சக்ரவாகத்தின் மாயமா அங்கங்கே தொட்டுப்போகும் ஆஹிர்பைரவியின் வாசனையா அந்த வார்த்தைகளா அல்லது சுதாவின் குரலா? எனக்குத் தெரியாத குழப்பமாயிருக்கிறதே? என்ன செய்வேன்? தஞ்சாவூரில் செத்துபோன ப்ரகாஷ் இதைக் கேட்டிருக்கவேண்டும். என்னோடு கை கோர்த்துக்கொண்டு ஆடியிருப்பார்.

அறிவுமதி அற்புதமாக எழுதி வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள். உங்களை இழந்து போவீர்கள். (வலது புறம் பேரானந்தம் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்டபடி வரிகளை மேயுங்கள். பரலோகம் சமீபிக்கும்)

என்ன குறையோ
என்ன நிறையோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன தவறோ
என்ன சரியோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன வினையோ
என்ன விடையோ
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
( என்ன குறையோ )
நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்
வலியும் வரலாம்
வாட்டம் வரலாம்
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்
நேர்க்கோடுவட்டம்
ஆகலாம்
நிழல் கூட
விட்டுப் போகலாம்
தாளாத துன்பம்
நேர்கையில்
தாயாகக் கண்ணன்
மாறுவான்
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )
உண்டு எனலாம்
இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்
இணைந்தும் வரலாம்
பிரிந்தும் தரலாம்
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்
பனி மூட்டம் மலையை
மூடலாம்
வழி கேட்டுப் பறவை
வாடலாம்
புதிரான கேள்வி
யாவிலும்
விடையாக
கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )

2.2.11

இங்கிவனை யான் பெறவே...

 இரு சிறுவர்களைப் பற்றிய மற்றொரு இடுகை.

புதுச்சேரியில் வித்யாநிகேதன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் பயிலும் சகோதரர்களைப் பற்றிய பெருமைமிக்க பதிவு.

அவர்களின் பெற்றோர் மூன்று குழந்தைகளோடு துவங்கிய ஒரு புதிய பள்ளியில் இந்தச் சகோதரர்களைச் சேர்த்தார்கள்.

இன்று எண்ணூறுக்கும் மேல் மாணவர்களோடு விரிவடைந்திருக்கும் அந்தப் பள்ளியில் இன்று ஒன்பதாம் வகுப்பில் கற்கும் ரமணா மற்றும் பத்தாம் வகுப்பில் கற்கும் அரவிந் இருவரும் இணைந்து ஃப்ரென்ச் மொழிக்கான இலக்கண நூலைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மாதம் 7ம் தேதி அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஃப்ரென்ச் ஆசிரியரால் இந்நூல் வெளியிடப்பட இருக்கிறது.

நூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலைக் கொண்டுவர அவர்கள் இருவரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தச் சமூகம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்குக் கொடுக்கும் கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் இந்தப் பணிக்கு நேரமொதுக்கி நினைத்ததைச் சாதித்திருக்கிறார்கள் இவர்கள். தவிரவும் இலக்கணம் குறித்து எழுதுவதென்றால் பொதுவாகவே வேப்பங்காயாக நினைக்கும் என் போன்றவர்களுக்கு மத்தியில் ஆழ்ந்த ஆர்வமும் மொழியின் மீதான ஆளுமையும் இருந்தால் மட்டுமே இலக்கணத்தின் அருகே செல்ல முடியும் என்பது என் எண்ணம்.

இவர்கள் இருவரும் அரசியல்-கலை-நவ சினிமா-அறிவியல்-ஓவியம்-இசை-தத்துவம் போன்ற வெவ்வேறு துறைகளிலும் ஆர்வம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.

இத்தனை நாள் எழுதியும் 46ம் வயதில் என் முதல் புத்தக முயற்சிக்கான பிள்ளையார்சுழி போட்டுக்கொண்டிருக்கும் எனக்கு 15மற்றும் 13வயதில் இவர்களின் புத்தக வெளியீட்டு ஆர்வம் பெருமையைத் தருவதாயினும் கூச்சமடையவும் வைக்கிறது.

பெருமையும் கூச்சமும் அடைவதற்கு இன்னொரு காரணம் இவர்களின் அப்பாவாக நான் இருப்பதும் கூட. இவர்களின் அம்மாவும் என் மனைவியுமான நித்யாவின் கடும் உழைப்பும் ஆர்வமும் இவர்களின் ஆர்வங்களுக்கு முழுக்காரணமாக இருக்கிறது.

நான் இம்மூவரையும் வணங்கும் போது என் கண்கள் பெருமையால் கசிகின்றன.

பின்குறிப்பு: 

குறித்தபடி பிப்ரவரி 7க்குப் பதிலாக ப்ரபல தமிழ் எழுத்தாளர் என் அபிமானத்துக்குரிய ஸ்ரீ.கி.ராஜநாராயணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்ததால் பிப்ரவரி 19ம் தேதியில் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ.கி.ரா. நூலை வெளியிட்டபோது பள்ளியின் அத்தனை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடுவில் என்னுடைய பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் உடனிருந்து தங்களின் வருகையால் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்ததை விட எனக்குப் பெருமையான தருணம் வேறெது அமைந்திட முடியும்?

1.2.11

கோணம்


I
ஒரு பணக்கார அப்பா தன் பையனுக்கு வறுமையென்றால் என்னவென்று தெரியட்டும் என்ற நினைப்பில் ஒரு குக்கிராமத்துக்குக் கூட்டிப்போனார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது கேட்டார்:

இப்பப் புரிஞ்சுக்கிட்டியா வறுமைன்னா என்னன்னு?

நம்ம கிட்ட ஒரு நாய். இங்க எல்லார் கிட்டயும் நாலு.
நம்ம கிட்ட ஒரு தொட்டித் தண்ணி. இங்க ஒரு பெரிய நதியே இருக்கு.
நம்ம கிட்ட விளக்குதான் இருக்கு.இவங்களுக்கோ கோடிக்கணக்குல நட்சத்திரம்.
நம்ம கிட்ட ஒரு சின்னத் துண்டு நிலம்.இவங்களோ பெரிய பெரிய வயலோட இருக்காங்க.
நாம சாப்பிடறதை விலைக்கு வாங்குறோம். ஆனா இவங்க தானே பயிரிட்டு தானே சாப்டுக்கறாங்க.

பையன் இன்னும் அடுக்கிக் கொண்டே போக அப்பா மயங்கிவிழுந்தார்

ரொம்ப தேங்ஸ்பா. இவங்களைப் பாத்தப்புறம்தான் தெரியுது நாம எவ்வளவு ஏழைன்னு.

II
ஒரு ஏழைச்சிறுவன் தன் விலையுயர்ந்த காரையே உற்றுப்பார்ப்பதைக் கண்ட அவன் அந்தச் சிறுவனை ஏற்றிக்கொண்டு ஒரு ரௌண்ட் அடித்தான்.

எப்படி இருந்தது சவாரி?
அட்டகாசம். என்ன விலை இருக்கும் இந்தக் கார்?
யாருக்குத் தெரியும்? என்னோட அண்ணா எனக்குப் பரிசாகக் கொடுத்தான்.
ரொம்ப நல்ல விஷயம்.
ஒனக்கு இப்படி ஒரு அண்ணா இல்லையேன்னு வருத்தமா இருக்கா?
இல்லை.நான் அப்படி ஒரு அண்ணாவா இல்லையேன்னு வருத்தமா இருக்கு.

III
தன்னிடம் இல்லாததைத்தான் இரு சிறார்களும் கண்டுகொண்டார்கள். ஆனால் பணக்காரச் சிறுவனின் அனுபவத்தில் எத்தனை வறுமை? ஏழைச் சிறுவனின் அனுபவத்தில் எத்தனை செல்வம்?

ஒவ்வொருவரும் எப்படி ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம்-யூகிக்கிறோம்-ஏற்றுக்கொள்கிறோம் என்பதை இந்த இரு குட்டிக் கதைகளும் சொல்கின்றன.

வர்ட்டா?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...