23.10.11

மற்றொரு முன்னறிவிப்பு


நாளை அக்டோபர்24ம் தேதி திங்கள் கிழமை இரவு 09.30 மணிக்கு என் அபிமான தொலைக்காட்சிகளில் முதன்மையான பொதிகை தொலைக்காட்சியில்”கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் இசைக்கவி.திரு.ரமணனுடன் ஆங்கிலப்பேராசிரியை திருமதி.சித்ராவும் நானும் பங்கு பெற்ற ஒரு அரட்டை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

9.30 மணிக்கெல்லாம் தொலைக்காட்சியை அணைத்துவிடுவதற்கு நாளைக்கு இன்னொரு காரணமும் கிடைத்திருக்கிறது இதைப் படிக்க வாய்ப்பவர்களுக்கு.

20.10.11

ஒரு முன்னறிவிப்பு


கடந்த ஐந்து நாட்களாகப் பாதயாத்திரையாக சென்னையிலிருந்து திருப்பதி வரை நடந்து சென்றிருந்தேன்.

சனிக்கிழமை 15ம் தேதி காலை துவங்கிய யாத்திரையை முடித்து இன்று காலை பத்து மணிக்குச் சென்னை திரும்பினேன்.

இந்த யாத்திரையின் ஆன்மீக நோக்கங்கள் தாண்டி இது பல தளங்களில் ஒரு மிக நீண்ட கட்டுரை எழுதும் அளவுக்குத் தேவையான அனுபவங்களையும் என் மீது வாரியடித்துச் சென்றிருக்கிறது.

இது ஒரு முக்கியமான இடுகையாய் இருக்கும். தாக்குதலைச் சமாளிக்கச் சிறிது காத்திருக்கவும்.

10.10.11

இசை மேதை கார்த்திக் நாராயணன்


இசையின் வாசம் இன்னும் தொடருகிறது.

நேற்று மாலை வெங்கடநாராயணா சாலையின் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்து வெங்கடேசப் பெருமாளை தரிசித்துவிட்டு எதேச்சையாக அதனருகிலுள்ள இசை அரங்கத்தில் ஸ்ருதி கூட்டப்படும் ஒலி கேட்டு உள்ளே நுழைந்தேன்.

பொதிகை தொலைக்காட்சியைப் போல் புதியவர்களை அறிமுகப் படுத்தும் தொலைக்காட்சி வேறெதுவும் இருக்கமுடியாது. எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் எரிந்து கொண்டிருக்கும் கவனிப்பாரற்ற கோயிலின் தீபம் போன்றது அவர்களது சேவை. தூர்தர்ஷன் பொதிகையைத் துவங்கும் முன்பிருந்தே அவர்களின் ஹிந்தி நிகழ்ச்சிகளோடு வளர்ந்தவன் நான். அவர்களின் விளம்பரக்குறுக்கீடு இல்லாத-இரைச்சல் அற்ற-நிகழ்ச்சிகள் எல்லோரையும் கவர்வதில்லை. அவர்களின் குறைகள் அநேகமாக தொழில்நுட்பமும் கற்பனைவளக் குறைவும் சார்ந்தவை.அவற்றை ஜீரணித்துக்கொண்டால் பல பொக்கிஷங்களை அள்ளலாம்.

சரி. விஷயத்துக்குப் போவோம்.

ஸ்ருதி கூட்டிக்கொண்டிருந்தது மாஸ்டர்.கார்த்திக் நாராயணன் எனும் இளம் பாடகன்தான். இந்த வாரத்திலேயே பொதிகையின் இசை நிகழ்ச்சிகளில் இருமுறை கேட்க நேர்ந்த பதினெட்டு வயது இளைஞன்அதே கார்த்திக்தான் இன்று எனக்குக் கிடைத்த புதையல்.

முதல் பாட்டிலிருந்தே கச்சேரி களைகட்டிவிட்டது.மிகக் குறைவான பார்வையாளர்கள் இருந்ததும் கேட்கும் அனுபவத்துக்குப் பேருதவியாக இருந்தது. வயதுக்கு மீறிய முதிர்வான குரலும் அபாரமான கற்பனை நிரம்பிய ஸ்வர ஆலாபனைகளும் என்னை அசத்தின. இள்வயதுக்குரிய தைரியமான சஞ்சாரம் அவருடைய கச்சேரியை தூக்கிப் பிடித்தது.

பல இடங்களில் மதுரை மணிஅய்யரும் யேசுதாஸும் டி.எம்.க்ருஷ்ணாவும் கலந்த ஒரு சாயலை உணர்ந்தேன்.  அங்கிருந்த ஒரு மணிநேரத்துக்கும் சற்றுக்குறைவான நேரத்திலேயே அங்கிருந்த அனுபவத்தை சுகானுபவமாக மாற்றியமைத்தது.ஒன்றை மட்டும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

கார்த்திக் நாராயணன் எதிர்காலத்தின் மிகப் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகராவது சத்தியம்.

ஏழரை மணிக்கே கிளம்ப வேண்டிய சூழ்நிலையால் பாதியிலேயே எழுந்து சென்று கார்த்திக்கை தமிழ்நாட்டின் எதிர்காலம் நீதான் என்று மனதார ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பினேன்.

கிடைத்தது வைஷ்ணவா கல்லூரியில் பாடிய இந்த மூன்று வீடியோக்கள்தான் .ப்ளீஸ். கேட்டுப்பாருங்களேன்.இப்பாடல்களில் இருக்கும் கட்டமைப்பையும் மெருகையும் விட இன்னும் இன்னும் மெருகேறி இருக்கிறது கார்த்திக்கின் சங்கீதம்.




பி.கு:  தலைப்பின் கீழே இருக்கும் கார்த்திக் நாராயணன் போலவும் அவ்வப்போது டீ ஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டும் பாட கண்ணுக்குத் தெரியாத அந்த விதிகளைத் தளர்த்தினால் மேடை இன்னும் களை கட்டும். குர்தா-ஜிப்பாவையே பார்த்துப் பார்த்துக் கண்கள் செருகுகின்றன.அப்படித்தானே?

8.10.11

தூஸ் போன்டெஷ்


தூஸ் போன்டெஷ் (Dulce Pontes). இது போர்ச்சுக்கீஸின் இசை உலகத்துக்கு மிக முக்கியமான பெயர். இசையமைப்பாளர்-பாடலாசிரியை-பாடகி-நடிகை. 1969ல் பிறந்து 1990களில் போர்ச்சுக்கீஸின் நவீன இசை மறுமலர்ச்சிக்குக் காரணமான ஃபேடோ (http://www.youtube.com/watch? v=Ui2zIM8FWS4&feature=results_main&playnext=1&list=PLB0BDDA8E30FEA01C)என்கிற இயக்கத்தின்அடித்தளத்துக்குக் காரணமான இசைக்குயில்.

சாஸ்த்ரீய இசை-நாட்டுப்புற இசை-பாப் இசை மூன்றிலும் தேர்ச்சிபெற்ற போன்டெஷ் அடிப்படையில் பியானோ இசைக்கக் கற்றுக்கொண்டார். 1991ல் Lusitana Paixão (என்னிடம் சொல்) http://www.youtube.com/watch?v=iFqr-ykMwi8 என்ற பாடலுக்காக  தேசீய அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தாலும் ஈரோவிஷன் இசைப் போட்டியில் போர்ச்சுக்கீஸின் சார்பில் பங்கேற்று எட்டாவது இடம் பெற்றார். (ஆனாலும் இதுவரைக்கும் இதுதான் போர்ச்சுக்கீஸின் பாடகர்களுக்கு நான்காவது சிறப்பான இடம்).

Canção do Mar (கடலின் இசை)  இவரின் பாடல்களில் அவருக்கு மிகப் பெரிய ப்ரபலத்தைக் கொடுத்தது. இதை பிரபல ஹாலிவுட் சினிமாவான ப்ரைமல் ஃபியர் (Primal Fear) என்கிற படத்தில் உபயோகித்துக் கொண்டார்கள். இதன் இசையின் 30 நொடி வடிவத்தை SOUTHLAND என்கிற NBC போலீஸ் நாடகத்தில் பயன்படுத்தினார்கள்.இந்த கடலின் இசையைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவலை இடுகையின் முடிவில் வைத்திருக்கிறேன்.

துவக்கத்தில் ஒரு பாப் பாடகியாகத் தன் பயணத்தைத் துவக்கிய போன்டெஷ் போகப்போக உலக இசைக்கான அடையாளங்களைத் தேடத் துவங்கினார்.மறந்து போயிருந்த பல பாரம்பரியமான இசை வடிவங்களையும் இசைக்கருவிகளையும் அவர் தேடியெடுத்து மறு உயிர் அளிக்கத் துவங்கினார்.

தன் படைப்புக்களில் ஐபேரிய( iberian) தீபகற்பத்தின் இசைப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தார். அது மட்டுமில்லாமல் அவரது படைப்புக்களை அரேபிய ஆஃப்ரிக்க பல்கேரிய பிரேசிலிய இசை மரபுகளும் அவரை ஈர்த்தது.

பெரும்பாலும் போர்த்துக்கீஸில் மட்டும் பாடினாலும் ஸ்பானிஷ் கலீசியன் மிராண்டீஸ் இத்தாலியன் ஆங்கிலம் அரேபிய கிரேக்க மொழிகளிலும் பாடிவருகிறார்.

2006 ஜூனில் O Coração Tem Três Portas (இதயத்துக்கு மூன்று கதவுகள்) http://www.youtube.com/watch?v=_pFPYbFcwBE என்கிற ஆல்பத்தை பார்வையாளர்கள் ரசிகர்களின்றி தோமாரில் உள்ள ஒரு தேவாலயத்திலும் ஒபிடோஸில் உள்ள தூய மேரி தேவாலயத்திலும் இசையமைத்தார். இவர் மனதுக்கு இன்று வரை மிக நெருக்கமான ஆல்பமாக இசையாக இது இருக்கிறது. இதை 2006 டிசம்பரில் வெளியிட்டார். 

2009ல் Momentos என்கிற தலைப்பில் தன் 20 ஆண்டு கால வெளிவந்த வெளிவராத இசைப்படைப்புகளின் தொகுப்பாய் இதைக் கொண்டுவந்தார். 

சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய பாடல்களின் தொகுப்பாய் Nudez என்கிற ஆல்பத்தைத் தயாரிக்கும் பணியில் இவர் மும்முரமாய் இருக்கிறார்.

போன்டெஷின் இசை புதிய புதிய கதவுகளைத் திறக்கிறது. கதவுகளுக்கு வெளியே என் சலனமற்ற குளத்தில் சிறிய ஓட்டாஞ்சில்லை எறிந்து மூழ்க வைக்கிறது. அலையின் சலனம் மொக்குகள் மலரக் காத்திருக்கும் தாமரைகளைத் தொட்டு சமனப்பட மீண்டும் குளம் ஆசை கொள்கிறது மற்றொரு கல்லெறிக்காக. அலை தயாராகிறது தாமரையின் தொடலுக்காக. 

இவை தேனின் சுவையை சொட்டுக்களில் சுவைக்கத் தந்திருக்கிறேன். மேலும் படிக்க புதிய இசை கேட்கத் துடிப்பவர்களுக்கு உபயோகப்படலாம். போன்டெஷின் வலைத்தளம். http://www.dulcepontes.net   

போன்டெஷின் கடலின் இசை(Canção do Mar) தேவாவுக்கு மிக நெருக்கமானது. இதைக் கேட்டு விட்டு இந்த வாரப் புதிருக்கு விடை சொல்லுங்கள் தேவாவின் வழியாக.

4.10.11

வை.கோ.வும் திருவாசகமும்


















என்னை மிகவும் ஈர்ப்பது அற்புதமாகப் பேசக்கூடியவர்களின் பேச்சும் அவர்களது நினைவுத் திறனும்.

எழுதும் ஆர்வமுள்ள அதே அளவுக்கு மூச்சுவிடாமல் சுவாரஸ்யமாக நான்ஸ்டாப் உரையாடலிலும் நேரம் காலம் பார்க்காமல் பாடுவதிலும் எனக்கு இணையில்லாத ஆர்வமுண்டு. ஆனால் சுட்டுப்போட்டாலும் மேடைப்பேச்சு அதிலும் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய பேச்சு என்பது நினைத்தும் பார்க்க முடியாதது.

நான் சமீபத்தில் பார்த்த விடியோக் காட்சிகளில் இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி வடிவ இசைக் குறுந்தகட்டு வெளியீட்டு விழாவில் வை.கோ. நிகழ்த்திய உரையைக் கண்டு அசந்து போனேன். தேன். தேன்.மெய் சிலிர்த்தேன்.

http://www.youtube.com/watch?v=db4-IgGuRXg&feature=related
http://www.youtube.com/watch?v=PFe_I4zvpN8&feature=related
http://www.youtube.com/watch?v=kRPHzTwoRsc&feature=related
http://www.youtube.com/watch?v=UQJXEeS3u_0&feature=related

(மேற்குறிப்பிட்ட சுட்டிகளை தடவிறக்கம் செய்யாது போனதால் இந்த இடுகையிட்ட சில காலத்துக்குப் பின் காபிரைட் விதிமுறையால் இதை இனிமேலும் காண வாய்ப்பில்லை. வருந்துகிறேன்.)

அதிக மக்களின் கவனத்துக்குப் போகாத தலைப்பில் உரையாற்ற எத்தனை தயாரிப்போடு வந்திருக்கிறார் என்கிற ஒழுங்கு மிக ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது.எந்த ஒரு குறிப்பும் கையில் வைக்காது விவரங்களையும் பெயர்களையும் எடுத்து வீசும் சாதுர்யத்தை அத்தனை சாதாரணமான சாதனையாகக் கருத இயலவில்லை.

இளையராஜாவின் இசையின் மேலுள்ள மேதைமைக்குச் சமமானதாகச் சொல்ல வைக்கிறது வை.கோ.வின் பேச்சுத் திறன். இவர் வெகு விரைவில் கட்சியில் தன் இடத்தை மிக அனாயாசமாகக் கடந்து விடுவார் என்பதில் முளைவிட்ட பயம் கருணாநிதியை இவர் மேல் வீண்பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்க வைத்தது. அதற்குப் பின் அவருக்கு இணையான பேச்சாற்றலும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் தி.மு.க.வில் உருவாகவில்லை.

தனக்கென்று பொதுவாழ்வில் நாகரீகமான இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் வை.கோ இதுநாள் வரைக்கும் எந்த ஒரு தனிமனித நிந்தனையிலும் ஈடுபடடதில்லை. பிறருக்கு உரிய மரியாதை அளித்து-மிக எளிமையான-எல்லோராலும் அணுக முடிந்தவராக-இத்தனை நாள் பொதுவாழ்விலும் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத அரசியல்வாதியாக- வை.கோ.வின் இடம் தமிழக அரசியலில் பெருத்த வியப்பானது.

எனக்கு எப்போதுமே இவருக்கு முன்னால்-அண்ணாத்துரை உட்பட- இத்தனை தமிழ்ப் புலமையும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் இருந்ததாக நினைவில்லை.

இவருக்கு எல்லாத் துறையிலும் முன்னோடி என்று பார்க்கும்போது ஹிந்திக் கவிதைகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் கொடிகட்டிப்பறந்த இன்னொரு கண்ணியமிக்க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே தட்டுப்படுகிறார்.

வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.

3.10.11

ராகம் தானம் பல்லவி
















இசையை ரசிக்கத் தெரியவில்லை. உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சங்கீதத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதும் பேசுவதும் மலைப்பாக இருக்கிறது.

மேலே கண்ட வார்த்தைகளைத் தனக்கு சங்கீதம் தெரியாது என்று சொல்லிக் கொள்பவர்களும் சங்கீதம் கேட்க ஆசை.ஆனால் எதுவும் தெரியாமல் கேட்க பயமாயிருக்கிறது என்று நினைப்பவர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்.

அந்த இரண்டு பத்திகளையும் மறந்துவிடுங்கள். ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு பிறந்ததில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டதாய் நினைக்கும்-தேர்ச்சி பெற்றதாய் நினைக்கும் விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.

அது சமையலோ கவிதையோ மொழியோ பேச்சோ எதுவானாலும் இருக்கட்டும். அதன் துவக்க நாட்களில் இருந்து இன்று வரை நிகழ்ந்த பயணத்தின் பாதையை அசை போட்டுப்பாருங்கள்.

இன்றும் கற்றுக் கொள்ளவும் ரசிக்கவும் கற்றவரையில் உங்கள் தேர்ச்சியை வெளிக்காட்டவும் தயக்கம் இருந்ததில்லை. பலரிடம் பகிர்ந்து கொள்ளவும் பயமில்லை. அடிப்படை என்னவென்றால் நாம் கற்றுத் தேர்ந்ததாய் நினைக்கும் எல்லாமே இன்னும் கற்கத் தேவையானதாகவும் முடிவுறாத பயணத்துக்கு இட்டுச் செல்வதாயும் இருப்பது கண்ணுக்குத் தெரியும்.

இசையும் அப்படிப்பட்டதாய்த்தான் இருக்கமுடியும். அதன் அடிப்படை இலக்கணங்கள் தெரிந்திருக்கத் தேவையில்லை.ரசிக்கப் பொறுமையும் திறந்த மனதும் இருந்தாலே போதும். இன்னும் சொல்லப் போனால் இலக்கணம் எந்த ஒரு கல்விக்குமே அடிப்படையானதாக இருக்கமுடியாது.அதன் மேல் நாம் கொள்ளும் ஈடுபாடுதான் அதை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. அதன் பின் நம்மை அறியாமலே அந்தந்தக் கல்விக்கு ஏற்றது போல இலக்கணங்கள் தானாய் ஒரு வேலி அமைக்கின்றன.

இசையைப் பொறுத்தவரை அது கர்நாடக சங்கீதமோ-ஹிந்துஸ்தானி இசையோ-மேற்கத்திய சங்கீதமோ அதன் ரசனை அது என்ன ராகம் என்பதிலிருந்தோஅல்லது அதன் கட்டமைப்புக் குறித்த இலக்கணங்களிலிருந்தோ துவக்கம் கொள்வதில்லை.

மிகச் சிறிய வயதிலிருந்து இசையை ரசிக்கத் துவங்கும் பலரின் வாழ்க்கை எந்தத் தருணத்திலிருந்தும் இனிமையானதாகவே இருந்து வந்திருக்கிறது.அவர்களும் வாழ்வின் துயர்களில் சிக்காமல் தப்பியதில்லை. ஆனாலும் அவர்கள் அத் துயரிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் உபாயங்களை இசையுடன் சேர்த்து கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

கேட்கக் கேட்க அந்த இசையே உங்களுக்குச் சாயல்களைக் கற்றுக் கொடுத்து விடும். ஒரே மாதிரியான ராகத்தின் சாயல்கள் சினிமாப் பாடல்களிலிருந்து சாஸ்த்ரீய சங்கீதத்தின் மாளிகைக்கு உங்களைக் கூட்டிப் போய்விடும்.அதற்கு மொழி ஒரு கூடுதலான சுவையே தவிர நல்ல இசைக்கு மொழியே தேவையில்லை என்பதும் என் கட்சி.

எந்த ஒரு அடிப்படை இலக்கணமும் தெரியாத- எந்த ஒரு பிரபல இசை அமைப்பாளரின் தொடர்பும் இல்லாத -ஒரு இசை ரசிகரை நான் வெகு நாட்களாக அறிவேன்.

1988லேயே ஹரிஹரனின் குரலைப் பலருக்கு அவரின் கஸல்கள் மூலம் அறிமுகப் படுத்தி இவர் பெரிய ஆளாக வருவார் என்று சத்தியம் செய்தவர்.

சஞ்சீவ் அபயங்கர்-ரஷீத் கான் போன்ற ஹிந்துஸ்தானி இசை மேதைகளையும் முன்கூட்டியே கணித்தவர்.

தன் இருபது வயதுகளுக்குள் ( அப்போது இணையதளம் எதுவுமற்ற பொட்டல்வெளி. எல்.பி.யும் ஒலிநாடாக்களும் டூ.இன்.ஒன். களுமே கதி.)  ஜாக்கி ஷெராஃபும் மீனாக்ஷி சேஷாத்ரியும் அறிமுகமான ஹீரோ என்கிற சினிமாவில் ரேஷ்மா பாடிய லம்பி ஜுதாயி என்கிற சூஃபி வடிவ கஸல் மூலம் நஸ்ரத் பஃடே அலிகாஃனின் பல சூஃபி இசைப் பாடல்களையும் தேடி பலருக்கும் அறிமுகப்படுத்தியவர்.

ஆ ஊ என்றால் ஒரு பக்கம் நௌஷாத்தையும் மன்னா தேயையும் சலீல் சௌத்ரியையும் பற்றி எம்.எஸ்.வி. ,ஜி.ராமநாதன் மற்றும் இளையராஜா பற்றியும் மறு பக்கம் பண்டிட் ரவிஷங்கர்-பீம்சென் ஜோஷி-கிஷோரி அமோன்கர் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுவார்.

மொகலே ஆஸம் பாடல்கள் கேட்டால் ஜன கண மன அளவுக்கு மரியாதை செலுத்த நின்று விடுவார்.

போதும் அவர் அறிமுகம். விஷயத்துக்கு வரவும் என்கிற உங்கள் கோஷம் காதுகளைத் தொடுவதால் இத்தோடு . வைக்கிறேன்.

அவர் இனி வாரம் ஒரு பாடலை அறிமுகப் படுத்தி அதே சாயலில் உள்ள தமிழ்ப் பாடல் எது என்று கேட்கும் கேள்விக்கு பின்னூட்டத்தில் பதில் கூறினால் அவரை விரைவில் அறிமுகப்படுத்துவேன்.

இந்த வாரம் இது. ஸாஸோங் கி மாலா பே- இந்தக் கவ்வாலிப் பாடல் சமீபத்தில் வந்த பிரபலமான தமிழ் சினிமாப் பாடல்-

2.10.11

நன்மதி கொடு இறைவா!

















யாரொருவர் 
தன்வாழ்க்கையின்
ரகசியங்களைத்
திறந்த புத்தகமாக்கத்
துணிந்தாரோ-
துணிவாரோ-
யாரொருவர் தன்
சொல்லையும்
செயலையும்
ஒன்றாய்
இணைத்தாரோ-
இணைப்பாரோ-
யாரொருவரின்
சுவடுகள்
யாரொருவரும் செல்லாத
அடர்வனங்களில்
இறுதிவரை பயணித்ததோ-
பயணிக்குமோ-
யாரொருவர்
இலக்கை அடைந்ததன்
பின்னுள்ள காலத்தை
முன்கூட்டியே
கண்டறிந்து
சொன்னாரோ-சொல்வாரோ-
யாரொருவர்
யாராலும் தொடமுடியாத
உயரத்தை
விட்டுச் சென்றாரோ-
செல்வாரோ-
யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம்
ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

(காந்தியின் பிறந்த தினத்துக்காக ஒரு மீள் பதிவு இது. என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு நினைவாஞ்சலி)

30.9.11

ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே



(இந்தப் பாடலின் துவக்கத்திலும் முடிவிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது என்ன என்பது மற்றொரு ரகசியம். அதைப் பின்னூட்டத்தில் மட்டுமே சொல்லுவேன் ஒரு வாரத்துக்குப் பின்.)

பார்வையற்ற ஒரு யாசகனான நான் ஊரெல்லாம் உறங்கும் ஓர் நள்ளிரவில் ஆட்களற்ற ஒரு கோயிலின் வாசலில் அமர்கிறேன்.

என் அருகில் இருக்கும் அந்த நாய் சற்றுமுன் ஈன்ற தன் குட்டிகளை அரவணைத்து நாவால் நக்கி நக்கி அவற்றிற்குக் கதகதப்பூட்டிக்கொண்டிருப்பதை என் காதுகளால் உணரமுடிகிறது.எனக்கான அதன் குரலில் தன்னைப் பற்றி என்னிடம் சொல்ல அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

குட்டிகளை ஈன்று பெரும் பசியிலும் தாகத்திலும் இன்றைய நாளை அது கழித்திருக்க வேண்டும். எத்தனை கொடுமை பசியின் விஷ நாக்கால் தீண்டப்படுவது என்பதை நான் நன்கறிவேன்.

என் இரவு உணவுக்கென நான் பத்திரப்படுத்தியிருந்த  அந்த காய்ந்த ரொட்டியைப் பையில் இருந்து எடுத்து அதற்கு உணவாய் அளித்தேன். நன்றி சொல்லியபடியே பசியின் ஆவலாதியை வெளிப்படுத்தியபடியே உண்டு தீர்த்தது.

மூலையில் கிடந்த வட்டிலில் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி வைக்க அதையும் குடித்து முடித்து என்னை ஒரு முறை நக்கிக் கொடுத்துவிட்டுக் குட்டிகளிடம் சேர்ந்துகொண்டு அவற்றிற்குப் பால் புகட்டத் தொடங்கியது. 

பசியும் இரவும் என் மேல் இரக்கமின்றிக் கவிழ மெதுவாய் விரிகிறது ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே. உடன் என் வயிற்றுப் பசி போல உருள்கிறது ஸாகீர் ஹுஸைனின் தபேலா.

18.9.11

மாபிலம் கோதண்டராமர்

ஒவ்வொரு தொன்மையான தலங்களையும் பார்க்கும் போது அதன் காலத்தில் நம்மைப் பொருத்திப்பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அப்படித்தான் நிகழ்ந்தது மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் ஆலயத்திற்குள் நுழைந்தபோது.


அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ எடுத்துக்கோ(காசு கொடுத்துவிட்டு) என்று கூவும் சென்னையின் மாம்பலம் பகுதி வில்வ மரக் காடாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? முந்தைய நூற்றாண்டுகளில் இது மாபிலம் என்ற பெயரில் அதாவது மஹா குகை என்றழைக்கப்பட்டது.


மாம்பலம் என்ற பெயருக்கு இங்கு நிறைய மாந்தோப்புக்களும் அதிலிருந்து கீழே விழுந்த மாம்பழங்களுமே காரணம் என்று புருடா விடவும் மாம்பலம் காரணமாக இருந்திருக்கிறது.  


தி.நகரின் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு கல்லெறி தூரம்-அல்லது- மேட்லி சுரங்கப்பாதையின் கீழிறங்கி இடதுபுறம் ஒரு யு எடுத்து வலது புறத் தெருவில் திரும்பி உங்களின் கேள்விக்குப் பதில் சொல்லக் காத்திருக்கும் அந்த நபரிடம் கோதண்டராமஸ்வாமி கோயில் எங்கே என்று கேட்டால் வழிகாட்டுவார். இந்தக்கோயில் அசோகமித்ரனின் ”இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ளவேண்டும்” சிறுகதையில் பாட்டுக்கச்சேரி நிகழும் இடமாக வருகிறது.


வாசலில் மொபைல் போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டே வேலை செய்யும் இஸ்திரி வண்டிக்காரரும் அவரின் ஸ்த்ரீயும் ஒரு புறமிருக்க துளசிமாலைகள் மணக்கும் பூக்கடை மறுபுறம். இரண்டுக்கும் நடுவே கோதண்டராமர் அருள்பாலிக்கக் கொஞ்ச இடம். அதற்குள் நான் புகுந்தேன்.


கோயிலின் வலது புறம் பழமையான அகோபில சம்ஸ்கிருதப் பள்ளியின் வேட்டி சட்டை அணிந்த மாணவர்களும் பாவாடை தாவணி அணிந்த மாணவிகளும் நாமிருப்பது சென்னையில்தானா என்ற ஆச்சர்யத்தை ஊட்ட மறக்கவில்லை.


உள்ளே நுழைந்தவுடன் கவர்வது கற்தரையும் இடது புறம் பூட்டப்பட்டிருக்கும் அழகான கற்படிகளுடன் கூடிய தெப்பக்குளமும்தான். விசேஷ நாட்களில் தெப்ப உற்சவமும் நடப்பதுண்டு என்றார் தொன்மையான ஒரு பக்தர்.


எனக்கும் என் பிள்ளையைப் போலவே பெருமாள் கோவில் என்றாலும் ஹனுமார் கோவில் என்றாலும் கடவுளுக்குச் சமமாக கோயிலின் தீர்த்தம் ரொம்பவும் பிடிக்கும். என் மூத்தவன் சொல்லுவான்.” பெருமாள் கோயிலுக்கு வரும்போது ஒரு டம்ளர் எடுத்துண்டு வரணும்பா. அது வழிய தீர்த்தம் வாங்கிக் குடிக்கணும்”.


இந்தத் தீர்த்தத்தில் என்னவெல்லாம் சேர்க்கிறீர்கள் ஸ்வாமிகளே? என்று கேட்டபோது ”கொஞ்சம் லவங்கம் கொஞ்சம் ஏலக்காய் கொஞ்சம் பச்சைக் கற்பூரம். ரெண்டு துளசி.அவ்வளவுதான்” என்றார் ஐயங்கார் ஸ்வாமிகள். அதன் கூடக் கொஞ்சம் செம்பையும் நிறைய பக்தியையும் என நினைத்துக் கொண்டேன் நான்


அருள்மிகு.அரங்கநாதர் சன்னதி-ஜெய விஜயருக்கு மத்தியில் கோதண்ட ராமர் சன்னதி-அருள்மிகு.யோகநரசிம்மர் சன்னதி-குலசேகர ஆழ்வார் சன்னதி-சேனை முதல்வர்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் சன்னதி-உடையவர்,மணவாளமாமுனிகள் சன்னதி-கருடாழ்வார் சன்னதி(சன்னதியின் வெளிச்சுவரில் தெலுங்கில் வங்காயல செட்டியின் முயற்சிகள் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன)- 30 திருப்பாவைப் பாசுரங்களும் பொறிக்கப்பட்ட ஆண்டாள் சன்னதி-அரங்கநாயகித் தாயார் சன்னதி-சஞ்சீவபர்வத ஆஞ்சநேயர் சன்னதி என்று-உஸ்ஸப்பா மூச்சு விட்டுக்கறேன்- யாரையும் விட்டு வைக்கவில்லை வங்காயலச் செட்டியின் கனவு.


வலது மூலையில் மடப்பள்ளியும் இடது மூலையில் வாகனக் கிட்டங்கியும் கோயிலின் திட்டங்களைப் பூர்த்தி செய்தன. அப்புறம் பெருமாளைத் தரிசித்துவிட்டு ஏகாந்தமான அமைதியும் பின்புறம் லேசாகச் சூடும் பரவும் கற்தரையில் உட்காரும் முன் கண்ணில் பட்டது சுவாரஸ்யமான ஒரு கதையையே உள்ளடக்கிய அந்தக் கோயிலின் ஸ்தல புராணம்.


”ஸ்ரீமாபில க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் மேற்கு மாம்பலத்தின் பிரதான மூலவராக ஸ்ரீ பட்டாபிராமன் எழுந்தருளியிருக்க அவருடைய மடியில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்க வலப்புறம் இளைய பெருமான்(இலக்குவன்) குடைபிடிக்க சிறிய திருவடியான ஹனுமான் ராமனின் திருவடிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி தமது பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் சுமார் 150(நூற்றைம்பது) வருடங்களாக பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.


ஸ்ரீ ராமன் பத்ராசலத்திலுள்ள அதே திருக்கோலத்துடன் இங்கே காட்சியளிப்பதால் இத்திருத்தலம் தக்ஷிண பத்ராசலம் என்றழைக்கப்படுகிறது. பத்ராசலத்தில் திரு. ராமதாஸர் என்பவர் திருக்கோயிலைக் கட்டினார். இங்கு அவருடைய வம்சாவழியில் வந்த திரு.வெங்கடவரத தாஸர் இத்திருக்கோயிலைக் கட்டினார் என்று பெரியோர் கூறுகின்றனர்.


பின்பு 1926 ம் வருஷம் திரு. வங்காயல குப்பையச் செட்டியார் என்பவர் இத்திருக்கோயிலைப் பெரிதாக உருவாக்கி ஸ்ரீ.கோதண்டராமரையும் ப்ரதிஷ்டை செய்தார். திரு. வங்காயல குப்பையச் செட்டியார் அவர்களுக்கு நேர்வாரிசு கிடையாது.


எனவே செட்டியாரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவருடைய பங்காளிகள் மெதுவாகக் கொல்லும் விஷத்தை அவருக்கு உணவில் கலந்து விட்டனர். அதை நமது ஸ்ரீ.ராமர் கனவில் வந்து கூறி விஷத்தை முறித்துவிட்டார். பின்னர் தமக்குக் கோயிலைப் பெரிதாகக் கட்டித் தரும்படி ஆணையிட்டார்.


மறுநாள் காலையில் செட்டியார் திருக்கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த கோயில் நிர்வாகி ப்ரா.வே.தேனுவ குப்தா வெங்கட ரங்கையா அரிதாஸர் என்பவர் நமது கோயிலைப் பெரிதாகக் கட்ட நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். 


திரு. செட்டியார் நடந்த ஸம்பவங்களை நிர்வாகி. திரு. ரங்கையாவிடம் தெரிவித்தார். நிர்வாகி மிகவும் மகிழ்ந்து ஏற்கனவேயுள்ள சிறிய திருக்கோயில் ஆகம விதிப்படி இல்லை. எனவே கட்டப்பட இருக்கிற பெரிய கோயில் ஆகம விதிப்படி கட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ரூ.4000த்தையும், கோயிலிலிருந்த பழைய பொருட்களை விற்றதில் வந்த ரூ.1000த்தையும் செட்டியாரிடம் கொடுத்தார்.


இதை முன்பணமாக வைத்துக்கொண்டு 1926ம் வருடம் ஜூன் 23ம் தேதி ஆரம்பித்து ஜூலை 26ம் தேதி அஸ்திவாரம் போட்டு 1927ம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் தேதி பூர்த்தி செய்து ஸ்ரீவைகானஸ பகவச் சாஸ்த்ரோத்த மார்க்கத்தில் மிக விமரிசையாக நூதன ஆலய அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் செய்வித்துக் கோயிலை ஸ்ரீ.சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ந ஹனுமத் சமேத ஸ்ரீ.கோதண்ட ராம ஸ்வாமிக்கு சமர்ப்பித்தார். இந்த மஹா சம்ப்ரோக்ஷண சமயத்தில் திருநீர்மலை.ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் இங்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்துள்ளார். சுபம்.” 


இந்த ஸ்தல புராணத்தின் மொழி வழக்கம் போல ஒரு புதையல். இதைப் படித்தபின் தோன்றிய சில எண்ணங்கள்.


1. நிறைய தமிழ் மொழி வடமொழி உபயோகக் குழப்பங்கள் தெரிகின்றன.
2. பத்ராசல ராமதாஸரை யாருக்கும் தெரியாத ஒருவரைப் போல பத்ராசல ராமதாஸர் என்பவர் என்கிற அறிமுகம் ஒரு ஆச்சர்யம்.
3. வருடங்களும் மாதங்களும் ஆங்கில நாட்காட்டியைப் பின்பற்றியிருப்பது.
4. 1926ல் ரூ.5000 என்பது மிகப்பெரிய தொகை. கோயிலின் நிர்மாணத்துக்கு பெரிய தொகை செலவிடப்பட்டு மிகப்பெரிய திருவிழாவாக இது நடந்தேறியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
5. நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இப்போதுள்ளவர்களைக் காட்டிலும் பிறரின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம்.


மலைப்பான தகவல்களுடன் புதைந்திருந்த வரலாற்றின் பக்கங்களைப் பார்க்கும்போது எத்தனை எத்தனை தகவல்களை அழித்து கான்க்ரீட்டால் பூசி மெழுகிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையும் கோபமும் வந்தது.புராதனச் சின்னங்களையும் தகவல்களையும் ஜாதி மதம் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மை போன்ற குறுகிய வட்டத்துக்குள் போட்டுப் புதைத்துவிட்டோம். வரலாறையும் மரபையும் நம் வேர்களையும் புதிதாக உருவாக்க முடியாது என்ற அறிவு நமக்கேற்பட வெகுகாலமாகும். 


நள்ளிரவு பெய்திருந்த நல்லமழை தரையில் ஆங்காங்கே குளம் போலச் சேகரமாயிருந்தது. எங்கிருந்தோ கூட்டமாக வந்த வாத்துக்கள் க்வேக் க்வேக் என்று தமக்குள் பேசிய படியே தங்களுடைய அலகால் தண்ணீரைப் பருகியபடியிருந்தன.


இரண்டு துளசியிலைகளைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு அதன் சுகந்தத்தில் கரைந்தபடியே தி.நகர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் நின்று எந்தப் பக்கமாகப் போவது என்று யோசித்தபடி இருக்கையில் ”வடக்கு உஸ்மான் சாலை வழியே போ” என்று விரலைக் காட்டினார் ஈ.வெ.ரா.பெரியார்.


1975 முதல் முப்பத்தைந்து வருடங்களாக அங்கு நின்று கொண்டிருக்கும் பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். வடக்கு உஸ்மான் சாலையின் வெள்ளத்தில் தொலைந்து போனேன்.  

16.9.11

களரி


ஒரு யுத்தம்
துவங்கும்போதே
வெளிப்பட்டு விடுகிறது
அதற்கான காரணங்கள்.
சில சமயங்களில்
பயிற்சியை
நினைவுபடுத்திக்கொள்ளவும்-
சில சமயங்களில்
தன்னை நிறுவிக்கொள்ளவும்-
வேறு சில பொழுதுகளில்
வேறு சிலருக்காகவும்-
பல நேரங்களில்
எந்தக் காரணமின்றியும்.

பாதங்களை நகர்த்துதலிலும்
பதுங்கி விலகுதலிலும்
வீச்சின் லாவகத்திலும்
உக்கிரமாக வரையப்படும்
ஓவியத்தின் வர்ணங்கள்
அத்தனை களிப்பூட்டுவதாய்
இல்லாவிட்டாலும்
யுத்தங்களுக்கான
காரணங்களைத் தேடி
றைகளில் புழுங்கியபடி
நாட்களைக் கழிக்கின்றன
பளபளக்கும் உடைவாட்கள்.

1.9.11

தரிசனம்




1.

நீ பிரிந்து செல்கையில்
எழுதிய கடிதத்தை விடவும்
துயரூட்டுகிறது
அதனடியில் எழுதாது விடப்பட்ட
வெற்றுத்தாளின் நிச்சலனம்.

2.
என்றோ வசித்த
ஒரு தெருவைக் கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக் கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.

3.

நீ எழுதுவது
மிகவும் எளிமையாய்
இருக்கிறது என்றான் அவன்.
அவன் சொன்னதை
என்னால் எளிதில் புரிந்து
கொள்ளமுடியவில்லை.

4.

சிறைக்குள்
இருப்பவனைப்
பார்த்து வரப் போனேன்.
கம்பிகளுக்குப்
பின்னே நானா? அவனா?

-நன்றி- கல்கி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...