28.2.11

மாயச் சொல்


நன்றாய் நினைவிருக்கிறது
அந்த மந்திரச்சொல்லை
நான் மறந்தது.

இப்படி ஒரு மன்றாடல்
நிகழக்கூடுமெனத் 
தெரியாது போயிற்று.

இருந்த சொற்களுக்குள்
மூடப்பட்ட கதவுகளுக்கான
சொல்லைத் தேடியபோது
தெரிந்தது கொண்டேன்
நான் தொலைத்தது எதுவென.

மிகத் துயரமானது
திறக்க வழியற்ற
ஒரு கதவின் முன்
குருதி கசிய
மண்டியிட்டுக் காத்திருப்பது.

காத்திருக்கிறேன் 
நெடுநாட்களாய்
குகையின் உட்புறம்
வாயில் திறக்கவிருக்கிற
மாயச்சொல்லுக்காய்.

27.2.11

விடைபெறுகிறேன்


எழுதப் போவதில்லை இனி இந்த மாதம்.
என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டேன்.
என் மனதும் சரியில்லை.
எல்லோருக்கும் என் நன்றிகள்.

கூடு



I
செத்து விடாது வாழ்பவனுக்கும்-
சாகும்வரை வாழ்பவனுக்கும்-
செத்த பின்னும் வாழ்பவனுக்கும்-
நடுவில் நுரைக்கிறது
மரணமில்லாப் பெருவாழ்வு.

II

கூடற்ற பறவைகளின்
எச்சத்தில் எப்போதும்
காத்திருக்கிறது ஒரு வனம்.
வளர்ந்த பின்
வெட்டிவீழ்த்த
எப்போதும் ஓங்கியிருக்கிறது
ஒரு கோடரி.

26.2.11

முடிச்சு



I
கண்ணாடியின்றி
வந்தது நீ.
அடையாளம் தெரியாது
குழம்பியது நான்.

II

எது மிக விருப்போ
அதைத் தொலைவிலும்
எது மிகத் தொலைவோ
அதை விருப்பெனவும் வை.
ஒரு ஜதை செருப்புகளைப்
போலல்ல
விருப்புக்கும்
நமக்குமான இடைவெளி.

III

உள்நுழைகையில்
இருளாகவும்
வெளிக் கிளம்புகையில்
வெளிச்சமாயும்
இருக்கிறது வீடும் வாழ்க்கையும்.

25.2.11

நிழல்



I
போய்வருகிறேன்
என்று ஒவ்வொரு முறை
சொல்லும்போதும்
உயிர் பெறுகிறது
மரணத்தின் நிழல் தோய்ந்த
முகம்.

II

நிழற்படங்களில் சிரிக்கும்
யாரும்
அறிய முடிந்ததில்லை
எந்தப் படம்
தங்கள் மறைவுச்செய்தியில்
சிரிக்கக் கூடும்
என்பதை.

சங்கிலி



I
ஊரும் எறும்பு
கொண்டு செல்கிறது
என் கவிதையின் முதல் வரியை.
துடிக்கும் பல்லிவால் சுமக்கிறது
இறுதி வரியை.
அலைகிறது ஆன்மா
கவிதையின் வரிகளில்.

II
வார்த்தைகளைத்
தின்கிறது பேரிரைச்சல்.
பேரிரைச்சலைத் தின்கிறது மௌனம்.
மௌனத்தைத் தின்கின்றன
வார்த்தைகள் நிரந்தரமாய்.

24.2.11

துளி


I
என் தோல்விக்கான
வியூகங்களும்
உன் வெற்றிக்கான
தந்திரங்களும்
புதையுண்டு
கிடக்கின்றன
ஒரே மண்ணில்.
II
புள்ளிகளால்
கட்டுண்டு கிடந்த
கோலத்தை
மெல்ல அவிழ்க்கின்றன
பெயர் தெரியாத
எறும்புகள்.
III
அதிகாலை ரயில்
நின்ற நடுவழியில்
கண்ணீர் மறைத்தது
மலம் கழிக்கும்
பெண்களின்
துயரத்தை.

23.2.11

குமிழி


I
மரணம் குறித்துக்
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
முற்றுப் புள்ளியின்
மீது அமர்கிறது
கொசு.
II
கல்லுக்குள் சிற்பம்.
விதையில் வனம்.
துளிக்குள் கடல்.
சுவடுகளில் யாத்திரை.
துவக்கத்தில் முடிவு.
ஒன்றில் எல்லாம்.
III
பிறப்பு. மழலை.
மையல்.கவிதை.
இசை.கோபம்.
புணர்ச்சி.பிரிவு.
விருந்து.வியாதி.
இளமை.பயணம்.
முதுமை.தனிமை.
மரணம்.
எல்லாம்
பொழுதுகளில்.
வாழ்வு என்றென்றும்.

22.2.11

காளான்


I
இசையின் எல்லை
வெறுமையும்
சில கண்ணீர்த் துளிகளும்.
II
கொய்யாத பூக்களின்
பரவசத்தை 
வண்டு சொல்கிறது
காற்றிடம்.
III
பின்னிரவில்
தவளைகளை
தேவதைகளாக்குகிறது
அதன் சங்கீதம்.
IV
கதவைத் தட்டி
நான்தான் என்றாய்.
நீதான் என
நான் எண்ணாத போது.
V
முட்டை-
வெளிப்புறம் உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம் உடைகையில்
உயிர் பிறக்கிறது.
VI
காலடிகள்
யாருடையதாயினும்
சலனமின்றிப்
படிக்கட்டுகள்.
VII
விட்டில் பூச்சிக்கு
உண்டா
காலையும்-மாலையும்?
VIII
காற்றில் அலையும்
நெருப்பின் சுடர்.
வண்ணத்துப்பூச்சி.
IX
சாலையைத்
தோண்டுகையில்
தட்டுப்பட்டது
மரநிழல்களின்
சடலங்கள்.
X
மண்ணைத் துளைக்கிறதா?
மண்ணில் புதைகிறதா?
அந்த மண்புழு.

17.2.11

இடைவெளி


வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை.

80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஜன்னலின் பக்கத்தில் ஒரு சாய்வு நாற்காலியில். முகமெல்லாம் சுருக்கம். அவரது மனைவி வீட்டின் உள்புறத்தில் கையில் ஒரு புத்தகத்துடன். கனத்த நிசப்தம் கவிழ்ந்த முன்காலை.

நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகன் லேப்-டாப்பில் ஏதோ நோண்டிக்கொண்டிருக்கிறான்.

திடீரென ஒரு காகம் முதியவரின் பக்கத்து ஜன்னலில் வந்து உட்கார்ந்தது.
“என்னது இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விலக்கிப் பார்த்து ஒரு அஸ்வாரஸ்யத்துடன் மகன் சொன்னான் “அது காக்காப்பா”.

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன சொன்னே இதோட பேரு?” “இப்பத்தானே சொன்னேம்ப்பா. அது காக்கா” -மகன்.

சிறிது நேரம் கழித்து அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன சொன்னே?”. சற்று எரிச்சலான குரலில் மகன் சொன்னான்- “அது ஒரு கா-க்-கா; புரிஞ்சுதா? கா-க்-கா”.

அவரால் புரிந்து கொள்ள முடியாதது போல சிறு நெற்றிச் சுருக்கம். கண்களை இடுக்கி உன்னிப்பாய் அவனையே பார்த்தார். இப்போது உள்ளேயிருந்த அவர் மனைவியின் கவனமும் புத்தகத்திலிருந்து மகனிடம் திரும்பியது.

சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார், “அது என்னன்னுதானே கேட்டேன்?”. மகனோ பொறுமையை இழந்து அவரைப் பார்த்துக் கத்தினான், “ஒரே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்க? எத்தனை தடவைதான் பதில் சொல்றது காக்கான்னு? வயசாச்சு.இதுகூடவா உன்னால புரிஞ்சுக்க முடியாது?”

முதுமையின் விளிம்பிலிருந்த அந்தத் தந்தையின் முகத்தில் எந்தவிதச் சலனமும் வெளிப்படவில்லை. உள்ளே இருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் புராதனமான நாட்குறிப்பு ஒன்றிருந்தது.

அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. அவருடைய மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் குறிப்புகள் எழுதியிருந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த அவன் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

“என் செல்லக் குட்டிக்கு இன்றைக்கு மூணு வயசு. அவனோட ஒவ்வொரு கேள்வியும் ஆனந்தம்தான்.

இன்றைக்கு என் பக்கம் உட்கார்ந்திருக்கும்போது ஜன்னலில் ஒரு புறா வந்தமர்ந்தது. உடனே அவனுக்குக் கேள்வி கேட்கும் ஆர்வம். எத்தனை அழகு அவன் கேள்வி? “அது என்னதுப்பா அது என்னதுப்பான்னு”

‘அது ஒரு புறாடா செல்லக்குட்டி’ என்று நான் சொல்ல விடாமல் எத்தனை தடவை கேட்டிருப்பானோ? எண்ணமுடியாமல் பதில் சொன்னபடியே போனது பொழுது. என் மடியில் படுத்தபடியே தூங்கும் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்விதான் என்னை எத்தனை குதூகலப் படுத்தியது? இந்தக் குழந்தையின் வடிவில் ஆனந்தத்தின் மொழியைப் புரிய வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னேன்.”

லேப்டாப்பிலிருந்த கையை எடுத்து அப்பாவின் கைகளைக் கோர்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டான் மகன். கனக்கும் மனதுடன் கலங்கும் கண்களுடன் அந்த விரல்களில் வாஞ்சையுடன் முத்தமிட்டான்.

விதையிலிருந்து
விழுதுகளாய்
விரிந்து செல்கிறது
வாழ்க்கை.
விழுதுகளைப்
பார்க்கும் கண்கள்
புதைந்திருக்கும்
வேர்களைப்
பார்ப்பதில்லை.

12.2.11

ப்ளீஸ்.சிரிங்களேன்(பத்து தடவை)


ஐயோ! ஸென் பௌத்தமான்னு ஓடாதீங்க. இது ஸென் இல்ல. இல்ல. இல்ல. சொல்ப அல்ப ஜோக்ஸ்.

உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஜோக்ஸ் சொல்ற மாதிரி சிரமமான விஷயம் எதுவுமில்ல. ஒருத்தர அழ வெச்சுடலாம். ஆனா சிரிக்க வைக்கிறது மஹா கஷ்டம்.

பீடிகை சிகரெட்(இப்போது படத்தைப் பார்க்கவும்)கை போதும். ஜோக்குக்குப் போலாமா?

#அம்பானி வண்டியைத் தலை தெறிக்க ஓட்ட பின்னாடி இருந்த பிரேம்ஜி ”ஏம்ப்பா வண்டிய இப்பிடிப் போட்டுத் தொரத்துற? வூட்டுல ஏதாவது அவசர வேலையா? சொல்லுபா”. அதற்கு அம்பானி” வண்டி வல்லிசா ப்ரேக் புடிக்கல்லப்பா. எங்கேயாவது ஆக்ஸிடெண்ட் ஆவுறதுக்குள்ளாற சீக்கிரமா வூட்டுக்குப் போய் சேந்துடலாம்னுதான்”.

#ரத்தன் டாடா ஒரு ஆட்டோவோட முன்சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருப்பதை இன்னொரு ஆட்டோவில் பீடி வலித்தபடிச் சாய்ந்திருந்த லக்ஷ்மி மிட்டல் ”ஏம்ப்பா ஃப்ரண்ட் வீல் பஞ்சரா?” என்று கேட்க இளக்காரமாகச் சிரித்த டாடா” போர்டை நீ பாக்கல போல இருக்கு. இங்க டூ வீலர் மட்டுந்தான் பார்க்கிங் அலௌடு. கழட்டு ஒன்னோட ஃப்ரண்ட் வீலையும்” என்றார்.

#வெளிநாடு போய்த்திரும்பிய சத்யம் ராஜு தன் மனைவியிடம் கேட்டார்,” என்னைப் பாத்தா ஃபாரினர் மாதிரியா தெரியறேன்?”. அவர் மனைவி,” இல்லையே ஏன்? என்றாள். “இல்ல. கொள்ளையடிச்சுட்டு லண்டன்கிட்ட வந்துக்கிட்டிருந்தேன். அப்ப ஒருத்தி என்னப் பாத்து நீ ஃபாரினரான்னு கேட்டா.அதான் டௌட்டா இருந்திச்சு.ஓங்கிட்ட கேட்டேன்.”

#ஒரு தடவை ஹர்பஜன்சிங் தன் கேர்ள் ஃப்ரெண்டோடு ஆட்டோவில் போகும்போது ஆட்டோ ட்ரைவர் கண்ணாடியை அவளைப் பார்க்க வசதியாய் திருப்பிவைத்தார். உடனே வந்தது ஹர்பஜனுக்குக் கோபம். ”என்னோட கேர்ள் ஃப்ரண்டை கண்ணாடி வழியாப் பாக்கலாம்னு நெனச்சியா? வண்டிய நான் ஓட்டறேன். வந்து ஒக்காரு பின்னால”.

#யுவராஜ்சிங்கிடம் இண்டெர்வ்யூவின் முதல் கேள்வி.
ரு கட்டடத்துல பத்தாவது மாடில நீங்க இருக்கீங்கன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிக்கிது. உடனே என்ன பண்ணுவீங்க?
ற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

#பிந்தரன்வாலே ஒரு தடவை பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்சனைக்கு ஆதரவா ஒரு கார்ல பாம் வெச்சுக்கிட்டு இருக்கும்போது அவனோட ஃப்ரெண்ட் கேட்டான்.”கார்ல பாமை பொருத்திக்கிட்டிருக்கும்போதே பாம் வெடிச்சுட்டா என்ன பண்றது?”. உடனே “முட்டாள். அப்படி ஏதாவது ஆனா என்ன பண்றதுன்னு இன்னொரு பாம் கைவசம் வெச்சுருக்கேன்” என்று சொல்லி பாமை ஆட்டிக் காட்டினான்.

#(ஃபோனில்)
டாக்டர்! என்னோட மனைவி பிரசவவலியால துடிக்கறாங்க.
மை காட்! இது அவங்களோட முதல் குழந்தையா?
ல்ல. நான் அவங்க புருஷன்.

#ஒரு பெண்ணை ஒரு பையன் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் (நான் மட்டும் நிமிர்ந்து பார்க்கையில்) சட்டென்று முத்தமிட்டு விட்டான்.
டப்பாவி! என்ன பண்ற நீ?
ச்சையப்பால ஃபைனல் இயர் விஷுவல் கம்யூனிகேஷன்.

இந்த ஜோக்ஸுக்கெல்லாம் சிரிச்சு முடிச்சுட்டீங்கன்னே வச்சுக்குவோம். இப்போ பரிசுக்குரிய கேள்வி.

இந்த இடுகையில் ஆறு பொய்கள் சொல்லியிருக்கிறேன். அதைச் சரியாகவோ கிட்டத்தட்டவோ கண்டு பிடிப்பவர்களுக்கு நீராராடியாவிடம் சொல்லி மத்திய சர்க்காரில் வெகுமதி வாங்கித் தரப்படும்.

ராசா ராடியா நம்பர் ப்ளீஸ்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...