15.6.11

பாட்டி(க்கு) வைத்தியம்



இன்று காலை தஞ்சாவூர்க்கவிராயரோடு அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று அதிகாலை எழுந்து எழுதிய ஒரு சிறுகதையைப் பற்றிச் சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு நான் சொன்னேன் “இதை நீங்கள் எழுதியிராவிட்டால் நான் எழுதியிருப்பேன்” என.

பேச்சு தொடர்ந்தது. அது இந்த இடுகையானது.

1993ல் படுக்கையில் இருந்த என் பாட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். என் மேல் அதீதமான ப்ரியம் எல்லாப் பாட்டிகளுக்கும் பேரன்கள் மேல் இருப்பதைப் போல். அவருக்கு கிட்டத்தட்ட எழுபது வயதாகிய வேளை.

வயதின் சுமை தாளாமல் கால் பின்னக் கீழே விழுந்தார். அதுதான் அவரின் கடைசி நடமாட்டம். அதன் பின் தான் இறந்துபோய்விடுவோம் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமானது.

ஒரு காரடையான் நோன்பு முடியும் வரை காத்திருந்தார். அது முடிந்து என் அம்மா அவர் வாயில் நைவேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஊட்டிவிட்டு அதை ருசித்தபின்  ”நன்னாப் பண்ணியிருக்கே. தீர்க்க சுமங்கலியா இரு” என்று ஆசீர்வதித்துவிட்டு இறந்துபோனார்.

இப்போது போலெல்லாம் முணுக்கென்றால் டாக்டரிடம் ஓடும் பழக்கமும் கிடையாது. (இப்போதும் அப்படித்தான்).பாட்டி ஒரு நாளும் டாக்டரிடம் போனவர் இல்லை. எல்லாமே கைவைத்தியம்தான். ஒரு நாளும் உடம்பு முடியவில்லை என்று படுக்கிற ஜாதியும் இல்லை. ஆனாலும் கடைசி நாட்களில் பாட்டிக்கு வீட்டுக்கு டாக்டரை வரவழைத்து தன்னை அவர் பார்த்துவிட்டுச் சென்றால் மனசுக்கு கொஞ்சம் தேவலையாய் இருப்பதாய் உணர்ந்தார்..

பாட்டிக்குக் கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இரவுகளில் பெருங்குரல் எடுத்து ராத்திரி 11 மணிக்கு மேல் தனக்கு என்னவோ செய்கிறது என்று ஆரம்பித்தால் அன்றைக்கு சிவராத்திரிதான். இது அடிக்கடி நடப்பது பழக்கமாகியிருந்தது.

ஒரு நாள் ராத்திரி நல்ல மழை. பாட்டியின் படுத்தல் ஆரம்பித்தது. கரண்ட் வேறு இல்லை. இன்வெர்ட்டர் வசதியெல்லாம் கிடையாது. லாந்தரின் அல்லது சுவாமிஅறை குத்துவிளக்கின் வெளிச்சம் வீடெங்கும் பரவியிருக்கும். அந்த வெளிச்சத்தில் பாட்டியை விட பாட்டியின் படுத்தலை விட அவரின் நிழல் சுவற்றில் ஆடுவது இடி மின்னலுக்கு நடுவில் பயங்கர பீதியைக் கிளப்பும்.

நான் படுக்கையறைக்குப் போய் என் அப்பாவின் தொளபுளா சட்டையைப் போட்டுக் கொண்டு பாட்டியை மெல்லத் தொட்டேன். சுருட்டி வாரி எழுந்து கொண்டு ”வாங்கோ டாக்டர்! ரொம்ப நேரமா என்னமோ பண்றது! மூச்சு விட முடியல. மாரெல்லாம் ஒரே வலி” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது டாக்டர்தானா என்று மேல்க்கோட்டின் உயரத்தைக் கையால் தொட்டுப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.

அதன் பின் கையில் எழுதிக்காட்டித்தான் வைத்தியம். நாடி பிடித்துப் பார்த்துவிட்டு ”எல்லாம் சரியாகிவிடும். மாத்திரை தருகிறேன்” என்று கையில் எழுதிக்காட்டிவிட்டு சமையலறையிலிருந்து ராத்திரி வேளையில் பாட்டிக்குக் கொடுக்கக் கூடாது என்று என் அம்மா மறைத்து வைத்திருக்கும் சூட பெப்பர்மிண்ட்டை (அதற்குப் பெயர் இப்போதைக்குப் போலோ) பாட்டியின் வாயில் மாத்திரை என்று சொல்லிப் போட்டதுதான் தெரியும். அவ்வளவுதான்! வியாதி பறந்துவிட்டது. ”என்னதான் அதிசய மாத்தரையோ? வலியெல்லாம் போன எடம் தெரியலை. நன்னாயிருக்கணும். நீங்க படுத்துக்கோங்கோ டாக்டர்” என்று தான் ஏதோ மருத்துவமனையில் இருக்கும் நினைவோடு அன்புக் கட்டளையிட்டார்.

அதற்குப் பின் திரும்பவும் என்னைக் கூப்பிட்டார்.”டாக்டர்! தப்பா எடுத்துக்காதீங்கோ. எனக்கு ரெண்டாவது பேத்தி ஒருத்தி இருக்கா. இன்னும் கல்யாணம் பணணலை. கவர்ன்மெண்ட் உத்தியோகம்.ஆனா கொஞ்சம் வாய் நீளம். நீங்க பண்ணிக்கறேளா? மெதுவா யோசிச்சுச் சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டுப் போர்த்திப் படுக்க காலை விடியும் வரை இடைஞ்சல் இல்லாத தூக்கம் எல்லோருக்கும்.

இது அடிக்கடி நிகழ அடிக்கடி சூட பெப்பர்மிண்ட் வழங்கப்பட்டு பாட்டி சொஸ்தமாயிருந்தார்.

தன் மரணத்துக்கு முந்தைய கடைசி ஒரு மாதமும் அடிக்கடி நினைவு தப்பியவராகவும் சம்பந்தாசம்பந்தமில்லாது எப்போதோ  நடந்தவற்றையும் சொல்லிப் புலம்பியபடியும் இருப்பார்.

“மேஸ்திரி வரலைன்னா எப்பிடி இன்னிக்கு வேலை நடக்கும்? மொதலாளிக்கு என்ன பதில் சொல்றது?”

”கிட்டக்கப் போகாதே. புலி அடிச்சுடும். சொன்னாக்கேளு”.

”பண்டரிபுரத்துல யாருக்கும் தெரியாம என்ன விட்டுட்டு வந்தா எனக்கென்ன வீட்டுக்கு வழி தெரியாதுன்னு நெனச்சியா?

இதெல்லாம் பாட்டியின் இறுதி நாட்களில் அடிக்கடி உதிர்த்த வாக்கியங்கள்.

ஒவ்வொரு நாளும் அநேகமாக இரவு ஒன்பது மணிக்கு-அவருக்கு நேரம் யாராவது சொன்னாலொழியத் தானாகத் தெரியாது-என்னைக் கூப்பிட்டு ”ஜன்னலைத் திறந்து வை. மசூதில தொழறாங்க. உனக்குக் கேட்கலயா?”என்று கேட்டபடியிருந்தார்.

காதுக்கும் கண்ணுக்கும் எட்டும் தொலைவில் மசூதியெதுவும் என் வீட்டருகே கிடையாது என்பதும்- என் இத்தனை நாள் பாட்டியின் வாயிலிருந்து மசூதி என்ற சொல் வந்து நான் கேட்டதில்லை என்பதும் தான் இந்த இடுகையின் கடைசி வரிகள்.

(பாட்டியின் படம் என் கணிணியின் கோப்பில் இல்லாததால் எல்லோருக்கும் பிடித்த கே.பி.சுந்தராம்பாளின் நிழற்படத்தைப் பொருத்தமின்றியும் பொருத்திவிட்டேன். பொறுத்தருள்க.)

14.6.11

பாவனை




















1.
முதலாவது
சொன்னபடிக்குப்
பாடம் படிக்கவில்லை.
அடுத்ததோ
சாப்பிடுவதற்குப்
பிடிவாதம்.
-’இரண்டையும்
வைத்துக் கொண்டு
எப்படித்தான்
சமாளிக்கப்போகிறேனோ’-
அலுத்துக்கொண்டது
அம்மா வெளியில்
போயிருந்தபோது
பொம்மைகளின்
அம்மாவாகியிருந்த
குட்டிப் பெண்.

2.
மூடிக்காட்டிய
குழந்தையின்
விரல்களைப் பிரிக்க
ஒண்ணுமில்லியே
என்று சிரித்தது.
குழந்தைகளால்
மட்டும்தான்
இயலுகிறது
ஒன்றுமில்லாததைப்
பார்க்கவும் சிரிக்கவும்.

3.
பூவா தலையா
என்றான் பெரியவன்.
பூ என்றதும்
தலை விழ
இல்லையில்லை
தலை என்றான்
சின்னவன்.
பூவும் தலையும்
ஒரு பாவனைதான்
எப்போதும்
சின்னவன்
ஆடத் துவங்குமுன்.

13.6.11

மாயாலோகம்


















ஒரு காகிதத்தின் மையத்தில்
மானை வரைந்து-
தோன்றிய இடங்களிலெல்லாம்
மேகங்களையும்
புல்வெளிகளையும்
வரைந்தது குழந்தை.

பேசியபடியே கடந்துபோன
அப்பா அம்மாவால்
இம்மியும் கலையவில்லை
-புதரின் பின்னே
மானை வேட்டையாடக் காத்திருந்த-
புலியின் உறக்கம்.

சப்தமேதும் எழுப்பாமல்
மான் புற்களை
வேட்டையாடி முடித்த பின்

இடி மின்னலோடு
கடும்மழை பெய்யத்
தொடங்கியிருந்தது
குழந்தையின்
தூரிகையிலிருந்து.

11.6.11

கடலின் இசை




















1.

அலைகள்
நினைவுறுத்துகின்றன

விடாது கேட்கப்படும்
கேள்விகளின் இரைச்சலை.

கரை
நினைவுறுத்துகிறது

ஒருபோதும்
கேட்கப்படாத
கேள்விகளின் நிசப்தத்தை.

2.

கடலுக்குள்
மீன்கள் இருக்கும்போது
ஒரு மாதிரியும்

அவை பிடிக்கப்பட்டுப்
பிரிந்தவுடன்
வேறு மாதிரியும்

தோற்றம் தருகிறது
அலைகளின் சங்கீதம்.

3.

முதன்முதலில்
தொட்டுப்
போன அலையைத்
தேடிக்கொண்டிருந்தேன்.

முதன்முதலில்
தொட்டுப்போன
கரையைத்
தேடிக்கொண்டிருந்தது
அலை.

4.

ஆவேசமாய்
மோதியபடி
இருக்கின்றன
அலைகள்.

அமைதியாய்
ஏற்றபடி
இருக்கின்றன
பாறைகள்.

அலைகள்
பாறையைப்
பிரிவதுமில்லை.

பாறைகள்
அலையை
வெறுப்பதுமில்லை.

10.6.11

பிற்பகல்






















தசாவதாரம் என்கிற கமலின் பத்து முகம் வெளியான பின் ஆறுமுகம் தொடங்கி எல்லோரிடமும் அடிபட்ட வார்த்தை கயாஸ் தியரி அல்லது கயாஸ் கோட்பாடு.

என்றோ நிகழ்ந்த ஒரு மிகச்சிறிய நிகழ்வு-காரணம்-விளைவு சுழற்சியில் சிக்கி காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டென்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யும் ஒரு கோட்பாடு.

இதற்கு மேல் வேண்டாம். கொட்டாவி அல்லது கோபம் வரும்.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பினால்
உண்டாகும் மென்காற்று காலப்போக்கில் இந்து மஹாசமுத்திரத்தில்  சுனாமியாய்த் தாக்கலாம் என்று ஒரு கவிதையாய்ச் சொன்னால் இது இன்னும் மனசுக்கு நெருக்கமாய் இருக்கும்.

இந்தக் கோட்பாட்டை இன்றைக்கு ராமாயணக் கதை ஒன்றால் பார்க்கலாம்.

ச்ரவணன் என்பது ஒரு சிறுவனின் பெயர். அவனது பெற்றோர்கள் மிகவும்  வயதானவர்கள். இருவரும் பார்வையற்றவர்கள். தங்களின் மகன்  உதவியில்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய
இயலாது. ச்ரவணனின் தந்தையார் ஒரு முனிவர். அவர்கள் மூவரும் ஒரு  வனத்தில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வனத்தில் தமிழ்நாட்டைப் போலவே நீரின்றி வறட்சி  ஏற்பட்டது. ஆகவே வேறு வனத்தைத் தேடிப் புறப்பட்டனர். பார்வையற்றும் நடக்க இயலாமலும் சிரமப்படும் தன் பெற்றோருக்கு
ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் ச்ரவணன். 

இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் அவர்களை அமரவைத்து  அத்தட்டுகளைத் தராசு போல் ஒரு நீண்ட வலுவான கழியில் பொருத்தி
அவர்களைத் தன் தோளில் தூக்கிக் கொண்டான்.

வெகு தூரம் நடந்து மற்றொரு வனத்தை அடைந்தனர். 

ச்ரவணனின் பெற்றோர் தாகமிகுதியால் நீர்பருக விரும்பினார்கள்.
நீர்க்குடுவையில் நீர் மிகவும் குறைவாக இருந்தபடியால் இருவரின்  தாகத்தையும் நீக்க எண்ணிக் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத்  தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் ச்ரவணன்.

சீக்கிரம் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர்.

அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது.  அயோத்தி மன்னன் தசரதன்  காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காகக் கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களை வேட்டையாடக் கானகம்  வந்திருந்தான். 

மாலைநேரம். இருள் கவிழத் துவங்கியது மெதுவாக. மரத்தடியில்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் தசரதன். அவன் அருகே மிருகம் ஒன்று  தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது.

துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். அம்பைச் செலுத்திய மறுநொடியே "அம்மா!" என்ற அலறல் கேட்டது.

மனிதக் குரலைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசையில்  ஓடினான். அங்கே ச்ரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம்  தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று  புலம்பித் துடித்தான்.

தசரதனைத் தடுத்த ச்ரவணன்,

”மன்னா! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு  இருப்பார்கள்.நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல்  மடிகிறேன். நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து  விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான். 

ச்ரவணனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நீரை எடுத்துக்கொண்டு  அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலை
வெளிப்படுத்தாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். 

தசரதனின் கை பட்டதுமே "யார்  நீ?"என்று குரல் கொடுத்தாள் அந்தத்தாய்.  இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு    என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான்  தவறாக அம்பெய்திய காரணத்தால் ச்ரவணன் மாண்ட  செய்தியைக்  கூறினான். 

புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் 

"ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து  தவித்து உயிர் விடுவது போலவே நீயும்  எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர  சோகத்தாலேயே உயிர் விடக்கடவது. இது  எங்கள் சாபம்" என்று  சபித்துவிட்டு உயிர் விட்டனர்.

பின்னாளில் தசரதன் ராமனையும் லட்சுமணனையும் வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும்  சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் தசரதன் தனிமையில் தவித்துப் பின்  உயிர் விட்டான்.

இந்திய மரபில் இதுபோன்ற முற்பகல் செய்யின் சமாச்சாரங்கள் நிறையவே இருக்கின்றன.தவறை மன்னிக்கும் போதனையை மதங்கள் வலியுறுத்தினாலும் இன்ஸ்டண்ட் சாபங்கள் நம் மரபின் வாக்கின் வலிமைக்கான அடையாளங்கள். அந்த சாபம் நீங்கும் வரை வாழ்தல் எனும் அனுபவத்தையும் அவை சேர்த்தே போதிப்பதாய் உணரத் தோன்றுகிறது.

அறியாமல்
கொன்றது
தசரதனின்
வில்லம்பு.
அறிந்தே
கொன்றது
முதியோரின்
சொல்லம்பு.
செயலுக்கு முன்
சிந்தனை.
இல்லாமல்
போனால்
நிந்தனை.

8.6.11

ஒரே கனா

























சலசலக்கும் நதியின் ஓசை உங்கள் காதுகளை அடைகிறது இப்போது.

வேட்டைக்காரர்களின் சுவடுகள் பாவாத-கடவுளின் அற்புதம் பரவிய-நட்பு பாராட்டும் மிருகங்களும் அபூர்வ மூலிகைகளும் நிறைந்த வனத்தில் நிற்கிறீர்கள்.

அதோ மனம் மயக்கும் இனிமையான காற்றில் அசைந்தபடி நிற்கும் மூன்று இளஞ்செடிகள் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்கிறீர்கள்.

முதல் செடிக்கு எத்தனை அழகான ஒரு கனவு.

“நான் வளர்ந்து மிகப் பெரிய மரமாகி இந்த உலகத்தின் மிகச் சிறந்த அரசனின் முத்துக்கள்-மாணிக்கங்கள்-வைர வைடூரியங்கள்-நிரம்பி வழியும் ஒரு பேழையாக மாறுவேன்.”

அதற்கடுத்த செடியின் அற்புதமான கனவு வெளிப்படுகிறது.

“நான் வளர்ந்தபின் வெட்டப்பட்டு ஒரு பெரும் போர்க்கப்பலாவேன். கடும் புயலோ கொடும் மழையோ என்னில் பயணிக்கும் வீரபராக்கிரமம் நிறைந்த உலகத்தின் மிகச் சிறந்த மன்னனையும் அவன் படைகளையும் சுமந்து செல்வேன்.”

விசித்ரமான கனவு மூன்றாவது இளங்குருத்துக்கு.

“என்னை யாரின் கோடரியும் வீழ்த்தாது நான் வானைத் தொட்டு வளர்வேன். கடவுளின் பாதங்களைத் தொடுவதாய் இருக்கும் என் உயரம். உலகே வியக்கும் அபூர்வ மரமாகி சரித்திரத்தின் பக்கங்களை நிரப்புவேன்”.

கனவுகள் வளர்ந்தது. காலம் தேய்ந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு மூன்று மரவெட்டிகள் அந்தக் காட்டிற்கு வந்தனர். கனவுகளைச் சுமந்து நின்ற அந்த மூன்று மரங்களின் அடியில் நின்றனர்.

முதல் மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரவெட்டி அதை ஒரு தச்சனிடம் கொண்டு சேர்க்க ஒரு மாணிக்கப் பேழையாகும் கனவு நிறைவேறக் காத்திருந்த அந்த மரம் இறுதியில் மாடுகளுக்கு வைக்கோல் நிரப்பி வைக்க உதவும் மரப்பெட்டியாய் உருக்கொண்டது.

இரண்டாவது மரத்தை மற்றொரு மரவெட்டி வீழ்த்தி அதை ஒரு நல்ல விலைக்குத் துறைமுகத்தில் விற்றான். போர்க்கப்பலாக வேண்டிய அதன் கனவு ஒரு சாதாரண மீன்பிடிப்படகாய் மாற்றம் கொண்டது.

மூன்றாவது மரத்துக்கோ தான் வெட்டி வீழ்த்தப்பட இருக்கிறோம் என்கிற நினைப்பே சகிக்க முடியாததாக இருந்தது. தன் கனவின் மீது ஒவ்வொரு முறையும் கோடரி விழுந்ததை எண்ணி எண்ணித் தவித்தபடியே வெட்டுண்டது. பல பாளங்களாய்  அதன் கனவு பிளவுண்டு இருண்டு கிடந்த யாரின் கவனிப்புமற்ற ஓர் அறையில் இட்டுப் பூட்டப்பட்டது.

கனவுகள் எல்லாம் சிதறுண்டு போய் வெவ்வேறு வடிவங்களில் மாற்றமுற்று காலத்தின் பிடியில் தங்களை ஒப்புக்கொடுத்த போதும் கனவின் பீளைகள் அவற்றின் கண்களில் மீதமிருக்கத்தான் செய்தன.

வருடங்கள் சென்றபின் இன்று கடுங்குளிரால் உறைந்த ஒரு இரவில் நுழைகிறீர்கள்.

 ஒரு நிறைமாத கர்ப்பிணியும் அவள் கணவனும் அந்த மாட்டுத் தொழுவத்தைக் கடக்கும் வேளையில் தாங்கமுடியாத பிரசவ வலி ஏற்பட்டு அந்தத் தொழுவத்தில் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அந்தத் தாய்.

குளிருக்கு அடக்கமாக வைக்கோலால் நிரம்பிய அந்த முதல் மரத்தின் பெட்டியில் கதகதப்பாக இருக்கும்படி அந்தக் குழந்தையை அந்தத் தாய் இட்டபோது முதலாம் மரம் உலகத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தைத் தான் சுமப்பதாய் உணர்ந்தது.

சில வருடங்கள் கழிகின்றன.

ஒரு மழைக்காலத்தின் பகல் பொழுதில் கூட்டமாய் வந்த சிலர் அந்த இரண்டாவது மரத்தால் செய்த படகின் மீதேறிக் கடலில் செல்வதைப் பார்க்கிறீர்கள்.

நடுக்கடலில் அந்தப் படகு பயணிக்கும்போது கடுமையான புயல் படகை அலைக்கழித்துக் கவிழ்க்க இருக்கிறது. இரண்டாவது மரம் அவர்களை எப்படியாவது கரை சேர்த்துவிட விரும்பியது.

படகில் பயத்தோடு பயணித்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார்கள். அவர் கடலை நோக்கிச் சாந்தமான குரலில் கையை உயர்த்தி அசைத்தபடியே அமைதி-அமைதி என்றார். கடல் குளம் போல் அமைதியானது. இரண்டாவது மரம் அப்போது அரசர்களின் அரசரைச் சுமப்பதாக உணர்ந்தது.

இறுதியாகச் சில வருடங்கள் கழித்து இருட்டறையில் சிறைவாழ்க்கையை அனுபவித்த மூன்றாவது மரத்துக்கு விடுதலை கிடைத்தது. அதை ஒரு மனிதர் சுமக்க முடியாமல் சுமந்து சென்றார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் கொடும் சொற்களால் அவரை நிந்தித்தனர். சொற்கள் செய்ய விட்டதை சவுக்கால் அடித்துப் பூர்த்தி செய்தார்கள்.

அவரை அம்மரத்தின் பாளங்களில் ஆணிகளால் அறைந்து மலையுச்சிக்குக் கொண்டு சென்று நட்டு வைத்தனர். வானுயர எழும்பி நிற்பதாய் உணர்ந்த அந்த மரம் கடவுளுக்கு மிக நெருக்கமாய் இருப்பதை உணர்ந்து விம்மியது.

ஒரே கனா
என் வாழ்விலே
அதை நெஞ்சில்
வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும்
நாள் வரை உயிர்
கையில்
வைத்திருப்பேன்.
வானே என் மேலே
சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
வானும் மண்ணும்
தேயும் வரை
வாழ்ந்து காட்டுவேன்.

(வைரமுத்துவின் இறவாப் புகழ் கொண்ட-எனக்கு மிகப் பிடித்த கவிதையின் இறுதிவரியை மானசீகமான அனுமதியுடன் கதைக்கேற்ற மாற்றத்துடன்.)     

7.6.11

ராவண் லீலா




 

















மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி பார்த்தேன்.

ஊடகங்களின் முதிர்ச்சியும் அரசியல்வாதிகளின் முதிர்ச்சியும் எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண்லீலா  அதிர்ச்சியளித்தது.
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் எழுப்பிவிடப்பட்டு விரட்டியடிக்கப் பட்ட அக்கிரமக் காட்சி நாம் எந்த மாதிரியான பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம் என்பதைக் காட்டியது.

அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். அவர்கள் ஊழலுக்கும் கறுப்புப் பண மீட்புக்கும் எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அங்கு கூடியிருந்தார்களா என்பதையும் விட-

அந்த கூட்டத்தைக் கூட்டிய ராம்தேவின் பின்னணி மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்-பஞ்ரங்தள்-பாஜக- ஆதரவு இருந்தது என்பதையெல்லாம் ஆராய்வதை விட-

பாதுகாப்பற்ற ஒரு தலைநகரில் தலைக்கு மேல் பாதுகாப்பான கூரையை நம்பி பெட்டி படுக்கையுடன் வந்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை அன்றிரவில் என்னவாயிருந்திருக்கும்? அவர்கள் அந்த இரவின் சொச்சத்தை எப்படிக் கழித்திருப்பார்கள்? ஊருறங்கும் வேளையில் தங்களின் இயற்கை உபாதைகளுக்கும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கும் என்ன செய்திருப்பார்கள்? என்ற ஆதங்கம் எவரொருவர் வாயிலிருந்தும் உதிரவில்லை.

வெளிப்படையாகச் சொன்னால் எதையோ நம்பிவந்த அவர்களை நடுத் தெருவில் நிறுத்தியது இந்த அரசு.

தங்களின் கட்சிக்கு ஏற்ற வகையில் கருத்துக்களைச் சார்ந்தோ எதிர்த்தோ வளவளத்துக் கொண்டிருந்த எந்த ஒரு அரசியல்வாதியிடமும் பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்த கோபமோ அக்கறையோ இல்லை.

சந்தோஷ் ஹெக்டே-ஸ்வபன் தாஸ் குப்தா-சந்தன் மித்ரா மற்றும் மணிசங்கர் அய்யர் இவர்களின் பேச்சுக்களில் மட்டுமே விருப்பு வெறுப்பற்ற உண்மையான பார்வை காணக்கிடைத்தது.

பல்லாயிரக் கணக்கில் கூடும் கூட்டம் எந்த நம்பிக்கையைச் சார்ந்ததாகவும் இருக்கட்டும். யார் தலைமையில் வேண்டுமானாலும் கூடட்டும். அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செய்கைகளில் இறங்குவது அரசின் முகத்தில் நம்மைக் காறி உமிழ வைக்கிறது.

இந்த மூர்க்கத்தனமான முடிவை எடுத்தது யார் உத்தரவின் பேரில்? நான்தான் தவறிழைத்தது. இந்த விளைவுகளுக்கு என் உத்தரவுதான் காரணம் என்று தைரியமாகப் பொறுப்பேற்க ஊடகங்களின் ஒலிபெருக்கியின் முன் பேசியபடியே பிறரைக் குற்றம் சாட்டும் ஆளும் கட்சியின் பயில்வான்களுக்கோ அரசின் நிர்வாக ஜாம்பவான்களுக்கோ தைரியமில்லை.வெட்கம் கெட்டவர்கள்.

இதே அரசு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அடுத்த தேர்தல்களில் ஓட்டுக் கேட்கப் போகும்? அல்லது ஓட்டுக் கேட்கும் போது இது ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஆட்கள்-இது பா.ஜ.க.வின் ஆட்கள்-இது இடது சாரி என்று பிரித்துப்பார்த்துக் காலில் விழுவார்களா?

நாட்டின் மக்கள் ஒழுக்கத்தையும் நேர்மையையும் யாரிடமிருந்தோ எதிர்பார்க்கிறார்கள். யாரிடம் அது கிடைக்கும் என்று தேடும் போது எந்தக் குரல் சமீபித்திருக்கிறதோ அந்தக் குரலை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

ஆளும் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் தங்கள் வாழ்வில் தினம்தினம் எதிர்கொள்ளும் அவலங்களின் தொடர்கதைக்கு முடிவாக பற்றிக்கொள்ள ஒரு கொடியைத் தேடுகிறார்கள்.

அந்த நம்பிக்கை அவர்களின் உரிமை. அதைத் தீர்மானிக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை. அதே போல் அது யாருக்கும் இடையூறாக இல்லாத போது அதைத் தடுக்கும் அல்லது துரத்தும் உரிமையும் யாருக்கும் இல்லை.

இந்த அநீதிக்கான தண்டனையைத் தர  நினைவோடு காத்திருக்கிறது காலம்.

4.6.11

எய்யாத அம்பு

அதோ சிவப்பு நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டுக்கொண்டு ஒரு இளைஞன் நடந்து போகிறானே அவனைப் பற்றித்தான் இந்தக் கதை.

முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான். தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிடுவான். அதற்குப் பிறகு அவர்களிடம் வருத்தப்படுவான்.

போகப்போக அவனை சுற்று வட்டாரத்தில் யாருக்கும் பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். அவனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு. ஆனால் எப்படி என்றுதான் தெரியாமலிருந்தது.

அவனுடைய அப்பாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு ஒரு யோசனை செய்தார். 


ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரம் வரும்போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றும்படி அறிவுரைத்தார்.

முதல் நாள் மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு போகுமுன் கோபவெறி குறைந்து போய் மரத்தில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.


சில நாட்களில் மரத்தில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் ஏற்பட்ட மாற்றத்தைச்  சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.


அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் சுத்தியலைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு அப்பாவை மரத்தைப் பார்க்கக் கூட்டிப்போனான் இளைஞன். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் உண்டான வடுக்களை மகனுக்குக் காட்டி-


"கோபம் வந்தால் நிதானமிழந்து பேசும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்தச் சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்.அதனால் பேசும் முன் பேசாதிருக்கப் பழகு" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

கொட்டிய வார்த்தைகள்
திரும்ப வாராது.
கூரிய அம்பாய்த்
துளைக்காமல்
ஓயாது.
சுட்ட செங்கல்
மணலாகாது.
விதைத்த வினை
தினையாகாது.
பேசும் முன்பு
பேசாதிருக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது. 

3.6.11

ஜன்னல்

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திசைக்கு சற்றே வலதுபுறம் தெரிகிறதா ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்?

அது ஒரு பெரிய மருத்துவமனை. அதன் ஏழாவது தளத்துக்கு நாம் செல்கிறோம். 

ஒரு அறையில் இரு தீவிரமான வியாதிகளால் பீடித்த நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு சிறு தடுப்புச் சுவர். 

ஒருவரின் படுக்கை அருகே ஒரே ஒரு ஜன்னல். இவரை ஜான் என்று கூப்பிடலாம். மற்றவருக்கு - இவர் ராபர்ட் - அதுவும் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமையே இருவரின் துணை.

புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் ஜான். ராபர்ட்டோ புற்று நோயுடன் கடுமையான பக்கவாத நோயாளி. நாட்கள் தேயத் தேய இருவரும் நண்பர்களாகி விட்டனர். ஒருமுறை ராபர்ட் ஜானிடம் சொன்னார்.

"உனக்காவது வெளி உலகைப் பார்க்க - பொழுது போக்க ஒரு ஜன்னல் இருக்கிறது. என் நிலைமையைப் பார். ஒவ்வொரு நொடியும் நரகம்.”

“நீ சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். இனி நமக்குள் ஒரு ஒப்பந்தம். நான் என்னவெல்லாம் பார்க்கிறேனோ அதையெல்லாம் காட்சிக்குக் காட்சி உனக்கு விவரிப்பேன். போதுமா நண்பா?”

அன்று முதல் ஜான் தான் பார்க்க நேர்ந்தவற்றையெல்லாம் ராபர்ட்டுக்குப் படு சுவாரஸ்யமாகக் கூறி வந்தார்.

”ஹா! என்ன ஒரு ரம்யமான சூழல்! ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய நிலவின் மது பொழியும் சலனமற்ற ஏரி. நடுவில் சிறு தீவு. ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா. காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்."

ராபர்ட்டுக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும். அதுவும் ஜானின் மொழியில் தன்னையே மறந்து தன் நோயை மறந்து கேட்டுக்கொண்டிருப்பார் ராபர்ட்.

மற்றொரு நாள் ஆனந்தமான ஒரு காட்சியை ஜான் விவரித்துக் கொண்டிருந்தார்.

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் வாசம் நிறைந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தபடி ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.மணப்பெண் முகத்தில் அடடா! அப்படி ஒரு வெட்கம்.!"

ராபர்ட்டுக்கு ஊர்வல ஆர்ப்பாட்டங்கள் எதுவும் கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை ஜான் மூலம் ஏக்கத்துடன் காதுகளால் நன்கு அனுபவிப்பார்.

ஒரு நாள் நள்ளிரவில் உறக்கத்திலேயே ஜான் மரித்துப் போனார்.

ராபர்ட்டுக்கு ஜானின் இழப்பைத் தாங்க முடியவில்லை ஒருநாளைக்கு மேல். 

மறுநாள் செவிலி வந்தபோது தன்னால் தனிமையின் வெறுமையைத் தாங்க முடியவில்லை. முடியுமானால் ஜன்னல் ஓரமாகவாவது தன் படுக்கையை மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார்.

ஜானின் மறைவை இப்படியாவது சமாளித்துக் கொள்வேன் என்று எண்ணியபடியே தன் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்லத் தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே பார்க்க-

அங்கே ஒரு பெரிய வெள்ளை மதிற்சுவர் தெரிந்தது.

ஜான் இருந்த போது ஜன்னல் வழியே பார்த்து விவரித்த காட்சிகளைப் பற்றிக் குழம்பியபடியே செவிலியிடம் சொன்னார் ராபர்ட்.

செவிலி ராபர்ட்டுக்கு மருந்தைக் கொடுத்தபடியே சொன்னாள்.

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது ராபர்ட். கடுமையான புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்திருந்தார் ஜான்”

காட்சிகளைக் காணக் 
கண்கள் தேவையில்லை.
தொலைவைக் கடக்கக் 
கால்கள் தேவையில்லை.
பரிவு காட்டித்
தலைமுடி கோதக்
கைகளும் தேவையில்லை.
பிறரையும் மலர்த்தும்
மகிழம்பூ மனமும்
பிறருக்காய் உதிர்க்க 
ஒரு துளிக் கண்ணீரும்
இருந்துவிட்டால்.

2.6.11

கரைந்த காக்கை.






















இது நன்நம்பிக்கையின் வேரை அரிக்கும் மூடநம்பிக்கையின் கதை.

அரசன் ஒருவனுக்கு சகுனங்களில் பலமான நம்பிக்கை உண்டு. அரண்மனையின் சோதிடர் ஒருவர் இந்த மூடநம்பிக்கையால் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் இப்படித்தான். ”அரசே! அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அந்தநாளில் நினைக்காததெல்லாம் நடக்கும். நடப்பதெல்லாம் சிறக்கும்”' என்று நம்பிக்கை ஊட்டி உசுப்பேற்றினார்..

மன்னன், “யாரடா அங்கே? என்று சேவகனை அழைத்தான். காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். 


அவ்வளவுதான். தினமும் பொழுது விடியும் முன்பே சேவகனுக்கு கெட்ட காலம்தான். எழுந்ததும் எழுந்திராததுமாய் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்துக் குதித்தான்.

"அடடா! நல்ல சகுனம், இன்றைக்கு நம் காட்டில் மழைதான். மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வும் பரிசுகளும் கொடுப்பார்” என்று மகிழ்ச்சி பொங்கிவழிய மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு மன்னனும் துள்ளி எழுந்தான். சேவகனுடன் அந்த இடத்துக்கு விரைந்தான். அதற்குள் ஒரு காக்கை அவசரமாய் எங்கோ கிளம்பிப் போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் வழக்கம்போல் வரவேண்டியது வந்து விட்டது. தளபதியை அழைத்து ”இந்தப் பொறுப்பில்லாத புளுகுணி சேவகனுக்குப் பத்து கசையடி கொடுத்து அதோடு அரண்மனையைச் சுற்றி நூறு தடவை ஓடச்சொல்” என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்கத் தொடங்கினான்.

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.

”நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடியும் நூறு சுற்றும்”' என்று மிரட்டினான்.

சேவகன் சொன்னான்.

'மஹா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது. சகுனமும் பலித்துவிட்டது” என்றான்.

இந்தக் கதையின் முடிவில் மன்னரை சுளீரென்று மின்னலும் அரண்மனை சோதிடரை டமார் என்ற இடியும் முறையே தாக்கின.

நம்பக்கூடாததை
நம்பியவனும்
நம்ப வேண்டியதை
நம்பாதவனும்
கரை சேர்ந்ததில்லை.
மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.

1.6.11

இழந்ததும் பெற்றதும்

















குருவைத் தேடி வந்தான் அந்த இளைஞன்.

‘‘குருவே! என்னால் மகிழ்ச்சியாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது.மகிழ்ச்சியை எங்கிருந்து பெறமுடியும்?” என்றான்.


‘‘அப்படியா?அப்படி என்ன கவலை உனக்கு’’

‘‘என் பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். எந்தக் கவலையுமில்லை அவனுக்கு.அதுதான் எப்படி  என்று தெரியவில்லை.. என்னாலும் அப்படி இருக்க முடியாதா?’’

குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கின்றன. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன ஆயிற்று? என்று சொல்”
என்றார்.

குரு சொன்னபடியே செய்தான் அந்த இளைஞன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

‘‘குருவே!அவன் நிம்மதியே போச்சு. ஆனால் அவனை இப்படிப் பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி” என்றான்.

”அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே? அப்புறம் எப்படி நிம்மதியிழந்தான்?”


”அதுதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான்.

ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும் கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’

‘‘அவனுடைய தேடல் ஓரிரு நாளில் முடிந்து பழைய நிலைக்கு அவன் திரும்பிவிடுவான். ஆனால் உன் நிலை அபாயகரமானது. அவனை வைத்து உனக்குத்தான் இந்தப்பாடம். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால் நிம்மதி போய் விடும். புரிகிறதா?’’ என்றார் குரு.

சட்டென்று மின்னல் வெட்டியது நிம்மதியைத் தேடி குருவிடம் வந்தவனுக்கு.

எதை இழந்திருந்தாயோ
அதை நீ 
பெறுவதும்
எதைப் பெற்றிருந்தாயோ
அதை நீ
இழப்பதும்
இன்னொருவரால்
அல்ல
என்றுணரும்போது
இழக்கவும் பெறவும்
எதுவுமிருக்காது.
ஞானத்தால் பெற்ற
நிம்மதியின் மெத்தையில்
துயிலும்போது
துயர் இருக்காது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...