
இன்று காலை தஞ்சாவூர்க்கவிராயரோடு அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று அதிகாலை எழுந்து எழுதிய ஒரு சிறுகதையைப் பற்றிச் சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு நான் சொன்னேன் “இதை நீங்கள் எழுதியிராவிட்டால் நான் எழுதியிருப்பேன்” என.
பேச்சு தொடர்ந்தது. அது இந்த இடுகையானது.
1993ல் படுக்கையில் இருந்த என் பாட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். என் மேல் அதீதமான ப்ரியம் எல்லாப் பாட்டிகளுக்கும் பேரன்கள் மேல் இருப்பதைப் போல். அவருக்கு கிட்டத்தட்ட எழுபது வயதாகிய வேளை.
வயதின் சுமை தாளாமல் கால் பின்னக் கீழே விழுந்தார். அதுதான் அவரின் கடைசி நடமாட்டம். அதன் பின் தான் இறந்துபோய்விடுவோம் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமானது.
ஒரு காரடையான் நோன்பு முடியும் வரை காத்திருந்தார். அது முடிந்து என் அம்மா அவர் வாயில் நைவேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஊட்டிவிட்டு அதை ருசித்தபின் ”நன்னாப் பண்ணியிருக்கே. தீர்க்க சுமங்கலியா இரு” என்று ஆசீர்வதித்துவிட்டு இறந்துபோனார்.
இப்போது போலெல்லாம் முணுக்கென்றால் டாக்டரிடம் ஓடும் பழக்கமும் கிடையாது. (இப்போதும் அப்படித்தான்).பாட்டி ஒரு நாளும் டாக்டரிடம் போனவர் இல்லை. எல்லாமே கைவைத்தியம்தான். ஒரு நாளும் உடம்பு முடியவில்லை என்று படுக்கிற ஜாதியும் இல்லை. ஆனாலும் கடைசி நாட்களில் பாட்டிக்கு வீட்டுக்கு டாக்டரை வரவழைத்து தன்னை அவர் பார்த்துவிட்டுச் சென்றால் மனசுக்கு கொஞ்சம் தேவலையாய் இருப்பதாய் உணர்ந்தார்..
பாட்டிக்குக் கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இரவுகளில் பெருங்குரல் எடுத்து ராத்திரி 11 மணிக்கு மேல் தனக்கு என்னவோ செய்கிறது என்று ஆரம்பித்தால் அன்றைக்கு சிவராத்திரிதான். இது அடிக்கடி நடப்பது பழக்கமாகியிருந்தது.
ஒரு நாள் ராத்திரி நல்ல மழை. பாட்டியின் படுத்தல் ஆரம்பித்தது. கரண்ட் வேறு இல்லை. இன்வெர்ட்டர் வசதியெல்லாம் கிடையாது. லாந்தரின் அல்லது சுவாமிஅறை குத்துவிளக்கின் வெளிச்சம் வீடெங்கும் பரவியிருக்கும். அந்த வெளிச்சத்தில் பாட்டியை விட பாட்டியின் படுத்தலை விட அவரின் நிழல் சுவற்றில் ஆடுவது இடி மின்னலுக்கு நடுவில் பயங்கர பீதியைக் கிளப்பும்.
நான் படுக்கையறைக்குப் போய் என் அப்பாவின் தொளபுளா சட்டையைப் போட்டுக் கொண்டு பாட்டியை மெல்லத் தொட்டேன். சுருட்டி வாரி எழுந்து கொண்டு ”வாங்கோ டாக்டர்! ரொம்ப நேரமா என்னமோ பண்றது! மூச்சு விட முடியல. மாரெல்லாம் ஒரே வலி” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது டாக்டர்தானா என்று மேல்க்கோட்டின் உயரத்தைக் கையால் தொட்டுப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.
அதன் பின் கையில் எழுதிக்காட்டித்தான் வைத்தியம். நாடி பிடித்துப் பார்த்துவிட்டு ”எல்லாம் சரியாகிவிடும். மாத்திரை தருகிறேன்” என்று கையில் எழுதிக்காட்டிவிட்டு சமையலறையிலிருந்து ராத்திரி வேளையில் பாட்டிக்குக் கொடுக்கக் கூடாது என்று என் அம்மா மறைத்து வைத்திருக்கும் சூட பெப்பர்மிண்ட்டை (அதற்குப் பெயர் இப்போதைக்குப் போலோ) பாட்டியின் வாயில் மாத்திரை என்று சொல்லிப் போட்டதுதான் தெரியும். அவ்வளவுதான்! வியாதி பறந்துவிட்டது. ”என்னதான் அதிசய மாத்தரையோ? வலியெல்லாம் போன எடம் தெரியலை. நன்னாயிருக்கணும். நீங்க படுத்துக்கோங்கோ டாக்டர்” என்று தான் ஏதோ மருத்துவமனையில் இருக்கும் நினைவோடு அன்புக் கட்டளையிட்டார்.
அதற்குப் பின் திரும்பவும் என்னைக் கூப்பிட்டார்.”டாக்டர்! தப்பா எடுத்துக்காதீங்கோ. எனக்கு ரெண்டாவது பேத்தி ஒருத்தி இருக்கா. இன்னும் கல்யாணம் பணணலை. கவர்ன்மெண்ட் உத்தியோகம்.ஆனா கொஞ்சம் வாய் நீளம். நீங்க பண்ணிக்கறேளா? மெதுவா யோசிச்சுச் சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டுப் போர்த்திப் படுக்க காலை விடியும் வரை இடைஞ்சல் இல்லாத தூக்கம் எல்லோருக்கும்.
இது அடிக்கடி நிகழ அடிக்கடி சூட பெப்பர்மிண்ட் வழங்கப்பட்டு பாட்டி சொஸ்தமாயிருந்தார்.
தன் மரணத்துக்கு முந்தைய கடைசி ஒரு மாதமும் அடிக்கடி நினைவு தப்பியவராகவும் சம்பந்தாசம்பந்தமில்லாது எப்போதோ நடந்தவற்றையும் சொல்லிப் புலம்பியபடியும் இருப்பார்.
“மேஸ்திரி வரலைன்னா எப்பிடி இன்னிக்கு வேலை நடக்கும்? மொதலாளிக்கு என்ன பதில் சொல்றது?”
”கிட்டக்கப் போகாதே. புலி அடிச்சுடும். சொன்னாக்கேளு”.
”பண்டரிபுரத்துல யாருக்கும் தெரியாம என்ன விட்டுட்டு வந்தா எனக்கென்ன வீட்டுக்கு வழி தெரியாதுன்னு நெனச்சியா?
இதெல்லாம் பாட்டியின் இறுதி நாட்களில் அடிக்கடி உதிர்த்த வாக்கியங்கள்.
ஒவ்வொரு நாளும் அநேகமாக இரவு ஒன்பது மணிக்கு-அவருக்கு நேரம் யாராவது சொன்னாலொழியத் தானாகத் தெரியாது-என்னைக் கூப்பிட்டு ”ஜன்னலைத் திறந்து வை. மசூதில தொழறாங்க. உனக்குக் கேட்கலயா?”என்று கேட்டபடியிருந்தார்.
காதுக்கும் கண்ணுக்கும் எட்டும் தொலைவில் மசூதியெதுவும் என் வீட்டருகே கிடையாது என்பதும்- என் இத்தனை நாள் பாட்டியின் வாயிலிருந்து மசூதி என்ற சொல் வந்து நான் கேட்டதில்லை என்பதும் தான் இந்த இடுகையின் கடைசி வரிகள்.
(பாட்டியின் படம் என் கணிணியின் கோப்பில் இல்லாததால் எல்லோருக்கும் பிடித்த கே.பி.சுந்தராம்பாளின் நிழற்படத்தைப் பொருத்தமின்றியும் பொருத்திவிட்டேன். பொறுத்தருள்க.)









