5.2.11

கேக்கலா முல்லா!


முல்லா நஸ்ருத்தீனைத் தெரியாதவர்கள் கீழே இருப்பதையும் தெரிந்தவர்கள் வேகமாகக் கடைசி வரிக்குச் சென்று மேலே இருப்பவற்றையும் படியுங்கள்.
I
ஒரு முறை முல்லா கப்பலில் வேலை செய்ய ஆசைகொண்டு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

அதிகாரி: புயல் வந்தால் என்ன செய்வீர்?
முல்லா: நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: முன்னைவிடப் பெரியதாய் இன்னொரு புயல் வந்தால்?
முல்லா: இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.

அதிகாரியும் முல்லாவும் ஒன்பதாவது புயலை முடித்து-

அதிகாரி: பத்தாவது புயல்?
முல்லா: நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: அதெல்லாம் சரி மேன். இத்தனை நங்கூரம் எங்கிருந்து உமக்கு மட்டும்? என்று கேட்டு மாட்டிக்கிட்டான் பய என்று மூன்று முறை ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
முல்லா: உங்களுக்கு விடாம பத்து புயல் எங்கிருந்து கிடைக்குமோ அதுக்குப் பக்கத்துல இருந்துதான் என்று சொல்லி சிரிக்கவில்லை.
II
”முல்லா ரொம்ப புத்திசாலி" என்று பலரும் புகழ்வதைக் கேட்ட ராஜா முல்லாவைச் சோதிக்க எண்ணினார்.

ஒரு நாள் அரசவை கூடியபோது முல்லாவை ராஜா ராரா என்று தெலுங்கில் இல்லை உர்துவில் கூப்பிட்டார்.

”முல்லா! உங்கள் அறிவைச் சோதிக்கணுமே? நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் சொல்லலாம். அது உண்மையாயிருந்தால் உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயிருந்தால் உங்களைத் தூக்கில் போடுவேன். எங்கே ஏதாவது ஒரு வாக்கியம் ப்ளீஸ்” என்றார் ராஜா.

உடனே வழக்கமாகத் தங்களுக்குள் இந்த மாதிரி நேரங்களில் குசுகுசு என்று பேசிக்கொள்ளும் மந்திரிகள் இப்போதும் குசுகுசு.

“முல்லா உண்மையைச் சொன்னாலும் செத்தார். பொய்யைச் சொன்னாலும் செத்தார். ஆக முல்லாவுக்கு இன்னிக்கு செத்து நாளைக்குப் பால்” என்பது அந்தக் குசுகுசுவின் விரிவாக்கம்.

முல்லா ராஜாவைப் பார்த்துப் தெனாவெட்டுடன் " மன்னரே! நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள் " என்ற மஹா வாக்கியத்தை உதிர்த்தார்.

முல்லா சொன்னதைக் கேட்ட மன்னர் திகைப்பூண்டை மிதிக்காமலே முழித்தார். பின் வேறென்ன? திகைத்தார்.

முல்லா சொன்னது உண்மையாயிருந்தா அவருடைய தலை வெட்டப்படவேண்டும்.அப்படி வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். பொய் சொன்னால் தலையை வெட்டாமல் தூக்கில் போட வேண்டும்.

முல்லா சொன்னது பொய்யாயிருந்தா முல்லாவைத் தூக்கில் போடணும். அப்படித் தூக்கில் போட்டால் அவர் சொன்னது உண்மையாயிடும். உண்மையைச் சொன்னால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்டணும்.

ஆக வேறு வழியில்லாமல் வயிறு புகைய புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை ராஜா பாராட்டினார். சபையோர் வழக்கம்போல் சோர்வாகக் கைதட்டிவிட்டு இன்றைக்குப் பொழுது கழிந்தது என்று அவரவர் வீட்டுக்குக் குதிரைகளில் கிளம்பினார்கள்.
அதுசரி. உங்க ஆறு பேருக்கும் முல்லா யாருன்னு தெரியாதா? அடடா! வீட்டுக்குக் கெளம்பிட்டேனே. நாளக்கிச் சொல்றேனே.

4.2.11

சக்ரவாகம்


சக்ரவாகம்.

இப்படி ஒரு பெயரைக் கேட்ட ஞாபகம் லேசாக வருகிறதா? சின்ன சின்ன மழைத் துளிகள் சேர்த்து வைப்பேனோ என்று கருப்பு உடையில் இஷா கோபிகரைப் பார்க்காதது போலே பார்த்துக் கொண்டே மழையில் ஜம்மென்று நனைந்த அர்விந்சாமியை உடனே நினைவுக்கு வரும். அதுக்கப்புறம் அந்தப் பாடலில் சக்ரவாகம் பற்றி ஒரு வரி வரும். அந்தப் பறவையாவேனோ என்று ஏக்கத்துடன் பாடிவிட்டுக் கிளம்புவார் அ.சா.

’சகோரப் பறவை’என்று கூவப்படும் சாரி அழைக்கப்படும் பறவையின் மறு பெயர்தான் ‘சக்ரவாகம்’.அது இரவு நேரங்களில் இணையைப் பிரிய நேர்ந்தால் சோகத்துடன் கூவுமாம்.அதன் கூவல் மிகுந்த மன வேதனையைப் பொதிந்ததாக இருக்கும். சரி.

இப்போ சக்ரவாகம் என்ற பெயரில் ஒரு கர்நாடக சங்கீத ராகமும் இருக்கிறது. இந்த ராகம் மட்டும் ஒரு பெண்ணாயிருந்தால் கடத்திக் கொண்டுபோயிருப்பேன் என் குடிசைக்கு.
ஹலோ யாருங்க! உடனே ஓடாதீங்க. மேலோட்டமா உங்களுக்குப் பிடிச்சா மாதிரி பேசறேன். கொஞ்சம் கேளுங்க.

கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் குருதியில் நனைந்து சிவாஜி உயிர்விளிம்பில் தவிக்கையில் என்.டி.ராமராவ் சீர்காழியின் அற்புதக்குரலில் பாடுவாரே ஆன்மாவின் துயரெல்லாம் வெளிப்படும்படியும் அந்தத் துயருக்கும் அதுவே மருந்தாகும் மாயமும் கொண்ட ”உள்ளத்தில் நல்ல உள்ளம்”-அது சக்ரவாகம்.

முத்துவில் மாளிகையை விட்டுத் துரத்தப்படும் போது ரஜினிக்கு ஹரிஹரன் கொடுத்திருப்பார் குரல்-விடுகதையா இந்த வாழ்க்கை?- அதை யார் கேட்கும் போதும் உடனே மனமிறங்கும்.தத்துவ முலாம் பூசப்பட்டிருப்பதும் தெரியும்.புதிரும் விடையும் கொண்டதாய் அமைந்திருக்கும் அதன் பாவம்.

அடுத்து நேற்றுத்தான் ஒரு சக்ரவாகம் கேட்டேன். இன்னும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

மந்திரப்புன்னகை என்கிற படத்தில் சுதாரகுநாதனின் உயிரை அறுத்தெடுக்கிற என்ன குறையோ என்ன நிறையோ என்கிற தேவகானம்தான் இதை உடனே எழுதத் தூண்டியது.

என்ன ஒரு சங்கீதம்! எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு அந்தப் பாடலைப் பிடித்துக்கொண்டு எதையும் தேடாமல் தேசாந்திரியாய் வாழ்ந்து சாகலாம் போங்கள்.

ஒரு ப்யூஷனின் தோய்ப்பும் மிருதங்கத்தின் இறுக்கமும் ஹா!மனது இளகி இங்கே வழிந்தோடிக் கொண்டிருப்பது அந்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்குப் புலப்படும்.நான் திருப்பித் திருப்பி ஐம்பதாவது தடவைக்கும் மேலே இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கண்ணில் மழையையும் கண்ணன் அதைத் துடைப்பதையும் உணர்கிறேன்.

இந்த வரி எழுதும் போதும் எனக்குப் பின்னால் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அலைபாயுதே கண்ணாவை விரட்டிவிட்டு என் ரிங்டோனாகி விட்டது. என் காலர் ட்யூனாகவும் மாறிவிட்டது.

இந்தக் காட்சி எப்படி படமாக்கப் பட்டிருக்குமென நான் பார்க்கவும் விரும்பவில்லை.இதை ஒலி வடிவமாகவே ஒரு ஓவியம் போலத் தீட்டி வைத்துப் பாதுகாப்பேன்.

இது சக்ரவாகத்தின் மாயமா அங்கங்கே தொட்டுப்போகும் ஆஹிர்பைரவியின் வாசனையா அந்த வார்த்தைகளா அல்லது சுதாவின் குரலா? எனக்குத் தெரியாத குழப்பமாயிருக்கிறதே? என்ன செய்வேன்? தஞ்சாவூரில் செத்துபோன ப்ரகாஷ் இதைக் கேட்டிருக்கவேண்டும். என்னோடு கை கோர்த்துக்கொண்டு ஆடியிருப்பார்.

அறிவுமதி அற்புதமாக எழுதி வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள். உங்களை இழந்து போவீர்கள். (வலது புறம் பேரானந்தம் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்டபடி வரிகளை மேயுங்கள். பரலோகம் சமீபிக்கும்)

என்ன குறையோ
என்ன நிறையோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன தவறோ
என்ன சரியோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன வினையோ
என்ன விடையோ
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
( என்ன குறையோ )
நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்
வலியும் வரலாம்
வாட்டம் வரலாம்
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்
நேர்க்கோடுவட்டம்
ஆகலாம்
நிழல் கூட
விட்டுப் போகலாம்
தாளாத துன்பம்
நேர்கையில்
தாயாகக் கண்ணன்
மாறுவான்
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )
உண்டு எனலாம்
இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்
இணைந்தும் வரலாம்
பிரிந்தும் தரலாம்
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்
பனி மூட்டம் மலையை
மூடலாம்
வழி கேட்டுப் பறவை
வாடலாம்
புதிரான கேள்வி
யாவிலும்
விடையாக
கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )

2.2.11

இங்கிவனை யான் பெறவே...

 இரு சிறுவர்களைப் பற்றிய மற்றொரு இடுகை.

புதுச்சேரியில் வித்யாநிகேதன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் பயிலும் சகோதரர்களைப் பற்றிய பெருமைமிக்க பதிவு.

அவர்களின் பெற்றோர் மூன்று குழந்தைகளோடு துவங்கிய ஒரு புதிய பள்ளியில் இந்தச் சகோதரர்களைச் சேர்த்தார்கள்.

இன்று எண்ணூறுக்கும் மேல் மாணவர்களோடு விரிவடைந்திருக்கும் அந்தப் பள்ளியில் இன்று ஒன்பதாம் வகுப்பில் கற்கும் ரமணா மற்றும் பத்தாம் வகுப்பில் கற்கும் அரவிந் இருவரும் இணைந்து ஃப்ரென்ச் மொழிக்கான இலக்கண நூலைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மாதம் 7ம் தேதி அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஃப்ரென்ச் ஆசிரியரால் இந்நூல் வெளியிடப்பட இருக்கிறது.

நூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலைக் கொண்டுவர அவர்கள் இருவரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தச் சமூகம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்குக் கொடுக்கும் கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் இந்தப் பணிக்கு நேரமொதுக்கி நினைத்ததைச் சாதித்திருக்கிறார்கள் இவர்கள். தவிரவும் இலக்கணம் குறித்து எழுதுவதென்றால் பொதுவாகவே வேப்பங்காயாக நினைக்கும் என் போன்றவர்களுக்கு மத்தியில் ஆழ்ந்த ஆர்வமும் மொழியின் மீதான ஆளுமையும் இருந்தால் மட்டுமே இலக்கணத்தின் அருகே செல்ல முடியும் என்பது என் எண்ணம்.

இவர்கள் இருவரும் அரசியல்-கலை-நவ சினிமா-அறிவியல்-ஓவியம்-இசை-தத்துவம் போன்ற வெவ்வேறு துறைகளிலும் ஆர்வம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.

இத்தனை நாள் எழுதியும் 46ம் வயதில் என் முதல் புத்தக முயற்சிக்கான பிள்ளையார்சுழி போட்டுக்கொண்டிருக்கும் எனக்கு 15மற்றும் 13வயதில் இவர்களின் புத்தக வெளியீட்டு ஆர்வம் பெருமையைத் தருவதாயினும் கூச்சமடையவும் வைக்கிறது.

பெருமையும் கூச்சமும் அடைவதற்கு இன்னொரு காரணம் இவர்களின் அப்பாவாக நான் இருப்பதும் கூட. இவர்களின் அம்மாவும் என் மனைவியுமான நித்யாவின் கடும் உழைப்பும் ஆர்வமும் இவர்களின் ஆர்வங்களுக்கு முழுக்காரணமாக இருக்கிறது.

நான் இம்மூவரையும் வணங்கும் போது என் கண்கள் பெருமையால் கசிகின்றன.

பின்குறிப்பு: 

குறித்தபடி பிப்ரவரி 7க்குப் பதிலாக ப்ரபல தமிழ் எழுத்தாளர் என் அபிமானத்துக்குரிய ஸ்ரீ.கி.ராஜநாராயணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்ததால் பிப்ரவரி 19ம் தேதியில் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ.கி.ரா. நூலை வெளியிட்டபோது பள்ளியின் அத்தனை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடுவில் என்னுடைய பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் உடனிருந்து தங்களின் வருகையால் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்ததை விட எனக்குப் பெருமையான தருணம் வேறெது அமைந்திட முடியும்?

1.2.11

கோணம்


I
ஒரு பணக்கார அப்பா தன் பையனுக்கு வறுமையென்றால் என்னவென்று தெரியட்டும் என்ற நினைப்பில் ஒரு குக்கிராமத்துக்குக் கூட்டிப்போனார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது கேட்டார்:

இப்பப் புரிஞ்சுக்கிட்டியா வறுமைன்னா என்னன்னு?

நம்ம கிட்ட ஒரு நாய். இங்க எல்லார் கிட்டயும் நாலு.
நம்ம கிட்ட ஒரு தொட்டித் தண்ணி. இங்க ஒரு பெரிய நதியே இருக்கு.
நம்ம கிட்ட விளக்குதான் இருக்கு.இவங்களுக்கோ கோடிக்கணக்குல நட்சத்திரம்.
நம்ம கிட்ட ஒரு சின்னத் துண்டு நிலம்.இவங்களோ பெரிய பெரிய வயலோட இருக்காங்க.
நாம சாப்பிடறதை விலைக்கு வாங்குறோம். ஆனா இவங்க தானே பயிரிட்டு தானே சாப்டுக்கறாங்க.

பையன் இன்னும் அடுக்கிக் கொண்டே போக அப்பா மயங்கிவிழுந்தார்

ரொம்ப தேங்ஸ்பா. இவங்களைப் பாத்தப்புறம்தான் தெரியுது நாம எவ்வளவு ஏழைன்னு.

II
ஒரு ஏழைச்சிறுவன் தன் விலையுயர்ந்த காரையே உற்றுப்பார்ப்பதைக் கண்ட அவன் அந்தச் சிறுவனை ஏற்றிக்கொண்டு ஒரு ரௌண்ட் அடித்தான்.

எப்படி இருந்தது சவாரி?
அட்டகாசம். என்ன விலை இருக்கும் இந்தக் கார்?
யாருக்குத் தெரியும்? என்னோட அண்ணா எனக்குப் பரிசாகக் கொடுத்தான்.
ரொம்ப நல்ல விஷயம்.
ஒனக்கு இப்படி ஒரு அண்ணா இல்லையேன்னு வருத்தமா இருக்கா?
இல்லை.நான் அப்படி ஒரு அண்ணாவா இல்லையேன்னு வருத்தமா இருக்கு.

III
தன்னிடம் இல்லாததைத்தான் இரு சிறார்களும் கண்டுகொண்டார்கள். ஆனால் பணக்காரச் சிறுவனின் அனுபவத்தில் எத்தனை வறுமை? ஏழைச் சிறுவனின் அனுபவத்தில் எத்தனை செல்வம்?

ஒவ்வொருவரும் எப்படி ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம்-யூகிக்கிறோம்-ஏற்றுக்கொள்கிறோம் என்பதை இந்த இரு குட்டிக் கதைகளும் சொல்கின்றன.

வர்ட்டா?

31.1.11

ஆணி வேர்


I
எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
இந்த சவப்பெட்டி?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?
தெரியாது.
II
பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
அடைப்புக்குறிக்குள்
வயதும்
எதுவானால் என்ன?
III
பிறக்கையில்
உன்னருகில் நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.
அவ்வளவுதான்.
IV
யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
வாழ்க்கை
என்ற பெயரிட்டவன்
எவன்?

30.1.11

அஞ்சலி


யாரொருவர்
தன்வாழ்க்கையின்
ரகசியங்களைத்
திறந்த புத்தகமாக்கத்
துணிந்தாரோ-
துணிவாரோ-
யாரொருவர் தன்
சொல்லையும்
செயலையும்
ஒன்றாய்
இணைத்தாரோ-
இணைப்பாரோ-
யாரொருவரின்
சுவடுகள்
யாரொருவரும் செல்லாத
அடர்வனங்களில்
இறுதிவரை பயணித்ததோ-
பயணிக்குமோ-
யாரொருவர்
இலக்கை அடைந்ததன்
பின்னுள்ள காலத்தை
முன்கூட்டியே
கண்டறிந்து
சொன்னாரோ-சொல்வாரோ-
யாரொருவர்
யாராலும் தொடமுடியாத
உயரத்தை
விட்டுச் சென்றாரோ-
செல்வாரோ-
யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம்
ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

27.1.11

விளம்பர போதை



ஸ்வாரஸ்யமான விளம்பரங்களின் ரசிகன் நான். விளம்பரங்கள் நேரடியாக முகத்தில் அடித்தது போல இல்லாமல் இலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் மாம்பழம் போல (இலை மறை காயிலிருந்து தப்பியாச்சு) சொல்லியும் சொல்லாமலும் இருக்கவேண்டும்.
சின்ன வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அழகு தமிழுக்கு நடுவே வீவா விளம்பரப் பாடலும்-ராஜேஸ்வரி ஷண்முகம் அப்துல்ஹமீதின் லலிதா தங்கநகை மாளிகை விளம்பரமும்-ரின் சவுக்கார(சோப்தான்) விளம்பரமும் தான் செவி வழியே விளம்பரத்தின் மேல் வேர்விட்ட முதல் நினைவுகள்.
இந்தியாவின் ரசனை முதன்முதலில் அமுலுக்குப் பிறகு முத்ரா ஏஜென்ஸி(ரிலையன்ஸ்) மூலமும் லிண்டாஸ் (லிரில் சோப்) மூலமும்தான் அடையாளம் காட்டப்பட்டது. மரபுகளைத் தாண்டிய புதியபாதை அங்கே தடம் பதித்தது.
அதன் பின் இந்திரா காங்கிரஸ் முழுப் பக்க அளவில் கொடுத்த எமெர்ஜென்ஸிக்குப் பிந்தைய எண்பதுகளின் எதிர்மறை விளம்பரங்களும் நினைவுக்கு வருகின்றன. காங்கிரஸின் கணக்கை அது தலைகீழாய் மாற்றியது. எப்படி விளம்பரம் அமையக்கூடாது என்று சொல்லும் சாட்சியாக நெடுங்காலமாகக் கிழித்துவைத்திருந்த விளம்பரங்கள் எல்லாம் மக்கிக் கிழிந்தும் தொலைந்தும் போய்விட்டன.
தொண்ணூறுகளில் சென்னையின் ஸ்பென்ஸர் சந்திப்பில் வாராவாரம் அமுல் விளம்பரங்கள் மிகவும் ப்ரபலம். அநேகமாக அந்த வாரத்தின் சூடான செய்தி அமுல் வெண்ணையுடன் இணைக்கப்படுவது மாதிரியான புத்திசாலித்தனம் வேறெந்த நிறுவனத்துக்கும் வந்ததாகத் தெரியவில்லை. விடியற்காலையிலோ அல்லது சில நாட்கள் நள்ளிரவிலோ வரையப்படுவதைப் பார்த்து எதிரே க்ராதியில் சாய்ந்தபடி மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்ததுண்டு.
அதே போல் ஒயிட்ஸ் சாலையின் முனையில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் வார விளம்பரங்களும் மிகுந்த கற்பனையோடும் அபாரமான வார்த்தைத் தேர்வோடும் இருக்கும். இன்றைய ப்ன்ச் டயலாகின் கொள்ளுத் தாத்தா அவை. அற்புதம்.
இவர்களைப் போலில்லாவிட்டாலும் இந்தியன் ஏர்லைன்ஸ்ஸின் விளம்பரங்களின் வண்ணத்தேர்வும் படங்களின் அமைப்பும் சற்று சுமார் ரகத்தில் இருக்கும். இதைத் தாண்டி ஒன்லி விமல் என்ற குரல் இசையோடு வரும் ரிலையன்ஸ் விளம்பரங்களும், அபத்தமான ஹமாம் மற்றும் ஹார்லிக்ஸ், போர்ன்விடா விளம்பரங்களின் மத்தியில் ரெஹ்மானின் மொஸார்ட்டின் சிம்பனியை நினைவுபடுத்தும் புதிய டைட்டான் கடிகார விளம்பரங்கள் இன்றுவரை ஹிட்தான்.
இப்போதெல்லாம் தாட்களில் வரும் அல்லது வரையப்படும் விளம்பரங்களை யாரும் அதிகம் கவனிப்பதில்லை.அல்லது அவை நம் கவனத்தைக் கவர்வது இல்லை. ஆக தொலைக்காட்சியின் திரைகளில் திகட்டத் திகட்ட விளம்பரக் கூத்துக்களின் மழையில் நனைந்துகொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் சரி. ஒரு விளம்பரம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன கண்ணுக்கு முன்னால்.
அந்த விளம்பரத்துக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் சொல்பமாவது தொடர்பு இருக்க வேண்டும். (வயதான விஜயகுமாரும் நாசரும் இரும்புக் கம்பியை முடியாத வயதில் தூக்கிக் காட்டுவது போல இல்லாமல்.)
விளம்பரத்தில் கூட்டமாக மிரட்டுவது போல எல்லோரும் நடனமாடியபடியே ஒரு பொருளை அநியாயத்துக்குச் சிரித்தபடியே வாங்கச் சொல்வது. (சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கி சரவண பவன் வரை; அநேக துணி மற்றும் தங்க நகைக் கடை விளம்பரங்கள்).
அல்லது ஒரு பொருளைப் பற்றி நம்பமுடியாமல் கதைவிடுவது.
ஆரோக்யா பாலைக் குடித்து பரீட்சையில் நூற்றுக்கு இருநூறு எடுப்பது போலோ- சிவப்பாக இருக்க சொறிபிடித்த ஏதோ க்ரீமைப் பூசிக் கொண்டமையால் உலகத்தின் மிகப் பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்வது போலோ- ஏதோ பற்பசையால் பல்துலக்கியதால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றது போலோ- கோக்/பெப்ஸி குடித்தால் பெண்களை எளிதாக டாவடிக்கலாம் என்பது போலோ-தாங்கமுடியாத நாற்றமடிக்கும் நறுமணப் பீய்ச்சியை(தமிழில் பெர்ஃப்யூமை எப்படிச் சொல்ல- வார்த்தைகள் வரவில்லை) உடலில் போட்டுக்கொண்ட ஆணின் பின்னாலேயே குளிக்காத இருபது முப்பது பெண்கள் அரைகுறை ஆடையுடன் தெருவில் ஓடுவது போலோ- தாங்கமுடியலை சாமி.
அல்லது ஒரு கோழியின் காலை அது செத்தபின்னும் கடிக்கிற கடியில் அதற்கு வலித்து அலறலாம் என்கிற அளவில் மதன்பாப் கடித்து வெளிவந்த பரமக்குடி ரெஸ்டாரெண்ட் விளம்பரங்கள் அடுத்த முறை சாப்பிட விருப்பமுள்ளவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தி விடும்.
நிபந்தனைகள் தனி என்று 6பாய்ண்ட் எழுத்துருவில் விளம்பரத்தின் கடைசியில் படுவேகமாகக் காட்டி மறைவது அப்பொருளின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும்.(பல நிதி நிறுவனங்களும் தவணைத் திட்ட நிறுவனங்களும் இந்த மோசடியைச் செய்கின்றன)
ஒரு யுவதியின் மென்னுடலைத் தொட்டும் தொடாமலும் தழுவும் வஸ்திரத்தின் தன்மை விளம்பரப்படுத்தப்படும் பொருளுக்கும் விளம்பரத்துக்கும் இருக்கவேண்டும். அதற்கு எல்லாவற்றையும் எல்லாரையும் கவனித்துக் கொண்டே இருக்கிற சூட்சுமம் வேண்டும்.
புத்திசாலித்தனமான விளம்பரங்கள் முழுமையாய்த் தன் பொருள் பற்றிச் சொல்லாது. அந்தப் பொருள் என்ன? என்று அறியும் அல்லது அதைத் தேடும் ஆவலைத் தூண்டும் பொறியாக இருக்கும். அதிகமாகப் பேசாது. குறைந்த வார்த்தைகள் பொருத்தமான இசை இவற்றைக் கொண்டிருக்கும். மெல்லிய ஹாஸ்யத்தையோ அல்லது விடுவிக்கப்படாத புதிரையோ கொண்டிருக்கும். காலங்கள் தாண்டினாலும் அதன் இசையும் கருத்தும் பிசாசு போலத் துரத்தும்.
இந்த க்ரீன் ப்ளை விளம்பரம் ஒரு கவிதை.
https://www.youtube.com/watch?v=Qz46HSBRjiM
சமீபத்தில் வந்த விளம்பரங்களில் எஸ்.பி.ஐ. காப்பீட்டு விளம்பரங்களும்- செண்டர்ஃப்ரூட் தபேலா வாசிப்பவர் விளம்பரமும்-சென்டர்ஃப்ரெஷ் விளம்பரங்களும்-பெவிகால் விளம்பரங்களும்-ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி விளம்பரங்களும், பக் ஜாதி நாயுடன் வந்தவையும், ஸூஸூ லூட்டியடிப்பதுமான வோடஃபோன் விளம்பரங்களும், எம்.டி.ஆர்.குலாப்ஜாமுன் விளம்பரமும் -  தொடக்கத்தில் ஏர்டெல் விளம்பரங்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பவை.
தாய்லாந்தின் விளம்பரப் படங்களின் நினைவுவருவதைத் தவிர்க்க முடியவில்லை. காப்பீடு தொடர்பான இவர்களின் விளம்பரத்துக்கு இணையான விளம்பர மூளையை நான் எங்கும் கண்டதில்லை. காப்பீட்டுக்கும் இந்த விளம்பரங்களுக்கும் நேரடியான தொடர்பிலாதது போல் காட்டி முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லும் விளம்பரங்கள் இவை. தயவு செய்து இவற்றைத் தவற விடாதீர்கள்.
http://www.youtube.com/watch?v=LR5mZqeDNtg&feature=related
http://www.youtube.com/watch?v=u1OmpTPffQc
http://www.youtube.com/watch?v=RkoRDFjBh44&feature=related
http://www.youtube.com/watch?v=BOuHaTt2XUw&feature=related
http://www.youtube.com/watch?v=UcYflK8cBUg&feature=related
http://www.youtube.com/watch?v=9ll-bDmK3EA&feature=related
இவற்றையெல்லாம் எத்தனையோ தடவை பார்த்துவிட்டேன். ஆனாலும் விளம்பரங்கள் என்ற தளத்தைத் தாண்டி "நான் யார்?" என்ற போதனை புகட்டும் ஆசானாகவும் இவை இருக்கின்றன என்பதை மறுபடிமறுபடி எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன இவ்விளம்பரங்கள். இவற்றைப் பதிவிடும் இந்த இரவிலும் நான் கண்ணீரில் கசிகிறேன்.

26.1.11

குடியரசு தின வாழ்த்துக்கள்

சிந்தப்பட்ட தியாகங்களின் குருதிக்கும்-
மாற்றங்களுக்கான நம்பிக்கைகளுக்கும்-
எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்கும்-
ப்ரார்த்தனைகளும்
தலைவணங்குதலும்.

ஜெய் ஹிந்த்.

25.1.11

ஏன் அரசியல்?


இன்றைக்கு நிலவும் அரசியலில் அங்கொன்றும் இங்கொன்றும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தவிர ஆரோக்கியமான சொல்லிக்கொள்ளும் வகையில் தலைவர்கள் இல்லை என்பது உண்மை.

இன்றைக்கும் நேர்மையான உண்மையான தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள காந்திக்குப் பின் லால்பஹதூர் சாஸ்திரியையும் ஆச்சார்ய க்ருபளானியையும் காமராஜரையும் கக்கனையும் சமீப காலத்தில் (இருபது வருஷங்களுக்கு முன்) ந்ருபேன் சக்ரவர்த்தியையும் தவிர புதிய உதாரணங்கள் ஏன் நம்மிடம் இல்லை?

ஒரு குடும்பத்துக்கு முன்மாதிரியாகத் திகழக்கூடியவர்கள்/வேண்டியவர்கள் பெற்றோர்களும் அந்த வீட்டின் பெரியவர்களும். அந்த வீட்டின் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் வளரவும் சிந்திக்கவும் பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளவும் சுகாதாரமான முறைகளைத் தெரிந்து கொள்ளவும் மரியாதைக்குரிய பண்புகளோடு வளர்வதிலும் முக்கியப் பங்கு பெரியவர்களுக்கிருக்கிறது.

அந்தக் குழந்தைக்கு நல்ல வாசிக்கும் பழக்கம் இருக்கவேண்டுமென்றால் பெரியவர்களிடம் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அந்த வீட்டில் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தால் குழந்தையிடம் அதுவும் தொற்றிக்கொள்ளும்.

கதைகள் சொல்லத்தெரிந்த- ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாகப் பேசத் தெரிந்த வீடுகளில் அதைக் கவனித்து வளரும் குழந்தையிடம் அந்தப் பழக்கம் தானாகத் தொற்றிக்கொள்கிறது. அந்தத் தெருவில் சாக்கடையில் அடைப்பு இருந்து அதைச் சரி செய்ய அந்த வீட்டில் உள்ளவர்கள் முனைப்புக் காட்டுவதைப் பார்க்கும் குழந்தை பொதுப் பிரச்சனைகளில் அக்கறை கொள்கிறது.

இதற்கு மாறாக கீழ்த்தரமான-குழந்தைகள் முன்னால் எதையெல்லாம் பார்க்கவோ பேசவோ கூடாதோ அதையெல்லாம் அந்தப் பெரியவர்கள் பார்க்கவோ பேசவோ செய்தால் அந்தக் குழந்தையும் தன் குணத்தை அப்பாதையிலேயே கொண்டுசெல்கிறது.நல்லவை கெட்டவை இரண்டிற்கும் விதிவிலக்குகளும் உண்டு.

ஆனாலும் பொதுவாக ஒரு முகம் காட்டும் கண்ணாடியின் தன்மை பெரியவர்களுக்கு இருக்கிறது.அவர்களில் தன்னைப் பார்க்கும் குழந்தை அவற்றையே ப்ரதிபலிக்கிறது.

அதுபோல வீட்டின் நிர்வாகமும். சம்பாதிப்பதற்கேற்ப செலவு செய்வது ஒரு முறை.செலவுக்கேற்ப சம்பாதிப்பது மற்றொரு முறை. இரண்டாவது ரகத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் வருகிறார்கள்.நம் முந்தைய தலைமுறை கற்றுக்கொடுத்த முதல் ரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுவிட்டோம். இஷ்டப்படி செலவுகளைச் செய்யும் மனோபாவம் வந்துவிட்டால் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோபாவமும் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வாசற்கதவுகளைத் திறக்கவும் தயாராகி வாழ்க்கையின் குணமும் தரமும் கெட்டுப்போய் வீட்டின் நிர்வாகமும் சீர்கெட்டு அது நாட்டையும் பாதிக்கிறது.

இது மாதிரி எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் ஒரு வீட்டின் அளவிலிருந்து பார்த்தால் எத்தனை இலகுவானதாகத் தோன்றுமோ அதையே பெரிய அளவில் விரித்துப் பார்த்தால் நாட்டுக்கு.

ஆறு பேருக்கு சமைக்கத் தெரிந்தால் அதையே ஆயிரம் பேருக்கு சமைக்கப் பழகமுடியாதா? பாத்திரமும் அளவும் சமைக்கும் நேரமும் மாறலாம். சமைக்கத் தேவையான பொருட்களும் செய்முறையும் ஒன்றுதானே? நிர்வாகம் வீட்டுக்கு செய்யமுடியுமென்றால் நாட்டுக்கும் அதுதானே.இதில் பெரிய குழப்பம் இல்லை.

வீட்டுக்காக வீட்டின் குழந்தைகள் வளர கற்க எத்தனை தியாகங்கள் செய்கிறோம்? குழந்தை பிறந்த நாள் முதல் தொடங்கி அதன் உணவுப் பழக்கம் நம்மைப் போல மாறும் வரை எத்தனை நாட்கள் இரவில் கண்விழிக்கிறோம்?அதன் நாட்கள் வளர வளர அந்தந்த நாட்களில் எத்தனை எத்தனை விட்டுக்கொடுக்கிறோம்?அதற்குப் பிடிக்குமென்று நமக்கு விருப்பமான ஒன்றை அதற்குக் கொடுத்து அதன் சந்தோஷத்தில் மகிழ்கிறோம்.அதற்கு நோயுற்ற சமயம் நமக்குமல்லவா நோய் பீடிக்கிறது?அது குணமாகும்வரை நாமுமல்லவா நம் உணவைத் தியாகம் செய்கிறோம்?இப்படி எத்தனை எத்தனை?அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆக ஒரு வீட்டின் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரியவர்கள் செய்யும் தியாகத்தை ஒத்ததல்லவா ஒரு தலைவன் நாட்டுக்காகச் செய்யும் தியாகமும் வியர்வை வழிதலும்? ஆனால் நம் தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?

ஊழல்களில் சிக்காத ஒரு ஆட்சியை யோசித்துப்பார்க்க முடியுமா? லஞ்ச லாவண்யங்கள் இடம் பெறாத மாநில நிர்வாகமோ மத்திய நிர்வாகமோ இருக்கிறதா? உச்ச நீதிமன்றம் ஒரு வேலை முடிவதற்கு லஞ்சம் கொடுக்கத்தான் வேண்டியதிருக்கிறது என்று ஒப்புக்கொண்டது நம் தலைவர்களின் வெற்றியா? வீழ்ச்சியா?

நாட்டின் வன்முறைக்கும் கலவரக் கலாச்சாரமும் பரவத் துணைபோனது தலைவர்கள்தானே? எனக்காகத் தீக்குளிக்கும் தொண்டன் கட்சிக்குத் தேவையில்லை என்று தைரியமாக யாராவது சொன்னதுண்டா? பெருத்த செலவுகளையும் எல்லாருக்கும் இடைஞ்சல்களையும் உண்டுபண்ணும் மாநாடுகள் -இன்றைய நெருக்கடியில்- கைக்கெட்டாத எரிபொருள் விலையில்- தேவையில்லை என்று ஒழித்துக்கட்ட இன்றைக்குக் கட்சி தொடங்கி பேரம் பேசிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் வரைக்கும் யாரிடமாவது பொறுப்பிருக்கிறதா?

மழையால் உண்டான வெள்ளச்சேதங்களுக்கு முக்கியக் காரணமே நம் வாய்க்கால்களை மழை வரும் வரை துப்புரவாக வைத்துக் கொள்ளாதிருப்பதுதான் என்ற சிற்றறிவு கூட இல்லாமல் பணக்காரன் ஏழை என்ற பேதமில்லாமல் இலவசமாக கோடிக் கணக்கில் நிவாரணம் கொடுக்கும் பைத்தியக்காரத் தனம் வேறெந்த நாட்டிலும் நடக்காது.
மழைநீர் மட்டுமே நம் நீராதாரம். எத்தனை காலன் மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கடக்க விடுகிறோம்? இருப்பதைச் சேமிக்க விட்டுவிட்டு கடல் நீரைக் குடிநீராக மாற்றும்-இயற்கைக்கு ஒவ்வாத திட்டத்துக்குக் கோடிகளில் செலவிடுகிறோம்.இது எதிர்காலத்தில் நோய்களையும் மனித உடலில் மாறுதல்களையும் உண்டுபண்ணாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்போதுதான் அதற்கு பதில் சொல்ல நாமிருக்க மாட்டோமே என்கிற திமிர்தான் இதன் காரணம்.
உரங்களை உபயோகித்து விளைநிலங்களைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டதும் புதிய புதிய நோய்கள் உருவாக்கி சந்ததிகளையே நாசமாக்கிவிட்டதையும் இப்போது ஆர்கானிக் விவசாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதையும் சாபத்துடன் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வருமானத்துக்காகக் கள் சாராயம்.அதிலிருந்து கிடைக்கும் அவர்கள் வயிற்றில் அடித்த பணத்தைக் கொண்டு இலவசங்கள்.எத்தனை இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் புழுங்கியபடி வேலைசெய்கிறார்கள் தெரியுமா நண்பர்களே?

இந்த அளவுக்குக் குடியிலிருந்து வருவாய் கிடைக்குமானால் எந்த அளவு அவர்களின் உடல்நலம் பாதிக்கக்கூடும்? எந்த அளவு இப்படி பாழாகும் தனிநபர் வருமானம் அவர்களின் குடும்பத்தின் அத்தியாவசியமான செலவுக்கு உதவியாய் இருக்கக்கூடும்?இருக்கும் கொஞ்சநஞ்சக் கூர்மையையும் நேரத்தையும் மழுங்க அடிக்க இலவசத் தொலைக்காட்சியின் கூத்துக்களும், குடித்துக் கெட்டுப்போன ஈரல்களுக்கு இலவசக் காப்பீடும் எத்தனை பொருத்தமில்லாப் பொருத்தம்?

எத்தனை இளைஞர்கள் பொருத்தமான வேலையற்றுச் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை ஏன் சாதகமான வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது? அரசு அலுவலகங்கள் ஏன் 24மணி நேரமும் இயங்கக் கூடாது?மூன்று ஷிப்ட்களில் இளைஞர்களை நியமித்து அடிப்படையான எல்லாச் சேவைகளையும் ஒரு நாளும் விடுப்பின்றி இயங்க வைத்து வேகமான நிர்வாகத்தை ஏன் கொடுக்க முடியாது? சாலைத் துப்புரவில் தொடங்கி வங்கிப் பணிகள் தொடங்கி பாதுகாப்புத் தொடங்கி உணவு விநியோகம் தொடங்கி எங்கெல்லாம் மக்களின் வரிசை சேவையை எதிர்நோக்கி நீள்கிறதோ அங்கெல்லாம் டாஸ்மாக் இளைஞர்களை உபயோகித்து விரைவான சேவையை ஏன் தர முடியாது?

வரிவிதிப்பில் காலம்காலமாகத் தொடரும் விதிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.இதற்குப் பொதுக் கருத்து உருவாக்கப் படவேண்டும்.ராஜாஜி தொடங்கிவைத்த விற்பனை வரியை ஒண்ட வழியில்லாத பொதுஜனம் வரை கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.வரிவிதிப்பு கொடுப்பதற்கு ஏற்ற மக்களுக்கு மட்டுமே விதிக்கப் படவேண்டும்.

மாற்றங்களை நாம் கொணர்வோம்.
(தொடர்வேன்)

23.1.11

உயிர் வேட்கை.


எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.

ஓணானுக்கு ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.

பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றைஅடி.

நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.

மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அதனதற்கேற்றாற் போல்.

மீனுக்கு வலைவீச்சு.
யானைக்குப் பெரும்பள்ளம்.

மானுக்கு ஒற்றைக்குறி.
காளைக்கும் கழுதைக்கும்
பெரும்பாரம்.

ஒட்டகத்துக்கு
முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.

வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.

சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.

20.1.11

நிலைக்க முயல்கிறேன்


பார்க்க முயல்கிறேன்
வண்ணங்களை-
பார்வையற்றவனின்
விழி மூலம்.

பேச முயல்கிறேன்
என் மனதை-
வார்த்தையற்றவனின்
குரல் மூலம்.

மீட்ட முயல்கிறேன்
என் இசையை-
மரித்துப் போன
தந்திகளில்.

கடக்க முயல்கிறேன்
தூரங்களை-
கால்களற்றவனின்
சுவடுகளில்.

வாழ முயல்கிறேன்
நாளெல்லாம்-
கூரைகளற்ற வெளியின்கீழ்.

நிலைக்க முயல்கிறேன்
காலமெல்லாம்-
எழுதிக் கிழித்த
என் கவிதைகளில்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...