18.1.11

பயணம்



I
எதையெதையெல்லாமோ
எடுத்துப்போகிறோம்
தேவைப்படலாமென.
எதுவுமே
தேவையற்றுப்போவதாக
முடிவுற்று
நிறைகிறது பயணம்.

II
எதுவும் பேசமுடிவதில்லை
பயணிக்கையில்.
பேசாதும் இருக்கமுடிவதில்லை
வாழமுடியாத போதும்
வாழ்ந்தபடி இருப்பது போல.

III
வாழமுடியாத போதும்
வாழ்கிறோம்.
செல்ல விரும்பாதபோதும்
செல்கிறோம்.
வாழ்க்கை நம் கையில்
என்றாலும்
வாழ்வதும் செல்வதும்
நம் கையில் இல்லை.

IV
பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின் பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.
உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்.

14.1.11

சிவவாக்கியர் புராணம்.


கொஞ்ச நாள் முன்னால் சித்தர்களைப் பற்றிய
பதிவில் தொடரும் போட்டிருந்தேன்.தொடர்கிறேன்.

சித்தர்களில் சுவாரஸ்யமான வரலாற்றுக்குப் பஞ்சமில்லாதவர் சிவவாக்கியர் தான். இன்றைக்கு மேஜிகல் ரியலிஸம் என்று ஆவென்று வாயைப் பிளக்கும் நாம் கொஞ்சம் சிவவாக்கியரின் கதையைப் பார்த்தால் வாயை மூடிக்கொண்டு விடுவோம்.

பிறக்கும்போதே சிவசிவ என்றபடிப் பிறந்ததால் இவர் பெயர் இப்படி. இனி சி.வா.

சிறுவயதிலேயே ஒரு குருவிடம் வேதங்கள் கற்ற சி.வா. காசியைப் பற்றிக் கேள்விப்பட்டுக் காசிக்குச் சென்றார். அங்கே ஒரு சித்தர் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய சி.வா.வை வரவேற்று அவரின் சரக்கை ஆழம் பார்க்க விரும்பிய அந்தச் சித்தர் தன்னிடம் இருந்த காசுகளைத் தன் தங்கை கங்காதேவியிடம் கொடுத்துவிட்டுக் கசப்பான ஒரு பேய்ச்சுரைக்காயின் கசப்பையும் கழுவிக்கொண்டு வரச்சொன்னார்.

சொன்னபடிக்கு எதுவும் பேசாமல் நேரே கங்கைக்குச் சென்று கங்கையில் இறங்கித் தண்ணீரைத் தொட்டார். கங்கையிலிருந்து வளையலணிந்த கையை வெளியில் நீட்ட அக்கரத்தில் காசுகளை சி.வா. வைக்க அதைப் பெற்றுக்கொண்டு அந்தக் கை தண்ணீரில் மறைந்தது.

சிறிதும் இச்செயலால் சலனப்படாமல் பேய்ச்சுரையை நீரில் கழுவிக்கொண்டு சித்தரிடம் வந்துசேர்ந்தார் சி.வா. அடுத்த சோதனையை எடுத்து விட்டார் அந்தச் சித்தர்.

”இதோ இங்கிருக்கும் தோல்பையிலுள்ள நீரிலுள்ள கங்கையிடம் நீ கொடுத்த காசுகளைத் திருப்பிக் கேள்.” என்றதும் சி.வா. அப்படியே செய்தார். சித்தரின் தோல்ப்பையின் தண்ணீரிலிருந்து வெளிப்பட்ட கையொன்று சி.வா.வின் கைகளில் காசுகளைக் கொடுத்துவிட்டு மறைந்தது. இப்போதும் சி.வா. சலனமின்றி அமைதியாய் இருந்தார்.

சி.வா.வின் முதிர்ச்சியைக் கண்ட அந்தச் சித்தர் அவரைக் கட்டித் தழுவி, ” சி.வா. முக்தியடையும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி சிறிது மணலும் பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “ இவற்றைச் சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

சி.வா. அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினார். ஒரு பகல்பொழுதில் நரிக்குறவர்கள் கூடாரமிட்டிருந்த பகுதி வழியாகச் செல்லுகையில் வெளியில் வந்த ஒரு கன்னிப்பெண் சி.வா.வைப் பார்த்து உள்ளுணர்வு தூண்டியவளாய் “உங்களுக்கு வேண்டியதை நான் செய்து தரட்டுமா?” என்றாள். ”இந்த மணலையும் பேய்ச்சுரைக்காயையும் உன்னால் சமைத்துத் தர முடியுமா?” என்று கேட்டார் சி.வா.

அந்தக் குறப் பெண்ணும் அதற்குச் சம்மதித்து சமைக்கத் துவங்கினாள். மணல் பொலபொலவென அருமையான சாதமாகவும் பேய்ச்சுரைக்காய் சுவைமிக்க கறியாகவும் மாறியது. சி.வா.வும் அதை ரசித்து உண்டுவிட்டுத் தான் தேடிய பெண் இவள்தான் என் அறிந்தார்.

அந்த சமயம் காட்டுக்குச் சென்றிருந்த அவள் பெற்றோரும் உறவினரும் திரும்பிவர அவளைத் தனக்கு மணம் முடித்துத் தரக் கேட்டார். அதற்கு அவளின் பெற்றோர் சம்மதித்து திருமணத்திற்குப் பின்னும் தங்களுடன் தான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்க சி.வா.வும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

உடனே தன் தவ வாழ்க்கைக்கு வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டு ஹனிமூன் போய்விடாமல் தொடர்ந்து தவ வாழ்க்கையையும் மேற்கொண்டார். மற்றொரு புறத்தில் குறவர்களின் குலத் தொழிலையும் கற்றுக்கொண்டார்.

திடீரென ஒருநாள் காட்டிற்குள் போய் ஒரு கனத்த மூங்கிலை வெட்டத் தொடங்கினார். மூங்கில் கழியிலிருந்து பொற்துகள்கள் சிதறிக் கொட்டத் தொடங்கின. “சிவபெருமானே!இது நியாயமா?உன்னிடம் முக்தியைக் கேட்கையில் இப்படிப் பொருளாசையூட்டலாமா?” என்று பதறி ஓடினார்.

அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அந்த மூங்கிலிருந்து எமன் வருகிறான் என்று மூங்கிலில் இருந்து பொற்துகள்கள் ஒழுகுவதைக் காட்ட அவர்கள் அசந்து போய் சி.வா.வை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஒரு பெரிய மூட்டையளவு கட்டிமுடிக்கவும் இருள் சூழத் தொடங்கவும் சரியாக இருந்தது.

இருவர் அங்கேயே மூட்டைக்குக் காவலிருக்க இருவர் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு காவலிருந்த இருவரையும் கொன்றுவிட்டு மொத்தத் தங்கத்தையும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள எண்ணி அவர்களுக்கான உணவில் விஷத்தைக் கலந்து காவலுக்கு இருந்தவர்களிடம் திரும்பினார்கள்.

மூட்டைக்குக் காவலாக இருந்த இருவரும் பக்கத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் சேகரித்து வரச்சொல்லி வந்த இருவரையும் அனுப்பி அவர்கள் பின்னாலேயே சென்று கிணற்றுக்குள் நீருக்காகக் குனிகையில் அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளிக் கொன்றுவிட்டுத் திரும்பி விஷம் உணவில் கலக்கப்பட்டிருப்பது அறியாமல் அந்த உணவையே உண்டு அவர்களும் சிறிது நேரத்திலேயே இறந்தனர்.

பொழுது புலர்கையில் வழக்கம்போல் காட்டிற்கு வந்த சி.வா. தான் சொன்னபடி மூங்கிலின் பொற்துகள்களின் வழியே எமன் வந்து இவர்கள் உயிரைப் பறித்துவிட்டானே என வருந்தினார்.

மற்றொரு முறை சி.வா. வானவீதியில் சென்று கொண்டிருந்த கொங்கணச்சித்தரைச் சந்திக்க நேர்ந்தது. பின் இருவரும் அடிக்கடி சந்திக்கலாயினர். சி.வா. மூங்கில்க்கூடைகள் முடைந்து பொருளீட்டி வறிய வாழ்க்கை வாழ்வதைக்கண்ட கொங்கணர் இரும்பைத் தங்கமாக்கும் வரத்தைக் கையில் வைத்திருந்தும் சி.வா. இப்படி துன்பத்திற்குள்ளாவது தாங்காமல் சி.வா. வெளியில் போயிருந்த ஒருநாள் அவர் மனைவியிடம் சில இரும்புத் துண்டுகளை வாங்கித் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு மறைந்தார்.

சி.வா. திரும்பியதும் நடந்ததைக் கூற சி.வா. சிரித்தபடி அவற்றைக் கிணற்றில் போட்டுவிட்டு வரச் சொன்னார். மனைவியிடம் தங்கத்தைத் தூக்கிப்போட்டது உனக்கு வருத்தமா என்று கேட்க நோ.நாட் அட் ஆல் என்றார் அவர் மனைவி.

இப்படியாக சி. வா. பற்றிக் கூறப்படும் வரலாறு நிறைவு பெறுகிறது.

பழமையான கலாச்சாரமும் வரலாறும் நிறைந்த நம்மிடமும் கிரேக்கர்களிடமும் இது மாதிரியான இதிகாசத் தன்மை கொண்ட கதைகள் ஏராளம்.

இது கற்பனையா நிஜமா என்று மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையின் மனதோடு நாம் கலைவோமானால் நம்மிடம் இது போன்ற வளம் மிக்க கதைகள் நிறையத் தோன்றும்.

12.1.11

விலை-வாசி


ஒரே முறை ஆட்சியிலிருந்த ஜனதா அரசின் பெரிய சாதனையாக ஒரு அளவுச்சாப்பாட்டின் விலை ஒரு ரூபாய் என்ற கட்டுக்குள் 1977ல் அறிமுகப்படுத்தப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றது. அச் சாப்பாட்டுக்கு ஜனதா சாப்பாடு என்ற பெயர் சூட்டப்பட்டு சக்கைபோடு போட்டது சரித்திரம்.

அந்தச் சரித்திரம் திரும்புகிறது நண்பர்களே! கைகள் தட்டி ஆரவாரியுங்கள்.

விலைப்பட்டியலைக் கீழே பார்ப்போம்.

தேநீர்-ரூ1.
சூப்- ரூ5.50
தால்-ரூ2.50.
சைவச் சாப்பாடு(பருப்பு,பொரியல், 4சப்பாத்தி, சாதம்/புலவ், தயிர்,சாலட்) ரூ12.50
அசைவச் சாப்பாடு-ரூ22.50
தயிர்சாதம்-ரூ11.
வெஜ் புலவ்-ரூ8.
சிக்கன் பிரியாணி-34.
மீன் கறி-சாதம்-ரூ13.
ராஜ்மா சாதம்-ரூ.7.
தக்காளி சாதம்-ரூ.7.
மீன்வறுவல்-ரூ.17.
கோழிக்கறி-ரூ20.50.
சிக்கன் மசாலா-ரூ24.50.
பட்டர் சிக்கன்-ரூ.27.
சப்பாத்தி ஒன்று-ரூ1.
சாதம்(ஒரு ப்ளேட்)-ரூ.2.
தோசை-ரூ.4.
கீர்-ரூ5.50
பழக் கேக்-ரூ9.50.
பழ சாலட்-ரூ.7.

இந்தியாவில்தான் மேலே சொன்ன விலைப்பட்டியல்.

வெங்காயம் கிலோ ரூ100 விற்ற போதும், கத்தரிக்காய் கிலோ ரூ80 ஆன போதும்-பருப்பு-அரிசி-எண்ணெய்-பெட்ரோல்-சமையல் வாயு-முட்டை-டீசல் போன்ற அத்தியாவசியமான அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைவாசி வழி தெரியாத மன்மோகன் சிங்கிலிருந்து வழியில்லாத சராசரிப் பாமரன் வரை-பணவீக்கத்தை வாட்டத்துடன் கவனித்து வரும் ப.சிதம்பரம் தொடங்கி வீங்காத வயிற்றை ஏக்கத்துடன் கவனிக்கும் சித்தாள் வரை-எல்லோரையும் சமமாய்ப் பீடித்த போதும் இந்தியாவில் நிலவும் இந்த விலைவாசி எத்தனை காருண்யமும் மேன்மையும் பொருந்தியது!

இது வாழ வழியற்றவர்களுக்காக-எந்தவித சேமிப்பும் இல்லாத திக்கற்றவர்களுக்காக-மாதம் ரூ.80,001 மட்டும் சம்பளமாகப் பெறும் ஏழைகளுக்காக இந்தியப் பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப் படும் உணவின் விலைப்பட்டியல்.

நாக்கைத் தொங்கப்போட்டிருந்தால் எடுத்து உள்ளே போட்டுக்கொண்டு முதலில் ஒரு ராஜ்யசபா உறுப்பினராகவாவது ஆக முயற்சி பண்ணுங்கள்.அப்புறம் இதையெல்லாம் சாப்பிடலாம்.
அதுக்கு இன்னும் குறைந்தது பத்து வருஷமாவது ஆகுமேன்னு கவலைப்படறீங்களா?அவசியமில்லை ஜென்டில்மேன்!அதுவரை அப்படி ஒன்றும் விலைவாசி ஏறிவிடாது.(பாராளுமன்ற உணவகத்தில்)

31.12.10

பெருமைக்குரியவர்கள்


ஒரு ஆண்டு முடிவதிலும் மறு ஆண்டு துவங்குவதிலும் அதற்காகவே காத்திருந்து குலுக்கோ குலுக்கென்று கையை சுளுக்கும்வரை குலுக்கிக் கொள்வதிலும் ஆர்வமில்லை.

கொண்டாட்டங்களில் மிகுதியாய் ஆர்வம் இருந்தாலும் ஏனோ ஆங்கிலப் புத்தாண்டின் மீது ஒரு கட்ட்ட்டுப்பு.

ஆங்கிலேயனின் கணக்கைப் பின்தொடரும் எரிச்சல்.

அவனுக்குமுன் வானசாஸ்திரத்திலும் அரசியலிலும் நம்மிடம் ஆர்யபட்டரும் சாணக்கியரும் இருந்தாலும் நாம் இந்தக் கணக்கைத் தலையில் வைத்துக் கூத்தாடுகிறோம்.

நம் தமிழ் மாதங்கள் சித்திரையில் தொடங்கிப் பங்குனியில் முடிவது- இன்றையக் குழந்தைகளை விடுங்கள்-இளைஞர்களுக்கே தெரியாது.

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை முடியும் நட்சத்திரங்களின் பின்னணி தெரியாது.

சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் கொண்டும் சூரிய உதயத்தைக் கொண்டும் திதி என்றும் பட்சம் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது என்பதையோ-

ஆங்கில நாட்காட்டியைப் போல நமக்கு வேறுவழியில்லாமல் நான்கு வருஷத்துக்கு ஒருதடவை மிஞ்சிப் போன நான்கு கால் நாட்களையும் ஒன்றாக்கி லீஃப் என்கிற சமாளித்தல் கிடையாது என்பதையோ மூச்சு வாங்கினாலும் சொல்லியே ஆக வேண்டும்.

நம்முடைய நாழிகையின் அளவு உலகின் எல்லா கால அளவுகளையும் விட மிகத் துல்லியமானது என்றும் நம் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாய்த் தாண்டுபவர்களுக்கு ஏஷியாநெட்டின் சந்தன குங்குமப் பொட்டுடன் ஏதோ ஒரு நம்பூதிரியின் புத்தாண்டுப் பலன் சொல்லும் பதிவு என்று மிரள்வதற்குச் சாத்தியம் இருப்பதால் இது பற்றி நம் பெருமை பற்றி விரிவான ஒரு பதிவு எழுதுவேன்.

சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிடாமல் சொல்லியாகவேண்டும்.

நான் எல்லா வலைப்பூக்களையும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். பலரின் பின்னூட்டங்களும் பலரின் பதிவுகளும் என்னைக் கூர் தீட்டிக்கொள்ளவும் என் எழுத்தைச் செறிவாக்கிக் கொள்ளவும் மிகவும் உதவியிருக்கின்றன. பெயர்களற்ற யார் யார் மூலமெல்லாம் இதை நான் பெற்றேனோ அவர்களுக்கெல்லாம் என் அன்பும் நன்றியும்.

குறிப்பாக இன்றைய இளம் எழுத்துக்கள் என்னில் பெரும் மாறுதலை ஏற்படுத்திவருகின்றன. இவர்களில் சிலர் வயதினால் இளையவர்களாகவும் சிலர் எழுதும் உற்சாகத்தால் இளையவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே எல்லோராலும் அறியப் பட்டு பின்னிப் பெடெலெக்கும் பலருக்கு நான் அறிமுகம் தரப் போவதில்லை.

எவ்வளவு எழுதியிருக்கிறார்கள் என்பதோ அவர்கள் பின்னணி என்ன என்பதையோ விட இவர்கள் தொடர்ந்து எழுதினால் தமிழின் பெரிய ஆளுமைகளாக வரக்கூடும் என்றும் சொல்ல விரும்புகிறேன்.

இவர்களை நான் பார்த்ததோ பழகியதோ இல்லை. இவர்களின் எழுத்துக்கள்தான் இவர்களின் அடையாளம்.இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன். என் தேடல் இன்னும் விடுபட்டவர்களைத் தேடித் தொடர்கிறது.

படிக்கத் தவறியவர்கள் அவசியம் படிக்க இவர்களை சிபாரிசு செய்கிறேன்.

இவர்கள் அடுக்கப்பட்ட வரிசைப்படி இல்லாமல் எழுத்தின் வீச்சிற்கேற்பவும் தொடர்ந்து எழுதுவதன் மூலமும் தங்கள் இடத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

உலகமே இந்தப் புத்தாண்டைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த இரவின் கரங்களில் நாம் இவர்களைப் பாராட்டுவோம்.

30.12.10

எப்போ வருவாயோ?


அம்மாவின் வருகை
இருமணிகள் தாமதிக்க
அப்பாவுக்கோ இன்னும்
வரும்நேரம் தெரியவில்லை.

வீட்டின் கதவுகளைத்
திறந்து வைக்க யாருமில்லை.
சாப்பிட்டாயா எனக் கேட்க
என்னெதிரில் யாருமில்லை.

இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
என்னையன்றி யாருமில்லை.
சிலிண்டர் மாற்றிடவோ
இன்னும் நான் கற்கவில்லை.

சூடாய்ச் சாப்பிடவும்
என்றுமே வாய்த்ததில்லை.
ஹோம்ஒர்க் குழப்பங்களோ
தீர்த்துவைக்க வழியுமில்லை.

வகுப்பில் நடந்த சாகசங்கள்
கேட்க இங்கே யாருமில்லை.
பள்ளி விட்டுத் திரும்பிடவே
ஒருநாளும் பிடிக்கவில்லை.

ஞாயிறன்றி வேறொருநாள்
வாரத்திலே விருப்பமில்லை.
அப்பாவோ அம்மாவோ
எப்போது வருவாயோ?
எங்கும் இனிப் போகாமல்
என்னோடே இருப்பாயோ?

29.12.10

காலம்



I
இழந்தவன்
இன்றை மறக்கிறான்.
நாளையை நினைக்கிறான்.

இருப்பவன்
இன்றை நினைக்கிறான்.
நாளையை மறக்கிறான்.

நிலைப்பவன்
நேற்றை மறக்கிறான்.
நாளையைத் துறக்கிறான்.
இன்றில் வாழ்கிறான்
என்றும்.


II
சில நேரம் கோபப்பட
வேண்டியதிருக்கிறது.
சில நேரம் கடந்து செல்ல
வேண்டியதிருக்கிறது.
கோடைகாலத்து வெயிலையும்
குளிர்காலத்து மழையையும் போல.


III
நிழலின் அருமை வெயிலிலும்
வெயிலின் அருமை மழையிலும்
மழையின் அருமை வெயிலிலும் என
இருப்பதிலிருந்து இல்லாததிற்கும்
இல்லாததிலிருந்து இருப்பதற்கும்
பாய்ந்தபடியிருக்கிறது
வாழ்க்கை.

25.12.10

கடவுளின் குழந்தைகள்.


குழந்தைகள் எதையுமே யோசிக்காமலோ காரணமில்லாமலோ சொல்வதோ செய்வதோ இல்லை.

அவர்கள் கையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது கவிதையாகவோ உண்மையாகவோ இருக்கிறது.

ஒரு பொய்யை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையுண்டு.உண்மையை மறந்து விடலாம் என்பதையே குழந்தைகளை நினைவில் வைத்துச் சொன்ன வாக்கியமாக இருக்குமோ தெரியவில்லை.

இன்று தஞ்சாவூர்க்கவிராயர் தொலைபேசியில் ஒரு கவிதை வாசித்துக் காட்டினார்.

வானத்தில் வசிப்பது
யார் என்று
கேட்ட குழந்தையிடம்
கடவுள் என்றேன்.
இல்லை
காகம் என்று
திருத்தியது குழந்தை.

இது அவருக்கும் அவரின் இரண்டு வயதுப் பேரனுக்கும் நடுவில் நடந்த சம்பாஷணையில் பிறந்த கவிதை. இதே தஞ்சாவூர்க்கவிராயருக்கு இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்னால் மகன் பிறந்தபோது அவன் அவரிடம் கேட்ட கேள்வியும் இன்னும் என்னிடம் இருக்கிறது. “அப்பா! தண்ணீலயே நீஞ்சிக்கிட்டு இருக்கே இந்த மீன்லாம் ராத்திரீல எப்படீப்பா தூங்கும்?”

ஸென் தத்துவம் சொல்வதும் இதைத்தான்- “எது அநுபவமோ அது கவிதை.”

குழந்தைகளின் கண்களைப் பாருங்கள். அவை பொய் சொல்வதில்லை. அன்பைப் பூசுகின்றன. அவற்றில் கர்வமோ அகம்பாவமோ அலட்சியமோ இல்லை. இவையெல்லாம் ஒரு குழந்தை யோசிக்கத் துவங்கும் வரைதான். அது கண்ணெதிரே ஒரு கடவுளைப் பார்க்கும் போது கடவுளையும் காட்டுமிராண்டியைப் பார்க்கும்போது காட்டுமிராண்டியையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இருக்கிறது.

தினமும் செய்தித்தாள் வாசிப்பவனின் குழந்தைக்கு அந்தப் பழக்கம் தானாய் வந்து அதன்பிறகு தகப்பனால் சுடச்சுட செய்தித்தாள் வாசிக்க முடிவதில்லை என்று சந்தோஷமாய் அலுத்துக் கொள்ள முடிகிறது.புத்தகக் கண்காட்சிக்குப் போகத் துவங்குகிறது.

ஓவியம் தீட்டவும் பாட்டுக்கள் பாடவும் தெரிந்தவளின் குழந்தைக்குத் தொற்றுவியாதி போலத் தானாய்த் தொற்றிக்கொள்கிறது. பாட்டி சொடுகு போட்டபடி இருப்பதைக் காணும் பேத்தி சொடுகுவின் நுணுக்கங்களை இயல்பாய்க் கற்கிறாள்.

அதே போல அப்பாவின் பேச்சு ஒரு வீட்டில் எல்லோரையும் ஆட்டுவித்தால் அதே பாணியில் பேசவும் நகலெடுக்கவும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது. விரும்புகிறது. தாயைப் போலப் பிள்ளையும் நூலைப் போலச் சேலையும்.

எழுதிக்கொண்டிருக்கும்போது ஒஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஆசிரியை வகுப்பின் குழந்தைகளிடம் ஏசுவின் படத்தை வரையச் சொல்ல எல்லாக் குழந்தைகளும் தங்கள் மனதிலுள்ள ஏசுவை வரைந்துகொண்டிருக்க என்னைப் போலிருந்த ஒரு குழந்தை மட்டும் விமானத்தின் படத்தை வரைந்து மூன்று இருக்கைகளுடன் முடித்தது. ஆசிரியை என்னமுயன்றும் குழந்தையின் மனதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் கேட்க குழந்தை சொன்னது:

”முதல் இருக்கையில் ஏசு. இரண்டாவது இருக்கையில் அவருடைய அம்மா.”
”சரி. மூன்றாவது இருக்கை காலியாக இருக்கிறதே அதில் யார்?”
“அதுதான் பைலட்டுக்கு. அவரில்லேன்னா ப்ளேன் கீழ விழுந்துடும்ல”

ஆக குழந்தைகளின் மனது தர்க்கங்களுக்கு விடையை நேரடியாகச் சொல்வதாகவும் மற்றொரு பார்வையில் மிக எளிமையானதாகவும் இருக்கிறது.

குழந்தைகள் பூட்டாத கதவுகளுக்குச் சாவியைத் தேடுவதில்லை. தேவையற்ற இடங்களில் நம்பிக்கை கொள்வதிலை. தேவையான இடங்களில் சந்தேகம் கொள்வதில்லை. ஒரு ஊதுவத்தியின் சுழலும் நறுமணப்புகை போல-வெற்றிடங்களையெல்லாம் நிரப்பும் ஒப்பில்லாத இசை போல- இருக்குமிடங்களை தெய்வீகமானதாய் சுகந்தமானதாய் மாற்றுகிறார்கள்.

என்றும் உங்களின் உற்சாகத்தையும் இளமையையும் காத்துக் கொள்ள இரண்டு காயகல்பங்கள் உள்ளன. அதில் ஒன்று குழந்தைகளின் சகவாசம். கரைந்து
போய்விட்ட என் குழந்தைமையைத் தேடியலைகிறேன் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னும்.

24.12.10

ரேணிகுண்டா


(ஜூடு இளங்கோவின் சேட்டையப் பாருங்க. ஃப்ரான்ஸ் பக்கத்துல காஞ்சிட்டு இருக்கேண்டா மக்கா. மறுவாதியா என்னோட ஸ்டைலுக்கு வராம ஒரே கண்ராவியா எளுதி சாவடிச்சேன்னா மவனே ஓம் ப்ளாக்குக்கு நாட்டுவெடி குண்டு வெச்சுருவேன்னு நடுராத்திரி மிரட்ட நானும் அவனும் ரெண்டு மாசம் முன்னால ரேணிகுண்டா போய் பேய் சங்கீதத்தால நொந்து நூடுல்ஸ் ஆன கதைய எழுதிட்டேங்க. மக்கா படிப்பதானலே)

ரேணிகுண்டா ரயிலுக்குப் போவோம்டா மணியாச்சு
ராணியுண்டா ராஜாஉண்டா சங்கரனின் - போணியுண்டா
என்றெல்லாம் சார்ட்டில் தேடும்வரை தலைவலிதான்
தென்றலுக்கு இல்லை வழி.

ஏறி உட்கார்ந்தேன் இளைப்பாற வழி தேடி
சாரிசார் என் பெர்த்தென்று வந்தானே - மாரிமுத்து
பத்துஇட்லி வடைசகிதம் ஐபோடும் சேர்ந்தலற
செத்துச் சுண்ணாம்பாய் நான் .

தாளமும் தலையாட்டும் ராத்திரி சிவராத்திரிதான்
நாளம்சூடேற நரம்புதடதடக்க தண்ட - வாளத்து
இடியோசை தோற்றதப்பா என்தூக்கம் போச்சுதப்பா
மடிப்பிச்சை போடப்பா மாரி.

”சங்கீதம் இல்லாத ராத்திரியே எனக்கில்லை.
இங்கீ பிங்கீ பாங்கீயுடன் சோதிப்போம் - சங்கீ
நான் மாரி” என்று சுற்றிவந்துபார்த்தும் மிஸ்டர்
பீனாய் மாட்டினேன் போ.

ராவெல்லாம் பெருங்கூத்து கண்ணெல்லாம் சிவப்பாச்சு
நோவெல்லாம் வந்தாச்சு இனி - ஓவென்றழுதாலும்
பிள்ளையோ பெண்ணோ அவள்தான் பெறவேண்டும்
முள்ளை முள்ளால் எடு.

ரேணிகுண்டா ஒச்சிந்தி ரேணிகுண்டா ஒச்சிந்தியென
சாணி மிதிக்க வந்தானோ சுமைதூக்கி- போணியென்று
தாவியேறி தடுக்கிவிழுந்து பெரியபையின் பிடியிழுத்து
கூவியே கெடுத்தாய் குடி.

23.12.10

சித்தர்கள் யார்?


தமிழின் பழைமைக்கு ஈடாக சொல்லக் கூடிய ஒரு விஷயம் இருக்குமானால் சித்தர்களின் இருப்பைச் சொல்லலாம். இவர்களின் தொன்மை நமது கலாச்சாரம், நம் தத்துவ விசாரம் குறித்த அறிவு, மருத்துவத் துறையில் மேதைமை, பல புதிய ஆராய்ச்சிகள் ஆகியவற்றோடு தொடர்புள்ளதாகவும் இருக்கிறது.

அவர்களின் இருப்பு, கடவுள் குறித்த தத்துவங்களையும், நமக்கு அருகிலேயே இருக்கும் மூலிகைகளைக் கொண்டு எத்தனையோ வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ முறைகளைப் பற்றியும் ரசவாதம் எனப்படுகிற இரும்பைத் தங்கமாக மாற்றும் ஆராய்ச்சிகளையும், வெளிப்படையான தன்மை குறித்தும் தொடர்புடையதாக இருக்கிறது.

வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும் உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது.

இந்து மத சன்யாசிகளைப் போல் தோற்றம் தரப்பட்டாலும் இஸ்லாமிய சூஃபித் தத்துவங்களின் நிழலும் சமண புத்த மதத் தாக்கங்களும் இவர்களின் கருத்துக்களில் தெரிகிறது.

இன்னும் சொல்லப்போனால் சித்தர்களில் மிகவும் பிரபலமான போகர் சீனாவைச் சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சிக்குட்பட்ட கருத்தும் உண்டு.

சித்தர்களின் இடைவிடாத ஆராயும் மனம் பல நாட்டின் அறிவுஜீவிகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைமுறையாகவும் நம் நாட்டு மக்களுக்கு அபோரிஜின்ஸ் என்று ஒதுக்கக் கூடிய காட்டுமிராண்டி வாழ்க்கை முறையாகவும் தெரிவதில் வியப்பில்லை.

இன்றும் சித்த வைத்தியம் என்றவுடன் பழனி காளிமுத்து என்கிற டாக்டரை மையப்படுத்திய ஜோக்குகளுடன் ஒவ்வொரு ஊரிலும் எந்தெந்த லாட்ஜ்களில் அவர் தங்குகிறார் என்பதும் விடாமல் எப்படி இவர் ஊர் ஊராகச் சுற்றுகிறார் என்றும் கவலைப் படுவதுடனும் நம் சித்த வைத்திய ஆராய்ச்சி முடிவுறுகிறது.

இந்தச் சித்தர்களின் கருத்துக்களின் தாக்கம் ஹிப்பி இயக்கங்களிலும் தென்பட்டது. சித்தர்களுக்கு மரணமில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்வது சாத்தியம் என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் குறிப்பிடுகிறார்கள்.

சித்தர்களின் கடும் உழைப்பால் கிடைத்த வாத வித்தையே இன்று பலவித
அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. உலோகங்கள்,
பாஷாணங்கள், உப்பு, வேர்கள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை,கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவற்றின் குணங்களை இவர்கள்தான் முதன் முதலில் வெளியே சொன்னவர்கள்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் பல கடினமான ஆராய்ச்சிகளையும் ”இதென்ன பெரீய்ய ஜுஜ்ஜுபி” என்று சவடால் விடாமல்
ஜஸ்ட் லைக் தேட் சாதித்திருக்கிறார்கள். என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

திருமூலர், போகர், கருவூரார், புலிப்பாணிச் சித்தர், கொங்கணர், அகப்பேய்ச் சித்தர், சட்டைமுனி சித்தர், சுந்தரானந்தர், அகத்தியர், தேரையர் சித்தர், கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர், உரோமமுனி, காகபுசுண்டர், இடைக்காட்டுச் சித்தர், குதம்பைச் சித்தர், பதஞ்சலி முனிவர் இப்பிடி ஒரு பதினெட்டுப் பேரும் ஒரு கலக்குக் கலக்கியிருக்காங்க.

”பால் மாறினா மாறிக்கோ. ஒழுக்கம் மட்டும் மாறக்கூடாதுபா” என்கிறார்கள் சித்தர்கள். சொன்னா நம்பமாட்டீங்க. பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் இதெல்லாம் மட்டும் வுட்டுட்டீங்கன்னா ரொம்ப நாளைக்கி வாழ முடியும். யோகப் பயிற்சி அதுக்கு உதவும்னும் சித்தர்கள் பல பாடல்கள் மூலமாச் சொல்லியிருக்காங்க.

இவர்கள் தமிழுக்கும் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும் கிடைத்த..... என்ன சொல்லலாம்... ம் பெருங்கொடை. இவங்க தமிழ் ஆர்வமும் மெய்யறிவு தேடியலஞ்ச பயணமும் இன்னிக்கும் புதுசாவும் செறிவாவும் அதோட சிலிர்க்கவும் செய்யுதுங்கோ.

இவர்கள் பாடல்களின் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தன்மையையும், பாடலில் இவர்கள் கையாண்ட பல்வேறு சமாச்சாரங்களையும் நீங்கள் இப்போதே கொட்டாவி விடுவதால் மற்றுமொரு பதிவில்.

19.12.10

இலக்கு.


இது ஒருகை எழுப்பும் ஓசையில்லை.

இது தலைவர் அழைக்கிறார் வாரீர் வாரீர் என்று கூவும் பேரணியோ மாநாட்டுக்கான அழைப்போ இல்லை.

செய்யும் தொழிலை விட்டுவிட்டு வீட்டைத் துறந்து நாம் இதுவரை ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களைத் துறந்து குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்தும் யோசனை இல்லை.

நமது எண்ணங்கள் நிகழ்த்த இருக்கிற மாற்றங்கள்தான் இதன் அடிப்படை.
நான் உள்ளிட்ட நம் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மாற வேண்டிய குணங்களைக் குறித்து இது கவலைப்படும் இயக்கமாக எண்ணுகிறேன்.

அடுத்த வீட்டின் மீதான அன்பும் அக்கறையும் அடுத்த தெருவுக்கும் ஊருக்குமாய் விரிவாகட்டும். தெருக்களில் காறி உமிழ்வதையும் குப்பை கொட்டுவதையும் பொதுக்குழாயில் வடியும் நீரை நிறுத்தவும் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவும் தெரு ஓரங்களில் மலம் கழிப்பதையும் வீட்டை அழகு படுத்தத் தெருக்களை அசுத்தப் படுத்துவதையும் நிறுத்துவோம். பிறரையும் அறிவுறுத்துவோம்.

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்" என்று ஔவையார் பாடியது விவசாயத்தை மட்டும் பார்த்த பார்வையாக எனக்குத் தோன்றவில்லை. சிறிய அடுக்கடுக்கான ஒழுங்கான சீரான படிகளில் வளர்ச்சி இருக்கிறது என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது. சிறிய மாறுதல்களிலிருந்து பெரும் அசுர மாற்றத்திற்கு இந்தப் பாதை செல்லும்.

யோசித்துப்பாருங்கள்.

கல்வி-விவசாயம்-மருத்துவம்-தொழில் முனைப்பு-பாதுகாப்பு-உள்நாட்டு நிர்வாகம்-வெளியுறவு-நிதி-ராணுவம்-விளையாட்டு-கேளிக்கைகள்-சமயம்-நீதி-சட்டம் ஒழுங்கு-தத்துவம் போன்ற ஒரு நாட்டை அடையாளம் காட்டக் கூடிய எல்லாத் துறைகளிலும் நம் நாட்டின் நிலை எத்தனை சீரழிந்து மாற்றத்துக்காக ஏங்குகிறது என்பதை நேர்மையாய் யோசிக்கிற எல்லோராலும் உணரமுடியும்.

எல்லாத் துறைகளிலும் நாம் விவாதிக்க மாறுதல் ஏற்படுத்த நிறைய விஷயங்கள் உள்ளன. நூறு வருஷத்துக்குப் பிந்தைய விதிகளை அல்லது ஒவ்வொரு முறையும் முட்டிக்கொள்ளும் போதும் அப்போதைக்கு சரி செய்துகொள்வது போன்ற ஒட்டுப்போட்ட ட்யூபில் எத்தனை நாள் வண்டியையோட்டுவது? ஒரு நெடிய பயணத்துக்கான புதிய தடம் அவசியம் தேவை.

கொஞ்சம் பொறுமையாய் இருந்து பார்க்கலாம்-அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது என அனுபவத்திலும் முதிர்விலும் நான் மதிக்கும் பலரும் ஆலோசனை சொன்னபோது அதை ஏற்க எனக்குத் தோன்றவில்லை.

எதையெல்லாம் நம்பினோமோ அதையெல்லாம் இழக்க நேரிடும்போதும்- கைப்பற்றியிருந்த பிடியை நழுவவிடும்போதும் நமக்கு நேரும் அதே நிலையில் நாமிப்போது இருக்கிறோம்.

”பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவியிரண்டும் கலந்தே குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் இது செய்யுமுன்னே முடியேன்” என்ற திரௌபதியின் இடத்தில் நாமிருக்கும்போது பொறுப்பதற்கும் இழப்பதற்கும் என்ன இருக்கிறதினி மீதி? இனிப்பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாவென்றல்லவா நம் அழைப்பு இருக்கவேண்டும்?

நல்ல மாறுதலைக் கொண்டு வருவார்கள் என்றெதிர்பார்த்த தலைவர்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் எந்த மாறுதல்களும் உண்டாகவில்லை. பிரபலமாகிவிட்ட பின் பலரையும் பல விஷயங்களையும் யோசித்து பின் நமக்கென்ன? நம் காலம் முடிந்தது. பின்னால் வருபவர்கள் மாற்றுவார்கள் அல்லது காலச்சக்கரம் சுழலும் என்ற சால்ஜாப்போடு நாட்கள் நழுவிச் செல்வதை நாம் பார்த்துக் கைபிசைந்து நிற்கிறோம்.

ஏன் இந்த அவல நிலை?

இதை நிவர்த்திப்பதற்கு ஒவ்வொரு கட்டமாக இதைக் கொண்டு செல்வோம். முதலில் சிந்தனையை உறுதிப் படுத்திக் கொள்வோம். இந்த மாற்றம் சாத்தியம் என நான் நம்புகிறேன்.

இந்த நொடியே என்னையே நேரில் பார்த்துப் பழகாதவர்களும் பேசாதவர்களும் எப்படி இதைச் செய்வது? எது இலக்கு? என்றெல்லாம் ரொம்பவும் பெரிதாய்க் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

யார் எந்தத் துறையில் என்ன என்ன மாறுதல் கொண்டு வரலாம் என எண்ணுகிறார்களோ அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிரலாம். கூடிய விரைவில் ஒரு பொது வலைத்தளம் உருவாக்கி அந்தத் தளத்தில் நம் விவாதங்களைத் தொடர்வோம்.

விவாதங்களின் பொதுக் கருத்து நம்மை இணைக்கட்டும். அதன் பின் சந்திப்பதும் அடுத்த கட்டத்துக்குச் செல்வதையும் முடிவு செய்வோம். துவக்கம் எல்லாச் செயல்களையும் போலவே நிறையப் பேரிடம் சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விதைக்கும்.

தொடர்ந்து எழுதும்போதும் ஒரே திசையில் யோசித்துக் கொண்டிருக்கும் போதும் எல்லாம் சரியாகிவிடும். நல்ல நோக்கத்தை நம்புபவர்கள் இந்தப் புனிதப் பயணத்தில் இணைவார்கள்.

பொய்மையிலிருந்து வாய்மைக்கு-
இருளிலிருந்து ஒளிக்கு-
இறப்பிலிருந்து அமரத்வத்திற்கு -
எடுத்துச் செல்லட்டும் நம்மை இந்தப் பயணம்.

தொடர்ந்து எழுதுவேன்.

18.12.10

எது அரசியல்?-III


நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

யாரின் பின்னும் இனிச்செல்லாது நாமே முன்னின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக்காலங்களிலோ அவரவர் ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையுடன் லாபநோக்கற்ற சுயநலமற்ற நெடுந்தூரப் பயணத்திற்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி ஜாதி இனம் இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்பல்களூக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் இந்தச் சுடரைத் தமிழகத்திலிருந்து ஏற்றுவோம்.

பிற மாநிலங்களூக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம். நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம். அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன்.

மேலே எழுதப் பட்ட கடிதம் கடந்த ஆறு மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த சலனங்களின் வெளிப்பாடு.

இதை நேற்று எழுதி வலைப்பூக்களில் என் பார்வைக்குட்பட்ட சார்பற்றவர்களாய்த் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பினேன். சிலரிடமிருந்து இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து உடனடி பதில் கிடைத்தது.

சிலரிடமிருந்து அழைப்புக்களும் சிலரிடமிருந்து வாழ்த்துக்களும் சிலரிடமிருந்து ஒப்புதல்களும் சிலரிடமிருந்து யோசிப்பதற்குக் கால அவகாசம் கோரியும் இருந்தன எதிர்வினைகள்.

சரி. இதற்கான தயக்கங்கள் என் இலக்கையோ முடிவையோ மாற்றப்போவதில்லை. என் எழுத்துக்கள் தொடர்ந்து என் எண்ணங்களைச் சொல்லும். இப்போது சில விளக்கங்களும் சில யோசனைகளும்.

உங்களுக்கு மிக உயர்வான ஒரு பொருள் நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. அந்தப் பொருள் கண்ணெதிரே அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடிய ஒன்றல்ல. என்ன செய்வோம்?

அதே நிலையில்தான் நம் தேசம் சாக்கடைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. யார் எப்படிப் போனால் என்ன? நம் கதையைப் பார்த்துக் கொள்வோம் என்கிற சுயநலம் விஷ விருட்சம் போல் அடர்ந்து பரவ நாம் அனுமதித்துவிட்டோம்.

நம் தேசம் நம் உரிமை என்பதையெல்லாம் உதறி அதை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டு நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்கத் திராணியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லது முடிந்தால் கவிதையோ கட்டுரையோ கதையோ எழுதி முடித்துக் கொண்டு விடுகிறோம்.

இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முற்றிலும் பழுதடைந்து போன ஒரு கட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுவிட்டு மாறுதல் வரும் என்று அதீதமாய் நம் பங்கு எதையும் கொடுக்காமல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களையும் செய்தித் தாட்களில் வரும் அக்கிரமங்களையும் நமக்குத் தெரிந்த வட்டத்துக்குள் விவாதித்துவிட்டு மாறுதலுக்காக காத்திருக்கிறோம்.

எதுவுமே யாருமே முயலாத போது மாறுதல் என்ன மந்திரவாதியின் கையிலிருந்து வரும் கிளியா?

நாம் முதல் அடி எடுத்துவைக்காத வரை இந்த அடர் வனம் திகைப்பூட்டுவதாய்த்தான் இருக்கும். இதற்குள் உயிரைக் குடிக்கும் கருநாகங்களும் இரைக்காகக் காத்திருக்கும் கொடும் விலங்குகளும் காத்திருக்கும் என்பது குறித்து எந்த சந்தேகமுமில்லை. அவற்றோடு பழகி அவற்றிற்கு நம்முடைய மொழியைப் புரியவைக்கமுடியும் என்ற அசையாத நம்பிக்கை இருக்கிறது. நிலத்திற்கேற்ப நீரின் இயல்பு. நிலம் மாறும் போது நீரும் மாறும். மாற்றுவோம்.

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வழிகாட்டல் நமக்கு பெரிய நம்பிக்கை.
தென் ஆப்பிரிக்காவில் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட பின் அவரின் பாதையில் மற்றொரு வீழ்ச்சி இல்லை. அசைக்கமுடியாத நம்பிக்கையும் செயலிலும் சிந்தனையிலும் தெளிவும் அவரை இன்னும் பல காலங்களுக்கு வழிகாட்டியாய் நிறுத்தும். உண்மை-நேர்மை-பிறரிடம் அன்பு-பொறுமை-சகிப்புத்தன்மை-சொல்லும் செயலும் ஒன்றென வாழ்தல் இவையெல்லாம் அவரின் ஆயுதங்கள். இவையே இன்றைக்கும் கேடுகளை வீழ்த்தப் போதுமான
ஆயுதங்களாக நமக்கும் கை கொடுக்கும்.

அடுத்து இந்த இயக்கத்துக்கான வழித்தடம் வலையின் மூலமாகவும் தொலைபேசியின் மூலமாகவும் தேவைப்படும் நேரங்களில் வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலமாகவும் நம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். போன நூற்றாண்டுக்குக் கிடைக்காத அறிவியலை நம் விரைவான பரிவர்த்தனைக்கும் ஆலோசனைக்கும் பயன்படுத்திக்கொள்வோம். நாம் யாருக்கும் கேடு நினைக்காத போது நம் சிந்தனைக்குத் தேவையான ஆன்ம பலம் நமக்குக் கிட்டும். தெய்வத்தின் அல்லது இயற்கையின் துணை வழி நடத்தும்.

இன்று ஒரு தென்னை மரம் நட மண்ணைத் தேர்வு செய்து பண்படுத்தி கன்றை நட்டுப் பராமரிப்போம். இயல்பாய் அது வளர உரமிட்டு நீர் பாய்ச்சிப் பாதுகாப்போம். ஐந்து வருடங்கள் கழித்து அதன் முதல் இளநீரைப் பருகுவோம். தென்னைக்குக் காத்திருக்கும் நம்மால் தேசத்திற்குக் காத்திருத்தல் கூடாது போகுமோ?

நான் நாமாகக் காத்திருக்கிறேன்.

நிறைய மறுபடியும் எழுதுவேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...