
இது ஒருகை எழுப்பும் ஓசையில்லை.
இது தலைவர் அழைக்கிறார் வாரீர் வாரீர் என்று கூவும் பேரணியோ மாநாட்டுக்கான அழைப்போ இல்லை.
செய்யும் தொழிலை விட்டுவிட்டு வீட்டைத் துறந்து நாம் இதுவரை ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களைத் துறந்து குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்தும் யோசனை இல்லை.
நமது எண்ணங்கள் நிகழ்த்த இருக்கிற மாற்றங்கள்தான் இதன் அடிப்படை.
நான் உள்ளிட்ட நம் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மாற வேண்டிய குணங்களைக் குறித்து இது கவலைப்படும் இயக்கமாக எண்ணுகிறேன்.
அடுத்த வீட்டின் மீதான அன்பும் அக்கறையும் அடுத்த தெருவுக்கும் ஊருக்குமாய் விரிவாகட்டும். தெருக்களில் காறி உமிழ்வதையும் குப்பை கொட்டுவதையும் பொதுக்குழாயில் வடியும் நீரை நிறுத்தவும் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவும் தெரு ஓரங்களில் மலம் கழிப்பதையும் வீட்டை அழகு படுத்தத் தெருக்களை அசுத்தப் படுத்துவதையும் நிறுத்துவோம். பிறரையும் அறிவுறுத்துவோம்.
"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்" என்று ஔவையார் பாடியது விவசாயத்தை மட்டும் பார்த்த பார்வையாக எனக்குத் தோன்றவில்லை. சிறிய அடுக்கடுக்கான ஒழுங்கான சீரான படிகளில் வளர்ச்சி இருக்கிறது என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது. சிறிய மாறுதல்களிலிருந்து பெரும் அசுர மாற்றத்திற்கு இந்தப் பாதை செல்லும்.
யோசித்துப்பாருங்கள்.
கல்வி-விவசாயம்-மருத்துவம்-தொழில் முனைப்பு-பாதுகாப்பு-உள்நாட்டு நிர்வாகம்-வெளியுறவு-நிதி-ராணுவம்-விளையாட்டு-கேளிக்கைகள்-சமயம்-நீதி-சட்டம் ஒழுங்கு-தத்துவம் போன்ற ஒரு நாட்டை அடையாளம் காட்டக் கூடிய எல்லாத் துறைகளிலும் நம் நாட்டின் நிலை எத்தனை சீரழிந்து மாற்றத்துக்காக ஏங்குகிறது என்பதை நேர்மையாய் யோசிக்கிற எல்லோராலும் உணரமுடியும்.
எல்லாத் துறைகளிலும் நாம் விவாதிக்க மாறுதல் ஏற்படுத்த நிறைய விஷயங்கள் உள்ளன. நூறு வருஷத்துக்குப் பிந்தைய விதிகளை அல்லது ஒவ்வொரு முறையும் முட்டிக்கொள்ளும் போதும் அப்போதைக்கு சரி செய்துகொள்வது போன்ற ஒட்டுப்போட்ட ட்யூபில் எத்தனை நாள் வண்டியையோட்டுவது? ஒரு நெடிய பயணத்துக்கான புதிய தடம் அவசியம் தேவை.
கொஞ்சம் பொறுமையாய் இருந்து பார்க்கலாம்-அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது என அனுபவத்திலும் முதிர்விலும் நான் மதிக்கும் பலரும் ஆலோசனை சொன்னபோது அதை ஏற்க எனக்குத் தோன்றவில்லை.
எதையெல்லாம் நம்பினோமோ அதையெல்லாம் இழக்க நேரிடும்போதும்- கைப்பற்றியிருந்த பிடியை நழுவவிடும்போதும் நமக்கு நேரும் அதே நிலையில் நாமிப்போது இருக்கிறோம்.
”பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவியிரண்டும் கலந்தே குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் இது செய்யுமுன்னே முடியேன்” என்ற திரௌபதியின் இடத்தில் நாமிருக்கும்போது பொறுப்பதற்கும் இழப்பதற்கும் என்ன இருக்கிறதினி மீதி? இனிப்பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாவென்றல்லவா நம் அழைப்பு இருக்கவேண்டும்?
நல்ல மாறுதலைக் கொண்டு வருவார்கள் என்றெதிர்பார்த்த தலைவர்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் எந்த மாறுதல்களும் உண்டாகவில்லை. பிரபலமாகிவிட்ட பின் பலரையும் பல விஷயங்களையும் யோசித்து பின் நமக்கென்ன? நம் காலம் முடிந்தது. பின்னால் வருபவர்கள் மாற்றுவார்கள் அல்லது காலச்சக்கரம் சுழலும் என்ற சால்ஜாப்போடு நாட்கள் நழுவிச் செல்வதை நாம் பார்த்துக் கைபிசைந்து நிற்கிறோம்.
ஏன் இந்த அவல நிலை?
இதை நிவர்த்திப்பதற்கு ஒவ்வொரு கட்டமாக இதைக் கொண்டு செல்வோம். முதலில் சிந்தனையை உறுதிப் படுத்திக் கொள்வோம். இந்த மாற்றம் சாத்தியம் என நான் நம்புகிறேன்.
இந்த நொடியே என்னையே நேரில் பார்த்துப் பழகாதவர்களும் பேசாதவர்களும் எப்படி இதைச் செய்வது? எது இலக்கு? என்றெல்லாம் ரொம்பவும் பெரிதாய்க் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
யார் எந்தத் துறையில் என்ன என்ன மாறுதல் கொண்டு வரலாம் என எண்ணுகிறார்களோ அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிரலாம். கூடிய விரைவில் ஒரு பொது வலைத்தளம் உருவாக்கி அந்தத் தளத்தில் நம் விவாதங்களைத் தொடர்வோம்.
விவாதங்களின் பொதுக் கருத்து நம்மை இணைக்கட்டும். அதன் பின் சந்திப்பதும் அடுத்த கட்டத்துக்குச் செல்வதையும் முடிவு செய்வோம். துவக்கம் எல்லாச் செயல்களையும் போலவே நிறையப் பேரிடம் சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விதைக்கும்.
தொடர்ந்து எழுதும்போதும் ஒரே திசையில் யோசித்துக் கொண்டிருக்கும் போதும் எல்லாம் சரியாகிவிடும். நல்ல நோக்கத்தை நம்புபவர்கள் இந்தப் புனிதப் பயணத்தில் இணைவார்கள்.
பொய்மையிலிருந்து வாய்மைக்கு-
இருளிலிருந்து ஒளிக்கு-
இறப்பிலிருந்து அமரத்வத்திற்கு -
எடுத்துச் செல்லட்டும் நம்மை இந்தப் பயணம்.
தொடர்ந்து எழுதுவேன்.